Monday, December 26, 2005

ட்சுனாமி நினைவுகூர்தலும் பின்நோக்கிய சில பார்வைகளும்



இன்று ஸ்காபுரோ நகரின் நகரசபை திறந்தவெளி அரங்கில் சென்றவருடம் நிகழ்ந்த ட்சுனாமியின் அகோரத்தை நினைவுகூருதல் நடைபெற்றது. மிக உக்கிரமான குளிரினூடும் (பூஜ்ஜியத்துக்கு கீழே பத்துவரைக்கு இருந்தது என நினைக்கின்றேன், குளிர்க்காற்று வேறு) நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதும், அதில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்கல்லூரி/பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடப்பட்டது.

கனடாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கனடீய மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருந்ததும், அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இராணுவத்தின் தாக்குதல்களைத் கண்டித்து தமிழ்மாணவர்களுக்காய் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



இன்னும், கனடா அரசாங்கம் ட்சுனாமிக்காய் அறிவித்த பணம் போய்ச்சேர்ந்து உருப்படியான விசயங்கள் எதுவும் ஈழத்தில் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அதையே மாணவர் ஒருவரும் பேச்சில் தெரிவித்திருந்தார். ஆக்ககுறைந்தது (அடுத்த மாதம் 23ந்திகதி வரவிருக்கும்) தேர்தலுக்கு வாக்கு கேட்க வரும் கட்சிக்காரர்களிடம் இதுகுறித்து கேள்வியைக் கேளுங்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டதை அனைவரும் கவனத்தில் கொள்ளலாம்.



தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டாமல் இருப்பதோ, அல்லது இங்குள்ள அரசியலில் எந்தப்பங்களிப்பும் செய்யாமல் இருக்காதவரை எமது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். கிட்டத்தட்ட இதைவிட இன்னும் கொடும் குளிரில் சில ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். பெப்ரவரி நான்கு எமக்கான சுதந்திர நாள் அல்ல என்று உயர்கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாள்களில் டவுன்ரவுண் ரொரண்டோவில் மிக நீண்ட ஊர்வலத்தில் நாமெல்லோரும் கத்திக் கத்தி குரல்கொடுத்தபடி நெடும் வீதிகளில் நடந்தும் எதுவும் உருப்படியாக நிகழ்ந்ததில்லை (எனக்கு அதன் நீட்சியில் மூன்றுநாள்கள் காய்ச்சல் வந்து பாடசாலைக்கு போகமுடியாதிருந்ததுதான் மிச்சம்). அதுபோல், பொங்குதமிழ் முதலாவது நிகழ்ச்சி யாழில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்தபோது, அதை நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிரிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று கனடீய அரசாங்கத்திடம் வேண்டி குளிருக்குள் ஒட்டாவாவில் இருந்த வெளிவவிவகார அமைச்சர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றோம்.



கிருஷாந்தி பாலியல் வன்புணரப்பட்ட சம்பவம் வெளியே வந்தபோது, கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்த ஒட்டாவாவில், மாணவநண்பர்கள் பேரணிக்காய் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைத் திரட்டியிருந்தார்கள். எந்த சமூகத்தின் மாணவர்களும் கனடாவின் தலைநகரில் இப்படியான ஒருவிடயத்தைச் செய்திராதபோது மிகுந்த தெம்புடனும், நம்பிக்கையுடன் அதைச் செய்திருந்தோம். குளிருக்குள் பலர் மயங்கி விழுந்தது காணாது என்று கிருஷாந்தியை அறிந்த அவரது தோழிகள் சிலரும் மேடையில் பேசும்போது உணர்ச்சிகளின் நிமிர்த்தம் மயங்கிவிழுந்ததையும் பார்த்துக்கொண்டே பாராளுமன்றத்தின் முன் குழுமியிருந்தோம். யாரோ ஒரு பெயர் தெரியாத அலுவலகரை அனுப்பி எமது மனுக்களை பெற்றுக்கொண்டபோது ஆர்ப்பாட்டங்கள் இந்த மேல்நாட்டு அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்ற உண்மை எனக்கு முதன் முதலில் விளங்கியது. எனக்குத் தெரிந்து, இந்த நிகழ்வை நடத்த பல நண்பர்கள் ஒரு செமஸ்டர் கல்வியையே தாரை வார்த்திருந்தனர். இந்நிகழ்வுக்காய் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தொலைதூரங்களில் இருந்து பயணித்து எல்லாம் மாணவ நண்பரகள் வந்திருந்தார்கள்.

அனைவரின் உழைப்பும் வீணாய்ப்போனதை, எமது குரல்கள் சப்தமின்றி அடங்கிப்போனதை, அழுத பெண்களின் கண்ணீர்த்துளிகள் பெய்தபனிக்குள் உறைந்துபோனதை, எதுவும் செய்யவியலாத இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதே அரசாஙகமும், கனடீய பத்திரிக்கைகளும், ஒரு கோடைகாலத்தில் 50ற்கும் குறைவான சிங்கள மக்கள் கலந்துகொண்டு, புலிகள் யாழ் வாசலில் நின்று ஆமிக்கு அடியடியென அடித்தபோது யாழில் இருக்கும் இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அலறியபோது, ஒட்டாவாவின் பாராளுமன்றத்தின் உள்ளேயேயும் எதிரொலித்தது. பத்திரிக்கைகள் சில முன்பக்கத்தில்கூட பெரிய செய்தியாக ஆர்ப்பாட்டச் செய்தியைப் பிரசுரித்து, தமது 'நடுநிலைமையை' எமக்குத் தெரியப்படுத்தின. அதிலிருந்து அதிகாரம் உள்ளவரின் குரல் மட்டுந்தான் அம்பலத்தில் ஏறும் என்ற உண்மை உறைக்கத்தொடங்கியது.



(இயலுமானவரை பொங்குதமிழ், தமிழர் நாள் என்று இன்னபிற மாணவர்கள் வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற்றினாலும்) என்னைப்பொறுத்தவரை, நாம் கனடீய அரசியல் பங்குபெறாதவரை, எமது வாக்குகளுக்கு வலு உண்டென்று நிரூபிக்காதவரை உருப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

அண்மையில் ஸ்காபுரோ நகரின் ஒரு எம்.பி.பியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு, பத்திரிகையில் வந்த அரசாங்க அறிவித்தலில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் மட்டுமே விபரம் வந்திருந்தது. ஆகவே அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளின் பலத்தை நிச்சயம் உணர்வார்கள் என்றபடியால் எமது இருப்பையும் தேவையும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் தெளிவாக வெளிப்படுத்தலாம்; வெளிப்படுத்தவேண்டும். கனடீய அரசால் அறிவிக்கப்பட்ட ட்சுனாமி நிதி எங்கே போனது என்ற கேள்வியுடன் வரும் தேர்தலை நாம் எதிர்நோக்குவது மிகச்சிறந்தது, அதுபோல பிற உள்ளூர் விடயங்கள் கூடவே.

மற்றும்படி ட்சுனாமியால் பாதிக்கபபட்டவர்களுக்கும், இழப்புக்களால் உள/உடல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களுக்கும் தருவதற்கு நம்பிக்கை வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பதுதான் அவலமானது. கொலை செய்யும் கலாச்சாரம், பாலன் பிறக்கும் தேவாலயத்தின் உள்ளே கூட நீண்டுவிட்டதன்பின் எதைப் பேசித்தான் என்ன பயன்?

ஒருவருக்கு கடிதம் எழுத உட்கார்ந்தபோது, யோசப் பரராஜசிங்கத்தின் கொலையை இணையத்தில் அறிந்த குழப்பத்தில், அவருக்கு இப்படி எழுதினேன்....

'இந்தக்கணத்தில் வாழ்வு என்பது, எனது அறையிலிருந்து பார்க்கையில் வெளியே வெறிசோடிப்போயிருக்கும் தெருவைப்போல வெறுமையாகவும் மிக மிக நிசப்தமாகவும் இருக்கிறது.'

அதற்கு அவர் எழுதிய பதிலைத்தான் எனக்கான குரலாக ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே விட்டுப்போகின்றேன்....

'சமூகத்தின் நிசப்தமோ, பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுக்கிறது' என்ற வரிதான் உங்களதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதே வெறுமை என்னையும் தாக்கியதுண்டு. ஆனாலும் வசந்தங்கள் வரும் நிச்சயமொருநாள்... என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய நாம்? சாளரத்தினருகே அமர்ந்து விழிவிரித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர.'

Monday, December 19, 2005

வாசிப்பு

இங்கே அழுத்தவும்

குறிப்பு: எனது மற்ற்த்தளத்தில் காலையில் பதிந்தது இன்னும் தமிழ்மணத்தால் உள்ளெடுக்கப்படவில்லை. இந்தத்தளமாவது தமிழ்மணத்திரட்டியில் இயங்குகின்றதா என்று பார்ப்பதற்காய்.

Saturday, December 10, 2005

சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள்

File0001
அற்றம் (attamm@gmail.com)

அற்றத்தின் இரண்டாவது இதழில், மாயா ஆஞ்ஜலோவின் நேர்காணல், கவிதைகள், அவரைப் பற்றிய பிரதீபாவின் கட்டுரை என்பவை சிறப்பானவை எனலாம். முக்கியமாய், பல வினாக்களை எழுப்பி சலனமடையச்செய்ய வைக்கின்ற நேர்காணல் கவனிக்கத்தது. மாயா ஆஞ்சலோவை ஒரு பக்கமாய் மட்டும் பார்க்காது அவருக்கு வைக்கப்படுகின்ற விமர்சனங்களையும் மறந்துவிடாது குறிப்புக்களாய் இந்த் இதழில் பதிவுசெய்திருந்தது நல்லவிடயம். அத்தோடு அடேல் பாலசிங்கம் எழுதிய, விடுதலை வேட்கைக்கு தான்யா எழுதிய விமர்சனமும் முக்கியமானது. அடேலை முற்றாக நிராகரிக்காமல் அடேல் எழுதிய பலவிடயங்களையும், எழுத மறந்த/மறுத்த விடயங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது அந்தக்கட்டுரை.

ஆசிரியர்களின் தலையங்கத்தில் எழுதப்பட்ட பலவிடயங்கள் தேவையற்றது போல எனக்குபடுகின்றது. எழுத்தில் முன்வைக்காத எந்த விமர்சனத்துக்கும் பதில் கூறிக்கொண்டிருத்தல் அவசியமற்றது. அதற்காய் நேரவிரயம் செய்யாமல், மேலே நகர்ந்துகொண்டிருப்பதுதான் நல்லது. மேலும் பெயர் குறிப்பிடாத ஆக்கங்களுக்கு ஆசிரிய குழுவில் இருப்பவர்கள்தான் பொறுப்பானவர்கள் என்றாலும் ஆக்கங்களுக்கு எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் நன்றாகவிருக்கும். நாளை புதிதாய் ஒருவர் ஆசிரியர் குழுவுக்கு வரும்போதோ அல்லது எவரேனும் ஒருவர் விலகிப்போகும்போதே சில சிக்கல்கள் வரக்கூடும். கூட்டாய் படைப்புக்கள் எழுதியிருந்தாலும், அனைவரின் பெயரையும் போடுவதில் கூட பெரிய பிரச்சினை இல்லையென்று நினைகின்றேன்.

kaalam
காலம்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் அங்கீகரித்துபோவதில் நமது விமர்சகப்பெருமக்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்த இதழில் மு.பொ, ஜெயமோகனின் காடினையும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியையும் ஒப்பிட்டு எழுதிய விமர்சனம் கவனிக்கத்தக்கது.

காலம் இதழின் முக்கிய பிரச்சினையே தமிழகத்தில் வருகின்ற இதழ்களின் வடிவமைப்புடன் வருவது. காலச்சுவடு, சொல்புதிது, உயிர்மை என்று அவ்வவ்போது கூட்டணிகள் மாறுகின்றபோது, நாம் இதழைப் பார்த்தே காலம் இப்போது யாரோடு வாஞ்சையுடன் கைபோட்டுகொண்டு நிற்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இருபத்தைந்தாவது இதழ் வரை வந்துவிட்ட காலம் இதுவரை தனக்கென்று தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரத்தயங்குவது ஏனோ தெரியவில்லை. மேலும், காலம் கனடாவிலிருந்து வெளிவருகின்றது என்பதை முதற்பக்கத்தில் பார்க்காவிட்டால், எவரும் அது தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்றுதான் நம்புவார்கள். ஒரு இதழ் புலம்பெயர்ந்த சூழலில் வெளியிடும் அவலம் என்னவென்று புரிந்தாலும், 'காலம்' செல்வமும் அதன் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்களும் இது குறித்து சற்று யோசிக்கலாம். இந்த இதழில் வந்த கவிதைகள் அனைத்தையும் பெண்களே எழுதியுள்ளார்கள். ஆண்களின் கவிதைகள் நீர்த்துப்போகின்றன என்ற விமர்சனம் வைக்கப்படுகின்ற காலத்தில், சலித்துப்போன கவிதை ஜாம்பவான்களின் கவிதைகளைப் போட்டு நிரப்பாமல், புதிய கவிதை வாசிப்புக்கான சாத்தியங்களை உருவாக்குவதற்கு, காலத்தை இந்தவிடயத்தில் பாராட்டலாம்.

KaiNaaddu
கைநாட்டு (karumaiyam@gmail.com)

கைநாட்டின் முதலாவது இதழ் இது. இதழிலுள்ள விடயங்களை விமர்சிக்கப்போனால் அந்த சஞ்சிகையின் பக்கங்களைவிட அதிகம் எழுதவேண்டிவரும். வெளிப்படையாகச் சொல்வதனால் அதில் எழுதப்பட்ட பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அனைவருக்கும் தாம் விரும்புவதைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கு மாற்றாய் எந்த எதிர்க்கருத்தும் எனக்கில்லை. யாராவது நீயும் அதில் எழுதிவிட்டு இப்போது விமர்சிக்கின்றாய் என்று கூறமுன்னர் எனது கவிதையொன்றும் வந்திருக்கின்றது என்பதை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன். அங்கே பேசப்பட்ட தீவிர விடயங்களுக்கு மாறாய் எனது கவிதை தனியே முழித்துக்கொண்டு, வழமைபோல தன்பாட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு நிற்கின்றது என்பதை ஒரு தேவையில்லாத உபகுறிப்பாய் எழுதிக்கொள்கின்றேன்.

parai
பறை (www.parai.org) (info@parai.com)

பறையின் மூன்றாவது இதழ் இது. பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன் போன்றவர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நீண்ட ஆக்கங்களாய் இல்லாது, சிறு கட்டுரைகள் நிரம்பவாய் இருக்கின்றன. விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் அமிழ்ந்துபோய்க்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு(நான் உட்பட) இவ்வாறான மாற்றான சஞ்சிகைகள் வருவது நல்ல விடயம். இயலுமாயின் முன்பக்கத்தை சற்று தடித்த அட்டையில் கொண்டுவர பதிப்பாசிரியர்கள் முயலலாம்.

Friday, December 09, 2005

எதையாவது எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் விரைவில் விசர் பிடித்துவிடும் போலக்கிடக்கிறது. உங்கள் வழக்கில், 'விசர்' என்றால் என்னவென்று லீனா மணிமேகலை கேட்டபோது, என்னைப்போன்றவர்கள் உங்கள் முன்னால் இருக்கும்போது, இதற்கு அர்த்தம் தேடி அகராதியைப் புரட்டத்தேவையில்லை என்று பகிடிக்காய்க் கூறினாலும், விரைவில் மனச்சிதைவுக்கு ஆளானாலும் ஆளாகிவிடுவேன் போல ஈழத்தில் நடக்கும் அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

முன்பு எல்லாம், தினமும் இரண்டோ மூன்று முறையோ ஈழத்துச் செய்திகளை இணையத்தில், பத்திரிகையில் என்று தேடித் தேடி வாசிப்பேன். பிறகு இவ்வறான செய்திகளை வாசித்து வரும் எதுவும் செய்யமுடியாத கையாலகாத நிலையையும், கோபத்தையும் பார்த்து, மெல்லச் மெல்லச் செய்திகளை வாசிப்பதை (ஒருவித தப்பித்தல் தான்) குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன்.

நேற்று தற்செயலாய்ப் பார்த்த இந்தச்செய்தி மீண்டும் மிகப்பெரும் வெறுமையை மனதுக்குள் உண்டு பண்ணியது. என்ன செய்வது என்ற இயலா நிலையில், அப்படியே வாசித்த செய்தியை எடுத்து வலைபப்பதிவில் போட்டு விட்டு படுக்க முயற்சித்தேன் (ஆங்கிலத்தில் செய்தியைப் போட்டதால் தமிழ்மணம் சேர்க்கவில்லைப்போல) . தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது என்பது ஒருபுறம் இருக்க, பழிவாங்குவது எதுவுமறியாப் பெண்கள், பச்சிளங்குழந்தை வரை போனது மிகவும் கொடுமையாக இருந்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரகள் நடக்கும் கொலைகள் எல்லாம் 'ஒட்டுண்ணிப்படைகளும்', 'தேசத்துரோகிகளும்' செய்கின்றார்கள் என்று அடித்துக்கூறுகின்றார்கள் என்றால், மற்றப்பக்கம் 'ஓமோம் பாஸிசப்புலிகள் மட்டுந்தான் இதையெல்லாம் செய்கின்றார்கள்' என்று சுலபமாய் எழுதித்தள்ளுகின்றார்கள்.

இப்போது என்னை அதிகம் பாதித்துக்கொண்டிருப்பது, மீண்டும் கோரமாய் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ள தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. கிழக்கில் அந்த மக்களில் ஒருவராய் நின்று பார்க்காவிட்டாலும், வெளிநாடுகள் மிகப்பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையிலும், ஏறகனவே இந்த விடயத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்ப்ட்ட புலிகள் அவ்வள்வு முட்டாள்தனமாய் முஸ்லிம்கள் பிரச்சினையில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் தோன்றுகின்றது. மேலும் கெளசல்யன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாய் இருந்தது, அவர் முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த பரிவுடன் இருந்ததும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் இணக்கத்துக்காய் தீவிரமாய் உழைத்ததும் என்பதும் கவனிக்கத்தக்கது. உயிர்மையில் எழுதுகின்ற இளைய அப்துல்லா கூட, கெளசல்யன் மரணத்தின்போது பல முஸ்லிம்கள் கதறி அழுததாயும், கெளசல்யன் அக்கறையுடன் முஸ்லிம் மக்களிடையே பணியாற்றியவர் என்றுதான் குறிப்பிடுகின்றார். இதனால் முந்தி புலிகள் முஸ்லிமகளை கொலைச் செய்யவில்லை என்பதோ, பிற விடயங்களை நியாயப்படுத்துவதோ, ஜிகாத் போன்ற முஸ்லிம் வன்முறைக் குழுக்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையோ மறைப்பதோ என்று அர்த்தம் இல்லை.

கவனமாகப் பார்த்தால், ராஸிக் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளுக்கு காரணமாயிருந்தவரும், முஸ்லிம் பெயரைக் கொண்டு (பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை) இருந்து அதிரடிப் படைகள் செய்த தமிழ்மக்கள் படுகொலைக்கு காரணமாயிருந்தவரோ, உண்மையான முஸ்லிமகள் அல்ல, 'ராசிக்' ஒரு தமிழராகவும், அந்த அதிரடிப்படை அதிகாரி ஒரு சிங்கள இனத்தவராகவும் இருந்தவர்கள் என்பதன் பின்னாலுள்ள மூன்றாம் கைகளில் பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் இரண்டு பேரும் ஏன் முஸ்லிம் பெயர்களைச் சூடி இந்தக் கொலைகளை செய்திருந்தார்கள் என்றால், கிழக்கு மாகாணத்திலிருக்கும் முஸ்லிம்கள்தான் கொலைகளைச் செய்கின்றார்கள் என்ற பிரமையை வன்மத்தை தமிழ் மக்களிடையே ஆழமாய்ப் பதிக்க முயல்வது தான். அதைத்தான் இன்றைய பொழுதிலும் மூன்றாம் கைகள் திறம்பட நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள்தான் ஒற்றைப்படையாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால், 'சனநாயகம்' 'நடுநிலைமை' பேசும் எதிர்த்தரப்புக்கு இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் போல, ஈழத்தில் விழும் கொலைகள் எல்லாவற்றையும் செய்பவர்கள் 'பாசிசப் புலிகள்' மற்றும் புலிகள் தவிர வேறொருவருமில்லை என்பதே அவர்களின் 'உறுதியான' வாதம்.

நேற்றுத்தான் இன்னுமொரு செய்தியை வாசித்தேன். யாழில் ஒரு பெண், கசிப்பு விற்றதற்கும், விலை மாதராய் இருந்தற்கும் காரணமாய் சுட்டுக் கொல்லபட்டார் என்று. இப்படியானவர்களை மண்டையில் போடப்போகின்றோம் என்றால், புலம்பெயர் தேசத்தில் எத்தனை ஆண்களை முதலில் மண்டையில் போடவேண்டும் என்று யோசித்துப்பார்க்கின்றேன். ஆனால் இந்த ஆண்கள்தான், 'ஓமோம் அவள் வேசிதான், கொடுத்த தண்டணை சரிதான்' என்று நாக்கு கூசாமல் பேசுவதில் முன்னணியில் நிற்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒரு அமைதியான பொழுது எப்போதாவது ஈழத்தில் விடிகின்றபோது, இத்தனை கொலைகளுக்கும் மேலேதான், வீடு கட்டி, நம் துணைகளைப் புணர்ந்து, குழந்தைகள் பெறப்போகின்றோம் என்றால், அந்தக் குழந்தைகள் எப்படி பிறக்கப்போகின்றார்கள் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

குறிப்பு: இப்படி இவற்றை எல்லாம் எழுதுவது கூட, அர்த்தம் இல்லை என்பது புரிகிறது. ஆனால் இவ்வாறான செய்திகளை வாசிக்கும்போது இதைக்கூட எழுதாமல் இருந்தால், ஆரம்பத்தில் கூறியது மாதிரி விரைவில் விசர் பிடித்துவிடுமோ என்ற அச்சமே காரணமே தவிர, வேறொன்றுமில்லை.

Thursday, December 08, 2005

கொலைகள் விளையும் தேசம்

Revenge killing by suspected paramilitaries
[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan, Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a renegade paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE in Amparai, Tuesday. The sisters were shot as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.

Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted raids on Muslim and Tamil villages.

Usha Yogarajah, the two-years-old child, admitted in Batticaloa Hospital. She lost her mother Wednesday. Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

இவை குறித்தும் யாராவது 'சனநாயகவாதிகள்', 'நடுநிலைவாதிகள்' எழுதுங்களய்யா!