Friday, February 17, 2006

பெரியார்!

பெரியார், '‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.

ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. 'நிறப்பிரிகை' குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது 'புதிய கோடாங்கி'- 'கவிதாசரண்' என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).

இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.

கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.

நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்

கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.

(நன்றி - உன்னதம்)

My special thankx to Keetru

Tuesday, February 14, 2006

திரைக்காவியம்

காதற்கப்பல்

நடிகர்கள்:
சயந்தன் (வேலு)
வசந்தன் (முத்துபாண்டி)
அவுஸ்திரேலியா அஸின் (தனலட்சுமி)

பாட்டி வடை சுட்ட கதை, இந்தப்பழம் புளிக்கும் கதைகள் போல இது அவுஸ்திரேலியா அஸின் வசந்தனுக்கும் சயந்தனுக்கும் அல்வா கொடுத்து கப்பலைக் கவிழ்த்த கதை.



இயக்கமும் இசையும் நான் எனக்கூற விரும்பினாலும் அவையடக்கம் காரணமாய் வேறு சில நண்பர்களுக்கு அந்தப்புகழைத் தாரை வார்க்கின்றேன்.

காதலர் தினமன்று இலவு காத்த கிளியாகிப்போன அனைத்துக் காளையர்க்கும் இந்தப் பனம்பழம், சமர்ப்பணம்.

திரைக்காப்பியம் சற்று தெளிவில்லாது இருப்பதற்குக் காரணம், இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்து கண்ணீர் வடித்தவர்களால் காப்பி சற்றுக் கலங்கியதே காரணமாகும்

Thursday, February 09, 2006

பலதும் பத்தும்

திருமாவளவன், அண்மையில் ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையைக் கேட்டபோது இரண்டு விடயங்கள் முக்கியமானதாய்ப்பட்டது.
(எனது வார்த்தைகளில்/அறிதலில்)
(1) சாதியத்தை ஒழிக்க முயலாமல் தமிழ்ச் தேசியம் பேசுகின்றவர்கள் அனைவரும் போலிகள். சாதியம் ஒழிக்கப்படுகின்றபோது மட்டுமே தமிழ்தேசியம் உண்மையில் எழுச்சி பெறும்.
(2) பெரியார், ஒரு சேரியில் பிறந்தவராய் இருந்திருந்தால், பெரியாரின் இருப்பு இத்தனைக்கும் அங்கீகரிக்கப்பட்டிருக்குமா, அவரது வாதங்கள் அம்பலத்தில் ஏறியிருக்குமா என்பதை யோசித்துப்பார்க்கலாம்.


தேசியம் ஒரு கற்பிதம் என்று முற்றுமுழுதாக ஒதுக்கமுடியாவிட்டாலும், அது குறித்த பெரிய நம்பிக்கைகள் எனக்கு இல்லை. மனிதனாக அனைத்து எல்லைகளையும் கடக்க விரும்புகின்றவனாக இருந்தாலும், எதிரே இருப்பவன் நான் இன்ன இனம், இன்ன மொழி என்று பேசி, என்னையும் ஒரு இன அடையாளத்துடன், மொழியுடன் தொடர்புபடுத்தி தாழ்வாக உரையாடும்போது மட்டும், தேசியம் என்ற ஒரு அடையாளம் எனக்குத்தேவைப்படுகின்றது. அதாவது உனது இனத்துக்கு, உனது மொழிக்கு, எந்த விததிலும் தாழ்ந்ததோ உயர்ந்தோ அல்ல, எனது மொழியும் எனது இனமும் என்பதற்கு மட்டும் எனக்கு அடையாளங்கள் தேவைப்படுகின்றது. அவ்வளவே..... மற்றும்படி சக மனிதனாய், இனம், மொழி என்பவற்றைக் கடந்து பேசுகின்ற எவருடனும் அடையாளங்களுக்கான தேவைகள் இருப்பதில்லை. அப்படி உணரவேண்டிய நிலைமைகள் வருவதுமில்லை.

திருமாவளவன் கூறுகின்ற -சாதி ஒழிப்பில்லாது தேசியம் இல்லை- என்பதை ஈழத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசியப் 'பெருமை' பேசிக்கொண்டிருப்பவர்களும் கொஞ்சம் கவனதில் கொள்ளலாம். புலம்பெயர்ந்த சூழலில், தங்களின் கொடூர சாதிய முகங்களை தமிழ் தேசியத்துக்குள் புதைத்துக்கொண்டு திரிகின்றவர்களைக் காண்கின்றபோது, இவர்கள் நாளை நமது சமூகத்துக்கான சட்டங்களையும் அதிகாரங்களையும் நிறைவேற்றுபவர்களாக மாறினால் ஈழ/புலம்பெயர் தமிழ்ச் சூழல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அவலமாக இருக்கிறது
...........
இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரையும் அம்பேத்காரையும் எதிர் எதிர் முனையில் நிறுத்தி விவாதப்புள்ளிகளை உருவாக்குவது அபாயகரமானது. நிச்சயம் பெரியாரும்,அம்பேத்காரும் ஒருவரல்ல. ஆனால் அவர்கள் எதிரிகளுமல்ல (We are not same, but we are for each other என்று உறவுகளுக்கிடையில் கூறப்படும் சொற்றொடர்களை இவர்களின் கருத்துக்களுடனும் பொருத்திப்பார்க்கலாம்). ஒருவர் நிரப்பாத இடைவெளியை மற்றவரைக் கொண்டு நிரப்புவதே இன்றைய சூழலில் அவசியமே தவிர வெற்றிடங்களைத் தொடர்ந்து வெற்றிடங்களாக விடுவது, எதிர்ச்சக்திகளுக்கு ஆதாரமாய்ப் போய்விடக்கூடும். வள்ளலாரை, நாராயணகுருவை, விவேகானந்தரை, இன்னபிற சித்தர்களை, சூஃபிகளை எப்படி மதங்கள் சுவீகரித்துக்கொண்டனவோ, அப்படியான ஒரு எதிர் நிலைக்குள் இவர்களைத் தள்ளிவிடுவது தவிர்க்கப்படவேண்டும். காந்தியைக் கூட, இன்றையபொழுதில் தலித்துக்கள், பெரியாரியவாதிகள், மார்க்சிச்வாதிகள் விமர்சனங்களுடன் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற குரல்கள் தமிழ்ச் சூழலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பெரியாரின் இந்தப்பேச்சை வாசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் என்று பெரியார் கூறுவதை பார்ப்பனீயம் (ஆணாதிக்கம் மாதிரி) என்றே எனது வாசிப்பில் எடுத்துக்கொள்கின்றேன். பார்ப்பனீயச் சிந்தனைகளை, ஆதிக்க சக்திகளாக வளர்ந்த பிற சாதிகளும் சுவீகரித்துக் கொண்டு தங்களின் கீழ்மட்டத்தில் உள்ள சாதிகளை ஒடுக்கியபடிதானே இருக்கின்றன (ஈழத்தில் வெள்ளாளத்திமிரும் அடுத்த நிலைகளில் வருகின்ற சாதிகளும், பஞ்சமரை ஒடுக்கச் செய்வதைப்போல). ஆணிவேர் பார்ப்பனியமாய் இருந்தாலும், ஆதிக்கசாதிகளாக வளர்ந்த மற்றச்சாதிகளின் சாதியச்சிந்தனைக் கிளைகளும் ஒட்ட நறுக்கப்படவேண்டும் என்ற புரிதல் அனேகருக்கு இருக்கக்கூடும்.
.......
இடியப்பம் எப்படிச் செய்வது என்ற சுவாரசியமான செயல்முறையை வாசித்தபோது, இடியப்பத்தைப் போல சிக்கலும் நுட்பமும் நிறைந்த கருத்துச் சொல்லும் ஒருவரைப் பற்றி எழுதப்பட்டதையும் வாசிக்க நேர்ந்தது.
அது இங்கே

‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா? பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.

ஈழம் குறித்து இவர் கருத்தென்ன? அதில் இவர் பங்கென்ன? மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ?


இணைப்புகளுக்கு நன்றி: www.keetru.com

Monday, January 30, 2006

இயல் விருது - 2005

ஒரு விருதும், என் விசனமும்

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் (உயிர்மையில் என்று நினைக்கின்றேன்) கனடாவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட சிறந்ததுதான்.

Friday, January 27, 2006

ஏலம் போகும் அரசியல்

< சிரிப்பு வருகிது சிரிப்பு வருகிது நினைக்க நினைக்க சிரிப்பு வருகிது>

பாலஸ்தீனியத்தில் தேர்தல் நடந்து காமாஸ்(Hamas) பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ளது. யாசீர் அரபாத் கட்டி வளர்த்த Fatah கட்சி 43 ஆசனங்களைப் பெற, காமாஸ் 132 ஆசனங்களில் 76ஐப் பெற்று பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. வழமைபோல ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ரொனி ப்ளேயர், கனடாவின் வருங்கால பிரதமர் Stephen Harper வரை அனைவரும் மூக்கால் அழுதபடி இருக்கின்றார்கள். சனநாயகத் தேர்தல் நடந்தாலும் உள்ளே புகுந்து தமது பொம்மை அரசை நிறுவி குள்ளநரிச் சிரிப்பைச் சிந்துபவர்களுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கடினமாய்த்தான் இருக்கும். இந்த அரசியல் கனவான்கள் தங்கள் பேச்சினிடையில் அதிகம் பாவித்த சொல் 'பயங்கரவாதிகள்' என்பதுதான். சரி, சரி காமாஸும் அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களும் பயங்கரவாதிகள் என்று வைத்துக்கொண்டாலும், அப்படியாயின் இஸ்ரேலிய அரசாங்கத்தை என்னவென்று அழைப்பதாம்? நேற்று பிபிசியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, காமாஸ் அங்கே குண்டு வைத்தார்கள், இங்கே குண்டு வைத்தார்கள் என்று பிபிசி நிருபரும் மிகக் கஷ்டப்பட்டு தனது நடுநிலையை நிறுவிக்கொண்டிருந்தார் (பொதுமக்களை பலிக்கடாவாக்கும் தாக்குதல்களுடன் எவருக்குத்தான் உடன்பாடிருக்கும்?). ஆனால் ஒவ்வொரு இஸ்ரேலிய தேர்தல்களின்போது இஸ்ரேலிய அரசாங்கம் அங்கே குண்டுபோட்டார்கள், இந்த அகதிமுகாமை முற்றாக நிர்மூலமாக்கினார்கள் என்று ஏன் செய்திகளில் காட்டுவதில்லை என்பது நமக்கு ஞாபகத்துக்கு வருவதில்லை. வரவும் கூடாது.

கனடாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், கொன்சர்வேர்டிக் கட்சியின் உபதலைவர் Peter Mckay தாங்கள் அரசமைத்தால், விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்யப்போவதாக கூறியிருக்கின்றார் என்று ஆனந்தக் கூத்தாடும் கட்டுரை ஒன்றை வலைப்பதிவில் வாசித்திருந்தேன். சரி புலிகளைத் தடை செய்கின்றார்களோ அல்லது புலிகள் கனடாவுக்கு வந்து ஸொப்பிங் செய்கின்றார்களோ அந்த விடயத்தை இப்போதைக்கு விடுவோம் (எங்களுக்கு மட்டுமா ஷொப்பிங் செய்வதற்கும் கேர்ல்ஸை சைட் அடிப்பதற்கும் ஏகபோக உரிமை இருக்கா என்ன?) அந்தக் கட்டுரையைப் பூதக்கண்ணாடிப் போட்டு பார்த்தாலும் இலங்கை இராணுவம் செய்த 'நல்ல விடயங்கள்' ஒன்றையும் பெரிதாகக் காணவில்லை.

ஆனால் நமது மூத்த தோழர் ஷோபாசக்தி என்ன சொல்லியிருக்கின்றார்? 'நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன் என்றால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்' என்றல்லவா அவர் உறுதிமொழி எடுத்திருந்தார் (ஆனால் அவருக்கும் இந்தியா ரூடே போன்றவற்றிற்கு கருத்து/நேர்காணல் கூறும்போது, புலிகளை 100% எதிர்க்கின்றேன், இலங்கை அரசாங்கத்தை 0% அமுக்கி வாசிக்கின்றேன் என்றுதான் போர்மிலாவை மாற்றிப்போட்டு அசத்துகின்றார் என்பது வேறுவிடயம்). அப்படி எனில் இலங்கை அரசாங்கத்தை 100% வீதம் தடை செய்தால்தானே, புலிகளை ஆகக்குறைந்து 50% வீதமாவது கனடாவில் தடை செய்ய முடியும் என்றுதானே இந்த அரசியல் சூத்திரம் நிறுவுகின்றது.

என்னவோ போங்கள்? நமது கவிஞர்கள், கதைஞர்கள், நடுநிலைமைவாதிகள் 'மற்ற விடயங்களில்'தான் வீக் என்று இதுவரை கேள்விப்பட்டனான். இப்போது கணக்கிலும் வீக் என்பதும் புரிகிறது. சிலவேளை கணக்கில் புலி என்றால் பிறகு 'புலி முத்திரை' குத்திவிடுவார்களோ என்று பயந்துதான் இப்படி நடிக்கின்றார்களோ தெரியாது.

Monday, January 23, 2006

கனடா தேர்தல் (2006) முடிவுகள்

நினைத்ததுமாதிரி, கருத்துக்கணிப்புக்களை புரட்டிப்போடாது, கொன்சர்வேடியினர் வென்றிருக்கின்றனர். எனினும், பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாது, சிறுபான்மை அரசாக கொன்சர்வேடியினர் ஆட்சியமைப்பது ஆறுதலாக இருக்கிறது. இல்லாவிட்டால் தாங்கள் நினைத்ததுமாதிரி, எல்லா வலதுசாரி கொள்கைகளை அனைவருக்குள்ளும் திணித்திருப்பார்கள் (samesex marriage, abortion போன்றவற்றிற்கு எப்படியெனினும் பாராளுமன்றத்துக்கு billsகொண்டுவரத்தான் முயல்வார்கள்)

கொன்சர்வேர்டி - 124
லிபரல் - 104
ப்ளாக் க்யூபெக்- 50
என்.டி.பி- 29
சுயேட்சை- 01

(ஒரு தொகுதி முடிவு, சில தொழில்நுட்பக் காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை)

நான் இருக்கும் தொகுதியில் லிபரல் கட்சியில் போட்டியிட்டவர் வென்றுள்ளார். கொன்சர்வேட்டிக்கட்சியில் தேர்தல் கேட்ட, தமிழர் இரண்டாவதாய் வந்துள்ளார்.

Thursday, January 19, 2006

Election in Canada - 2006

கனடாத் தேர்தலும் சில (தனிப்பட்ட) எண்ணங்களும்

அனேகமாய் கொன்சவேர்ட்டிக் கட்சி இந்தமுறை வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. ஈழம், இந்தியா போன்றல்லாது, இங்கு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களை முற்றாக புரட்டிப் போடுகின்றவிதமாய் வேறுவிதமான் முடிவுகள் தேர்தல் காலத்தில் கனடாவில் (எனக்குத் தெரிந்தளவில்) வரவில்லையாதலால், ரொயினரை(Tories) இருகரம் கூப்பி வரவேற்கவேண்டியதுதான். எனினும் கொன்சர்வேடியின் சில கொள்கைகள்தான் பயமுறுத்துகின்றன. அந்தக்கட்சியில் இயல்பாய் வெளிப்படுகின்ற இனத்துவேசத்தைவிட, ஈராக்கிற்கு கனடீயப்படைகளை அனுப்பவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை, ஒர்பால் திருமண முறையை எதிர்த்தமை, இப்போது Space Missile Projectற்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகின்றோம் என்றது (ஆட்சியில் இருக்கும் லிபரல் பல்வேறு தடைகளுக்குமிடையில் இந்த ப்ரொஜக்டை ஏற்காது இருப்பதும், இதன் நிமிர்த்தத்தில் ஏற்பட்ட சச்சரவில் அமெரிக்கா வெளிவிவகாரச் செயலாளர் Condoleezza Rice கனடாவிற்கான பயணம் இடைநிறுத்தப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை), ஆயிரக்கணக்கில் படைகளைச் சேர்ந்து இராணுவ இயந்திரத்திரத்தை வலுவாக்குவதாய் பிரகடனப்படுத்துவது..... இப்படி கொன்சர்வேடியினர் பலவிதங்களில் பயமுறுத்துகின்றார்கள்.

ஆக இவர்கள் இன்னொரு அமெரிக்காவாய் கனடாவை ஆக்கப்போகின்றார்களோ என்ற அச்சமும், Stepen Harper, ஜோர்ஜ் புஷ் போல இன்னொரு சனாதனவாதியாக இலகுவில் ஆகிவிடவும்கூடிய அடையாளங்கள் துலங்குகின்றன. கொன்சர்வேடிக் கட்சியினரைத் தொடர்ந்து அவதானிக்கும் ஒருவருக்கு, இந்தக்கட்சி கனடாவுக்குரிய தனித்துவங்களை இழக்கச்செய்து, கனடாவை அமெரிக்காவின் அனைத்துக்கொள்கைகளுடனும் கேள்விகள் இல்லாது இணைத்துக்கொள்ள விரும்புகின்ற கட்சி என்பதை இலகுவாய் புரிந்துகொள்ளுவார்கள்.

7% GST வரியை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லாமற்செய்வோம் என்று உற்சாக உறுதிமொழியை கொன்சவேடியினர் அளித்தாலும், பட்ஜெட்டில் இதை நிவர்த்தி செய்ய, Helath Care, Education போன்றவற்றில்தான் கையை வைக்கப்போகின்றார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தொடர்ந்து பன்னிரண்டு வருடமாய் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியினரில் மக்கள் நம்பிக்கை இழக்க, sponsorship scandal, மற்றும் பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படமுன்னர் வெளியே இரகசியமாய்க் கசிந்தமை போன்றவை முக்கிய காரணங்களாகும். தொலைக்காட்சி விவாதங்களில் தமது கட்சியின் கொள்கைகளையும் தம்மையும் நிரூபிக்கவேண்டிய லிபரல் கட்சியினர் அதைத் தவறவிட்டமை லிபரலின் வாக்குகள் கணிசமாய் சரிந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம். விவாதங்களின்போது கொன்சர்வேட்டிக் கட்சித் தலைவர் Stepen Harper, லிபரல் கட்சித் தலைவர் போல் மார்ட்டினைப் போல கோபமும் சலிப்பும் காட்டாது, சிரித்த முகத்துடன் எல்லாக் கேள்விகளை எதிர்கொண்டவிதமும், NDP கட்சியினரின் லிபரல் மீதான கடுமையான விமர்சனமும் லிபரலுக்கு பிரதிகூலங்களாக அமைந்துவிட்டன.

கன்டாவிலுள்ள தமிழ்மக்கள் பெரும்பான்மையாக லிபரல் கட்சியினருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். என்டிபி கட்சியினருக்கு வாக்களிக்க விரும்பியிருந்தாலும், கொன்சர்வேடிக் கட்சி வென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் லிபரல் கட்சியினருக்கு வாக்களித்து இருக்கலாம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, பொதுவாய் இங்குள்ள பல சிறுபான்மை சமூகங்கள் இப்படியான நிலையில்தான் லிபரலுக்கு வாக்களிக்கின்றனர் எனத்தான் ஆய்வுகளும் கூறுகின்றன். இறுதியாய் நடந்த மூன்று தேர்தலிகளிலும், ரொரண்டோ பெரும்பாகத்தை உள்ளக்கிய ஒன்ராறியோ மாகாணத்தில் கொன்சவேடியினர் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்தமுறை சிறுபான்மையின சமூகங்களும் லிபரல் கட்சியினரைக் கைவிட்டதுதான் மிகவும் பரிதாபம். என்டிபினர், அடித்தள, நடுத்தர, சிறுபான்மையின மக்கள் மீது கொண்ட அக்கறையுடன், ஈழத்தில் சமாதானம் நிலவவேண்டும் என்பதற்காய் ஏனைய கட்சிகளை போலல்லாது தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவ்ர்கள். பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளில் என்டிபி கட்சித் தலைவர் பங்குபற்றி உரையாற்றியவர் என்பதைவிட, தொடர்ந்து ஈழமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் போன்றவற்றில் ஏனைய கட்சிகள் பங்குபெறத் தயக்கம் காட்டும்போது, கலந்து கொண்டவர்கள் என்டிபியினர் என்பது கவனதில் கொள்ளப்படக்கூடியது. Child Care, Helath Care, Education, Senior Care போன்றவற்றிற்கு, முன்வைக்கும் என்டிபியின் தேர்தல் வாக்குறுதிகள் அடித்தள, நடுத்தர மக்கள் வாழ்வின் சுட்டெண்பண்பை அதிகரிக்கச் செய்வன.

இந்தத் தேர்தலில் முதன்முதலாய் தமிழர்களின் பங்களிப்பும் இருக்கின்றது என்பது மகிழ்ச்சிதரக்கூடியது. நான் வசிக்கின்ற தொகுதியில் போட்டியிடுபவர்களில் ஒருவரில் தமிழரும் இருக்கின்றார் (தமிழில் உரையாற்றத்தயங்குபவர், ஆங்கிலத்தில் தமிழ்ப் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்குபவர், வாக்குக் கேட்கும்போது 'நான் தமிழ்ன் எனக்கு வாக்குப் போடுங்கள்' என்பது ஒருபுறம் உதைப்பது வேறுவிடயம்). ஏற்கனவே கூறியதுமாதிரி, கொன்சர்வேடிக்கட்சியின் கொள்கைகள் பலதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழர் என்ற அடையாளம் பல சமயங்களில் தேவை என்றாலும், தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்கின்றார் என்ற காரணத்துக்காய் கண்ணை மூடிக்கொண்டு அவருக்கு வாக்களிக்கமுடியாது. மேலும் தமிழ்ச் சமுகத்தில் அவரின் பங்களிப்பு என்னவென்ற வினாவும் இருக்கின்றது (ட்சுனாமியில் தன் பங்கு இருப்பதாய் அந்த வேட்பாளர் கூறினாலும், ட்சுனாமி போன்ற பெரும் அழிவில் அனைவரின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பெரிதாக எடுக்கமுடியவில்லை.)

It's time to change என்று கனடீயர்களுக்கு விளங்கினாலும், அந்த மாற்றம் கனடாவின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நம்பிக்கை தரும், என்டிபியினரை நோக்கி ஆதரவு அலையாக அடிக்காது கொன்சர்வேடியினரை நோக்கி வீசுவதுதான் ஆபத்தானதும், அவலமானதும் ஆகும்.

(கனடாப் பாராளுமன்றத் தேர்தல் வரும் திங்கட்கிழமை (சனவரி 23) நடைபெறவுள்ளது. இந்த வார வைகறையில் வெளிவந்தது, சில திருத்தங்களுடன் இங்கே)

Thursday, January 05, 2006

நான் போனபோது....(எமினெம்)

நான் கேட்கின்ற ராப் பாடல்களில் பாடல்வரிகளால் என்னை அதிகம் கவர்ந்துகொண்டிருப்பவர்கள், Eminemமும், Kanye Westம். ஒவ்வொரு பாடல்களிலும் கதைசொல்லும் முறைமை அவர்களின் அதிக பாடல்களில் இருக்கும், அதுபோல் எள்ளலும்கூடத்தான். எமினெமின் பாடல்கள் குறித்தும் இன்னபிற அவரது விடயங்கள் குறித்தும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப் பாடலை(கீழே பார்க்க) மொழிபெயர்க்கும் ஆசை துளிர்த்தது. அண்மையில் வெளிவந்த எமினெமின், Curtain Calls - The Hits என்ற இசைத்தட்டை வெளிவந்த அடுத்தநாளே வாங்குவதற்கு, இந்தப்பாடல் மட்டுமே முக்கிய காரணமாயிருந்தது. மொழிபெயர்த்து, ஆறப்போட்டு, திருத்தங்கள் செய்தும், இன்னும் இதில் திருப்தி வரவில்லை. இனியும் இதில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவுக்கு வந்தபின்னே இங்கே பதிவிலிடுக்கின்றேன் :-(. நண்பர்கள் அனைவரின் திருத்தங்களும், குட்டுக்களும் வர்வேற்கப்படுகின்றன.

நான் போனபோது....

ஓம்....
இது எனது வாழ்க்கை
நான் நினைக்கின்றேன், எனது சொந்த வார்த்தைகள்

எப்போதாவது நீங்கள் ஆழமாய் நேசித்தவருக்கு உங்கள் கரங்களை நீட்டியிருக்கின்றீர்களா?
பாவனைகளாய் அல்ல, இல்லை.
உண்மையாகவே கரத்தைக்கொடுத்தீர்களா?

உங்கள் இதயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று தெரியும்போது,
உங்களுக்குத் தெரியும்
நீங்கள் அவர்களின் காவலர் என்றும்
அவர்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் அழிப்பீர்கள் என்றும்.

ஆனால் என்ன நடக்கும்?
வினை உங்களுக்கெதிராய்த் திரும்பி கடித்துக் குதறும்போதும்,
எதற்காய் எழுந்து நின்றீர்களோ அவையே உங்களை அவமானப்படுத்தும்போதும்.
என்ன நடக்கும்,
நீங்களே (அவர்களின்) வேதனைகளின் மூலமாய் மாறும்போது...

'அப்பா, (இங்கே) பாருங்கள், நான் என்ன செய்தேன் என்று.
அப்பா விமானத்தைப் பிடிக்கப் போகவேண்டும்
'அப்பா, அம்மா எங்கே? என்னால் கண்டுபிடிக்கமுடியாதுள்ளது, எங்கே அவர்?'
எனக்குத் தெரியாது, போய் விளையாடுங்கள் கெயிலி.
குழந்தாய், அப்பா பிஸி.
அப்பா இந்தப்பாடலை எழுதிக்கொண்டிருகின்றார், பாடல் தன்பாட்டில் தன்னை எழுதிக்கொள்ளாது.
நான் ஒருமுறை உங்களை ஆட்டிவிடுகின்றேன், பிறகு நீங்கள் உங்கள்பாட்டில் ஊஞ்சல் ஆடவேண்டும்

பிறகு அதிலிருந்து மீண்டு, எனது பாடலில் கூறுகின்றேன்
அவளை(கெயிலியை) நேசிப்பதாய்,
கெயிலியைச் சிதைத்த அவரின் அம்மாவின் கரங்களைப் பற்றியபடி.

இது ஸிலிம் ஷேடி, ஓம் குழந்தாய், ஸிலிம் ஷேடியின் பைத்தியம்
ஷேடி என்னை உருவாக்கினார், ஆனால் இன்றிரவு ஷேடி பாடப்போகின்றார்

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


நான் இந்தக்கனவை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றேன்
நான் கெயிலியை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கின்றேன்
அவள் அலறுகிறாள், அவள் நான் பாடுவதை விரும்புவதில்லை.
'நீங்கள் அம்மாவை அழவைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்? ஏன் அம்மா அழுகின்றார்?'
குழந்தாய் அப்பா இனி உங்களைவிட்டுப்போகமாட்டார். 'அப்பா நீங்கள் பொய் கூறகின்றீர்கள்'
'நீங்கள் எப்போதும் இதையே சொல்லுவியள்; போன தடவையும் இதைத்தான் சொன்னனியள்'
'ஆனால் எங்களை விலத்திப்போகாதீர்கள்; அப்பா நீங்கள் எனக்குரியவர்'.
கடதாசிப் பெட்டிகளை முன்வாசலில் அடுக்கித் தடுக்கிறாள் அவள்
'அப்பா ப்ஸீஸ், போகவேண்டாம். இல்லை, போவதை நிறுத்துங்கள்.'

தனது பொக்கெட்டிலிருந்து சிறிய நெக்லஸ் லொக்கரை எடுக்கிறாள்
இதில் (எனது)படம் உள்ளது, 'இது உங்களைப் பாதுகாக்கும். உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்!'

நான் நிமிர்ந்து பார்க்கின்றேன்
கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்க்கின்றேன்
இந்தச் சவச்சுவர்கள் பேசிக்கொண்டுதானிருக்கின்றன. எனெனில் என்னால் அவை பேசுவதைக் கேட்கமுடியும்.
சுவர்கள் கூறுகின்றன, நீ சரியாகச் செய்வதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் மட்டுமே உள்ளது, அது இன்றைய இரவு.
கால தாமதமாவதற்குள், இப்போது வெளியே போய் அவர்களுக்கு உனது நேசத்தைக் காட்டு.
நான் எனது படுக்கையிலிருந்து வெளியே நடக்க
அது ஒரு மேடையாக மாறுகிறது; 'அவர்கள்' போய்விட்டார்கள்.
வெளிச்சவிளக்குகள் ஒளிர்கின்றன; நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


அறுபதினாயிரம் மக்கள், எல்லோரும் தங்கள் இருக்கையிலிருந்து எழும்பிக் குதித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
திரை மூடுகின்றது, அவர்கள் எனது பாதங்களில் ரோசாப்பூக்களை எறிகின்றார்கள்.
நான் அவர்களை வணங்கி, வந்தற்காய் நன்றி கூறுகின்றேன்
அவர்கள் பெருங்குரலில் அலறுகின்றார்கள், நான் இறுதியாய் ஒரு பார்வையைச் சனத்துக்குள் எறிகின்றேன்.
கீழே பார்க்கின்றேன். நான் பார்ப்பதை என்னால் நம்ப்முடியவில்லை.

'அப்பா, இது நான். அம்மாவுக்கு உதவுங்கள். அவரது கரங்களில் இரத்தம் பெருகுகின்றது.'
ஆனால், குழ்ந்தாய் நாங்கள் ஸ்வீடனில் இருக்கின்றோம்; எப்படி ஸ்வீடன் வந்தீர்கள்?
நான் உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன் அப்பா; நீங்கள் கூறினீர்கள், எங்களை விட்டு விலகிப்போக மாட்டீர்கள் என்று.
நீங்கள் பொய் சொன்னீர்கள் அப்பா; இப்போது அம்மாவைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்'
நான் உங்களுக்காய் இந்த நாணயத்தை வாங்கிவந்தேன்.
அது சொல்கிறது; 'உலகத்திலேயே சிறந்த அப்பா நீங்கள்தான் என்று'
அதை மட்டுமே நான் விரும்பியது,உங்களுக்கு இந்த நாணயத்தை நான் கொடுக்க விரும்பினேன்.
இப்போது அனைத்தும் விளங்குகிறது. நல்லது. நானும் அம்மாவும் (உங்களை விட்டுப்) போகின்றோம்.
குழ்ந்தாய் சற்றுப் பொறு. 'காலம் கடந்துவிட்டது அப்பா, நீங்களே உங்கள் முடிவைத் தேர்வு செய்தீர்கள். '
இப்போது வெளியே போய் அவர்களுக்குக் காட்டுங்கள், எங்களை விட அவர்களை அதிகம் நேசிக்கின்றீர்கள் என்று.
அதுதான் அவர்களுக்கு வேண்டியது. அவர்களுக்குத் தேவை மார்ஷல்.
அவர்கள் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள் .

இது பெரிய அதிசயமில்லை, என்னால் இனி தூங்கமுடியாது, இன்னொரு குளிசையை எடுக்கவேண்டியதுதான்.
ஓம். நீ நிச்சயம் இப்படித்தான் இருப்பாய். நீ ராப் பாடுவாய். நிஜமான வார்த்தை.

எனக்கு கைதட்டல்கள் கேட்கிறது. ஆனாலதைப் பார்க்கமுடியாதிருக்கிறது.
எப்படி இது சாத்தியம்?? திரை என்னில் விழுந்துகொண்டிருக்கின்றது.
நான் (இயல்புக்கு) திரும்புகின்றேன். நிலத்தில் துவக்கொன்றைக் காண்கின்றேன், லோட் பண்ணுகின்றேன்
எனது மூளையில் அதை குறிவைத்து கத்துகின்றேன்; 'ஷேடி நீ சா', பிறகு வெடிக்க வைக்கின்றேன்.

வானம் கருமையாகிறது, எனது வாழ்வு ஒளிர்கிறது.
நான் செல்லவெண்டிய விமானம் விபத்தில் சிக்கி எரிகிறது, சாம்பலாகும்வரை.
(இது நிகழ்ந்து) நான் விழிக்கையில், அலாரம் அலறுகிறது, பறவைகள் பாடுகின்றன.
இது ஒரு இலைதுளிர் காலம். கெயிலி ஊஞ்சல் ஆடுகின்றாள்.
நான் கிம்மிடம் நேரே நடந்து சென்று முத்தமிட்டு அவளை மிஸ் பண்ணினதாக கூறுகின்றேன்.
கெயிலி புன்னகைத்து தனது தங்கையை நோக்கி கண்களைச் சிமிட்டுக்கிறாள்.
Almost as if to say.....

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


மொழிபெயர்த்த மூலப்பாடல்

Monday, December 26, 2005

ட்சுனாமி நினைவுகூர்தலும் பின்நோக்கிய சில பார்வைகளும்



இன்று ஸ்காபுரோ நகரின் நகரசபை திறந்தவெளி அரங்கில் சென்றவருடம் நிகழ்ந்த ட்சுனாமியின் அகோரத்தை நினைவுகூருதல் நடைபெற்றது. மிக உக்கிரமான குளிரினூடும் (பூஜ்ஜியத்துக்கு கீழே பத்துவரைக்கு இருந்தது என நினைக்கின்றேன், குளிர்க்காற்று வேறு) நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதும், அதில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்கல்லூரி/பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடப்பட்டது.

கனடாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கனடீய மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருந்ததும், அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இராணுவத்தின் தாக்குதல்களைத் கண்டித்து தமிழ்மாணவர்களுக்காய் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



இன்னும், கனடா அரசாங்கம் ட்சுனாமிக்காய் அறிவித்த பணம் போய்ச்சேர்ந்து உருப்படியான விசயங்கள் எதுவும் ஈழத்தில் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அதையே மாணவர் ஒருவரும் பேச்சில் தெரிவித்திருந்தார். ஆக்ககுறைந்தது (அடுத்த மாதம் 23ந்திகதி வரவிருக்கும்) தேர்தலுக்கு வாக்கு கேட்க வரும் கட்சிக்காரர்களிடம் இதுகுறித்து கேள்வியைக் கேளுங்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டதை அனைவரும் கவனத்தில் கொள்ளலாம்.



தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டாமல் இருப்பதோ, அல்லது இங்குள்ள அரசியலில் எந்தப்பங்களிப்பும் செய்யாமல் இருக்காதவரை எமது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். கிட்டத்தட்ட இதைவிட இன்னும் கொடும் குளிரில் சில ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். பெப்ரவரி நான்கு எமக்கான சுதந்திர நாள் அல்ல என்று உயர்கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாள்களில் டவுன்ரவுண் ரொரண்டோவில் மிக நீண்ட ஊர்வலத்தில் நாமெல்லோரும் கத்திக் கத்தி குரல்கொடுத்தபடி நெடும் வீதிகளில் நடந்தும் எதுவும் உருப்படியாக நிகழ்ந்ததில்லை (எனக்கு அதன் நீட்சியில் மூன்றுநாள்கள் காய்ச்சல் வந்து பாடசாலைக்கு போகமுடியாதிருந்ததுதான் மிச்சம்). அதுபோல், பொங்குதமிழ் முதலாவது நிகழ்ச்சி யாழில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்தபோது, அதை நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிரிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று கனடீய அரசாங்கத்திடம் வேண்டி குளிருக்குள் ஒட்டாவாவில் இருந்த வெளிவவிவகார அமைச்சர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றோம்.



கிருஷாந்தி பாலியல் வன்புணரப்பட்ட சம்பவம் வெளியே வந்தபோது, கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்த ஒட்டாவாவில், மாணவநண்பர்கள் பேரணிக்காய் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைத் திரட்டியிருந்தார்கள். எந்த சமூகத்தின் மாணவர்களும் கனடாவின் தலைநகரில் இப்படியான ஒருவிடயத்தைச் செய்திராதபோது மிகுந்த தெம்புடனும், நம்பிக்கையுடன் அதைச் செய்திருந்தோம். குளிருக்குள் பலர் மயங்கி விழுந்தது காணாது என்று கிருஷாந்தியை அறிந்த அவரது தோழிகள் சிலரும் மேடையில் பேசும்போது உணர்ச்சிகளின் நிமிர்த்தம் மயங்கிவிழுந்ததையும் பார்த்துக்கொண்டே பாராளுமன்றத்தின் முன் குழுமியிருந்தோம். யாரோ ஒரு பெயர் தெரியாத அலுவலகரை அனுப்பி எமது மனுக்களை பெற்றுக்கொண்டபோது ஆர்ப்பாட்டங்கள் இந்த மேல்நாட்டு அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்ற உண்மை எனக்கு முதன் முதலில் விளங்கியது. எனக்குத் தெரிந்து, இந்த நிகழ்வை நடத்த பல நண்பர்கள் ஒரு செமஸ்டர் கல்வியையே தாரை வார்த்திருந்தனர். இந்நிகழ்வுக்காய் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தொலைதூரங்களில் இருந்து பயணித்து எல்லாம் மாணவ நண்பரகள் வந்திருந்தார்கள்.

அனைவரின் உழைப்பும் வீணாய்ப்போனதை, எமது குரல்கள் சப்தமின்றி அடங்கிப்போனதை, அழுத பெண்களின் கண்ணீர்த்துளிகள் பெய்தபனிக்குள் உறைந்துபோனதை, எதுவும் செய்யவியலாத இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதே அரசாஙகமும், கனடீய பத்திரிக்கைகளும், ஒரு கோடைகாலத்தில் 50ற்கும் குறைவான சிங்கள மக்கள் கலந்துகொண்டு, புலிகள் யாழ் வாசலில் நின்று ஆமிக்கு அடியடியென அடித்தபோது யாழில் இருக்கும் இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அலறியபோது, ஒட்டாவாவின் பாராளுமன்றத்தின் உள்ளேயேயும் எதிரொலித்தது. பத்திரிக்கைகள் சில முன்பக்கத்தில்கூட பெரிய செய்தியாக ஆர்ப்பாட்டச் செய்தியைப் பிரசுரித்து, தமது 'நடுநிலைமையை' எமக்குத் தெரியப்படுத்தின. அதிலிருந்து அதிகாரம் உள்ளவரின் குரல் மட்டுந்தான் அம்பலத்தில் ஏறும் என்ற உண்மை உறைக்கத்தொடங்கியது.



(இயலுமானவரை பொங்குதமிழ், தமிழர் நாள் என்று இன்னபிற மாணவர்கள் வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற்றினாலும்) என்னைப்பொறுத்தவரை, நாம் கனடீய அரசியல் பங்குபெறாதவரை, எமது வாக்குகளுக்கு வலு உண்டென்று நிரூபிக்காதவரை உருப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

அண்மையில் ஸ்காபுரோ நகரின் ஒரு எம்.பி.பியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு, பத்திரிகையில் வந்த அரசாங்க அறிவித்தலில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் மட்டுமே விபரம் வந்திருந்தது. ஆகவே அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளின் பலத்தை நிச்சயம் உணர்வார்கள் என்றபடியால் எமது இருப்பையும் தேவையும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் தெளிவாக வெளிப்படுத்தலாம்; வெளிப்படுத்தவேண்டும். கனடீய அரசால் அறிவிக்கப்பட்ட ட்சுனாமி நிதி எங்கே போனது என்ற கேள்வியுடன் வரும் தேர்தலை நாம் எதிர்நோக்குவது மிகச்சிறந்தது, அதுபோல பிற உள்ளூர் விடயங்கள் கூடவே.

மற்றும்படி ட்சுனாமியால் பாதிக்கபபட்டவர்களுக்கும், இழப்புக்களால் உள/உடல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களுக்கும் தருவதற்கு நம்பிக்கை வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பதுதான் அவலமானது. கொலை செய்யும் கலாச்சாரம், பாலன் பிறக்கும் தேவாலயத்தின் உள்ளே கூட நீண்டுவிட்டதன்பின் எதைப் பேசித்தான் என்ன பயன்?

ஒருவருக்கு கடிதம் எழுத உட்கார்ந்தபோது, யோசப் பரராஜசிங்கத்தின் கொலையை இணையத்தில் அறிந்த குழப்பத்தில், அவருக்கு இப்படி எழுதினேன்....

'இந்தக்கணத்தில் வாழ்வு என்பது, எனது அறையிலிருந்து பார்க்கையில் வெளியே வெறிசோடிப்போயிருக்கும் தெருவைப்போல வெறுமையாகவும் மிக மிக நிசப்தமாகவும் இருக்கிறது.'

அதற்கு அவர் எழுதிய பதிலைத்தான் எனக்கான குரலாக ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே விட்டுப்போகின்றேன்....

'சமூகத்தின் நிசப்தமோ, பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுக்கிறது' என்ற வரிதான் உங்களதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதே வெறுமை என்னையும் தாக்கியதுண்டு. ஆனாலும் வசந்தங்கள் வரும் நிச்சயமொருநாள்... என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய நாம்? சாளரத்தினருகே அமர்ந்து விழிவிரித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர.'

Monday, December 19, 2005

வாசிப்பு

இங்கே அழுத்தவும்

குறிப்பு: எனது மற்ற்த்தளத்தில் காலையில் பதிந்தது இன்னும் தமிழ்மணத்தால் உள்ளெடுக்கப்படவில்லை. இந்தத்தளமாவது தமிழ்மணத்திரட்டியில் இயங்குகின்றதா என்று பார்ப்பதற்காய்.

Saturday, December 10, 2005

சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள்

File0001
அற்றம் (attamm@gmail.com)

அற்றத்தின் இரண்டாவது இதழில், மாயா ஆஞ்ஜலோவின் நேர்காணல், கவிதைகள், அவரைப் பற்றிய பிரதீபாவின் கட்டுரை என்பவை சிறப்பானவை எனலாம். முக்கியமாய், பல வினாக்களை எழுப்பி சலனமடையச்செய்ய வைக்கின்ற நேர்காணல் கவனிக்கத்தது. மாயா ஆஞ்சலோவை ஒரு பக்கமாய் மட்டும் பார்க்காது அவருக்கு வைக்கப்படுகின்ற விமர்சனங்களையும் மறந்துவிடாது குறிப்புக்களாய் இந்த் இதழில் பதிவுசெய்திருந்தது நல்லவிடயம். அத்தோடு அடேல் பாலசிங்கம் எழுதிய, விடுதலை வேட்கைக்கு தான்யா எழுதிய விமர்சனமும் முக்கியமானது. அடேலை முற்றாக நிராகரிக்காமல் அடேல் எழுதிய பலவிடயங்களையும், எழுத மறந்த/மறுத்த விடயங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றது அந்தக்கட்டுரை.

ஆசிரியர்களின் தலையங்கத்தில் எழுதப்பட்ட பலவிடயங்கள் தேவையற்றது போல எனக்குபடுகின்றது. எழுத்தில் முன்வைக்காத எந்த விமர்சனத்துக்கும் பதில் கூறிக்கொண்டிருத்தல் அவசியமற்றது. அதற்காய் நேரவிரயம் செய்யாமல், மேலே நகர்ந்துகொண்டிருப்பதுதான் நல்லது. மேலும் பெயர் குறிப்பிடாத ஆக்கங்களுக்கு ஆசிரிய குழுவில் இருப்பவர்கள்தான் பொறுப்பானவர்கள் என்றாலும் ஆக்கங்களுக்கு எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் நன்றாகவிருக்கும். நாளை புதிதாய் ஒருவர் ஆசிரியர் குழுவுக்கு வரும்போதோ அல்லது எவரேனும் ஒருவர் விலகிப்போகும்போதே சில சிக்கல்கள் வரக்கூடும். கூட்டாய் படைப்புக்கள் எழுதியிருந்தாலும், அனைவரின் பெயரையும் போடுவதில் கூட பெரிய பிரச்சினை இல்லையென்று நினைகின்றேன்.

kaalam
காலம்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் அங்கீகரித்துபோவதில் நமது விமர்சகப்பெருமக்களுக்கு என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்த இதழில் மு.பொ, ஜெயமோகனின் காடினையும், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியையும் ஒப்பிட்டு எழுதிய விமர்சனம் கவனிக்கத்தக்கது.

காலம் இதழின் முக்கிய பிரச்சினையே தமிழகத்தில் வருகின்ற இதழ்களின் வடிவமைப்புடன் வருவது. காலச்சுவடு, சொல்புதிது, உயிர்மை என்று அவ்வவ்போது கூட்டணிகள் மாறுகின்றபோது, நாம் இதழைப் பார்த்தே காலம் இப்போது யாரோடு வாஞ்சையுடன் கைபோட்டுகொண்டு நிற்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இருபத்தைந்தாவது இதழ் வரை வந்துவிட்ட காலம் இதுவரை தனக்கென்று தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரத்தயங்குவது ஏனோ தெரியவில்லை. மேலும், காலம் கனடாவிலிருந்து வெளிவருகின்றது என்பதை முதற்பக்கத்தில் பார்க்காவிட்டால், எவரும் அது தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை என்றுதான் நம்புவார்கள். ஒரு இதழ் புலம்பெயர்ந்த சூழலில் வெளியிடும் அவலம் என்னவென்று புரிந்தாலும், 'காலம்' செல்வமும் அதன் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்களும் இது குறித்து சற்று யோசிக்கலாம். இந்த இதழில் வந்த கவிதைகள் அனைத்தையும் பெண்களே எழுதியுள்ளார்கள். ஆண்களின் கவிதைகள் நீர்த்துப்போகின்றன என்ற விமர்சனம் வைக்கப்படுகின்ற காலத்தில், சலித்துப்போன கவிதை ஜாம்பவான்களின் கவிதைகளைப் போட்டு நிரப்பாமல், புதிய கவிதை வாசிப்புக்கான சாத்தியங்களை உருவாக்குவதற்கு, காலத்தை இந்தவிடயத்தில் பாராட்டலாம்.

KaiNaaddu
கைநாட்டு (karumaiyam@gmail.com)

கைநாட்டின் முதலாவது இதழ் இது. இதழிலுள்ள விடயங்களை விமர்சிக்கப்போனால் அந்த சஞ்சிகையின் பக்கங்களைவிட அதிகம் எழுதவேண்டிவரும். வெளிப்படையாகச் சொல்வதனால் அதில் எழுதப்பட்ட பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அனைவருக்கும் தாம் விரும்புவதைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கின்றது என்பதற்கு மாற்றாய் எந்த எதிர்க்கருத்தும் எனக்கில்லை. யாராவது நீயும் அதில் எழுதிவிட்டு இப்போது விமர்சிக்கின்றாய் என்று கூறமுன்னர் எனது கவிதையொன்றும் வந்திருக்கின்றது என்பதை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன். அங்கே பேசப்பட்ட தீவிர விடயங்களுக்கு மாறாய் எனது கவிதை தனியே முழித்துக்கொண்டு, வழமைபோல தன்பாட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு நிற்கின்றது என்பதை ஒரு தேவையில்லாத உபகுறிப்பாய் எழுதிக்கொள்கின்றேன்.

parai
பறை (www.parai.org) (info@parai.com)

பறையின் மூன்றாவது இதழ் இது. பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன் போன்றவர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள். நீண்ட ஆக்கங்களாய் இல்லாது, சிறு கட்டுரைகள் நிரம்பவாய் இருக்கின்றன. விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் அமிழ்ந்துபோய்க்கிடக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு(நான் உட்பட) இவ்வாறான மாற்றான சஞ்சிகைகள் வருவது நல்ல விடயம். இயலுமாயின் முன்பக்கத்தை சற்று தடித்த அட்டையில் கொண்டுவர பதிப்பாசிரியர்கள் முயலலாம்.

Friday, December 09, 2005

எதையாவது எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் விரைவில் விசர் பிடித்துவிடும் போலக்கிடக்கிறது. உங்கள் வழக்கில், 'விசர்' என்றால் என்னவென்று லீனா மணிமேகலை கேட்டபோது, என்னைப்போன்றவர்கள் உங்கள் முன்னால் இருக்கும்போது, இதற்கு அர்த்தம் தேடி அகராதியைப் புரட்டத்தேவையில்லை என்று பகிடிக்காய்க் கூறினாலும், விரைவில் மனச்சிதைவுக்கு ஆளானாலும் ஆளாகிவிடுவேன் போல ஈழத்தில் நடக்கும் அண்மைக்காலச் சம்பவங்களைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

முன்பு எல்லாம், தினமும் இரண்டோ மூன்று முறையோ ஈழத்துச் செய்திகளை இணையத்தில், பத்திரிகையில் என்று தேடித் தேடி வாசிப்பேன். பிறகு இவ்வறான செய்திகளை வாசித்து வரும் எதுவும் செய்யமுடியாத கையாலகாத நிலையையும், கோபத்தையும் பார்த்து, மெல்லச் மெல்லச் செய்திகளை வாசிப்பதை (ஒருவித தப்பித்தல் தான்) குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன்.

நேற்று தற்செயலாய்ப் பார்த்த இந்தச்செய்தி மீண்டும் மிகப்பெரும் வெறுமையை மனதுக்குள் உண்டு பண்ணியது. என்ன செய்வது என்ற இயலா நிலையில், அப்படியே வாசித்த செய்தியை எடுத்து வலைபப்பதிவில் போட்டு விட்டு படுக்க முயற்சித்தேன் (ஆங்கிலத்தில் செய்தியைப் போட்டதால் தமிழ்மணம் சேர்க்கவில்லைப்போல) . தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது என்பது ஒருபுறம் இருக்க, பழிவாங்குவது எதுவுமறியாப் பெண்கள், பச்சிளங்குழந்தை வரை போனது மிகவும் கொடுமையாக இருந்தது. புலிகளின் தீவிர ஆதரவாளரகள் நடக்கும் கொலைகள் எல்லாம் 'ஒட்டுண்ணிப்படைகளும்', 'தேசத்துரோகிகளும்' செய்கின்றார்கள் என்று அடித்துக்கூறுகின்றார்கள் என்றால், மற்றப்பக்கம் 'ஓமோம் பாஸிசப்புலிகள் மட்டுந்தான் இதையெல்லாம் செய்கின்றார்கள்' என்று சுலபமாய் எழுதித்தள்ளுகின்றார்கள்.

இப்போது என்னை அதிகம் பாதித்துக்கொண்டிருப்பது, மீண்டும் கோரமாய் தலைவிரித்து ஆடத்தொடங்கியுள்ள தமிழ்-முஸ்லிம் பிரச்சினை. கிழக்கில் அந்த மக்களில் ஒருவராய் நின்று பார்க்காவிட்டாலும், வெளிநாடுகள் மிகப்பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையிலும், ஏறகனவே இந்த விடயத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்ப்ட்ட புலிகள் அவ்வள்வு முட்டாள்தனமாய் முஸ்லிம்கள் பிரச்சினையில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் தோன்றுகின்றது. மேலும் கெளசல்யன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாய் இருந்தது, அவர் முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த பரிவுடன் இருந்ததும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் இணக்கத்துக்காய் தீவிரமாய் உழைத்ததும் என்பதும் கவனிக்கத்தக்கது. உயிர்மையில் எழுதுகின்ற இளைய அப்துல்லா கூட, கெளசல்யன் மரணத்தின்போது பல முஸ்லிம்கள் கதறி அழுததாயும், கெளசல்யன் அக்கறையுடன் முஸ்லிம் மக்களிடையே பணியாற்றியவர் என்றுதான் குறிப்பிடுகின்றார். இதனால் முந்தி புலிகள் முஸ்லிமகளை கொலைச் செய்யவில்லை என்பதோ, பிற விடயங்களை நியாயப்படுத்துவதோ, ஜிகாத் போன்ற முஸ்லிம் வன்முறைக் குழுக்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையோ மறைப்பதோ என்று அர்த்தம் இல்லை.

கவனமாகப் பார்த்தால், ராஸிக் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளுக்கு காரணமாயிருந்தவரும், முஸ்லிம் பெயரைக் கொண்டு (பெயர் இப்போது ஞாபகத்தில் வரவில்லை) இருந்து அதிரடிப் படைகள் செய்த தமிழ்மக்கள் படுகொலைக்கு காரணமாயிருந்தவரோ, உண்மையான முஸ்லிமகள் அல்ல, 'ராசிக்' ஒரு தமிழராகவும், அந்த அதிரடிப்படை அதிகாரி ஒரு சிங்கள இனத்தவராகவும் இருந்தவர்கள் என்பதன் பின்னாலுள்ள மூன்றாம் கைகளில் பின்புலத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் இரண்டு பேரும் ஏன் முஸ்லிம் பெயர்களைச் சூடி இந்தக் கொலைகளை செய்திருந்தார்கள் என்றால், கிழக்கு மாகாணத்திலிருக்கும் முஸ்லிம்கள்தான் கொலைகளைச் செய்கின்றார்கள் என்ற பிரமையை வன்மத்தை தமிழ் மக்களிடையே ஆழமாய்ப் பதிக்க முயல்வது தான். அதைத்தான் இன்றைய பொழுதிலும் மூன்றாம் கைகள் திறம்பட நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள்தான் ஒற்றைப்படையாக இருக்கின்றார்கள் என்று பார்த்தால், 'சனநாயகம்' 'நடுநிலைமை' பேசும் எதிர்த்தரப்புக்கு இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் போல, ஈழத்தில் விழும் கொலைகள் எல்லாவற்றையும் செய்பவர்கள் 'பாசிசப் புலிகள்' மற்றும் புலிகள் தவிர வேறொருவருமில்லை என்பதே அவர்களின் 'உறுதியான' வாதம்.

நேற்றுத்தான் இன்னுமொரு செய்தியை வாசித்தேன். யாழில் ஒரு பெண், கசிப்பு விற்றதற்கும், விலை மாதராய் இருந்தற்கும் காரணமாய் சுட்டுக் கொல்லபட்டார் என்று. இப்படியானவர்களை மண்டையில் போடப்போகின்றோம் என்றால், புலம்பெயர் தேசத்தில் எத்தனை ஆண்களை முதலில் மண்டையில் போடவேண்டும் என்று யோசித்துப்பார்க்கின்றேன். ஆனால் இந்த ஆண்கள்தான், 'ஓமோம் அவள் வேசிதான், கொடுத்த தண்டணை சரிதான்' என்று நாக்கு கூசாமல் பேசுவதில் முன்னணியில் நிற்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒரு அமைதியான பொழுது எப்போதாவது ஈழத்தில் விடிகின்றபோது, இத்தனை கொலைகளுக்கும் மேலேதான், வீடு கட்டி, நம் துணைகளைப் புணர்ந்து, குழந்தைகள் பெறப்போகின்றோம் என்றால், அந்தக் குழந்தைகள் எப்படி பிறக்கப்போகின்றார்கள் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

குறிப்பு: இப்படி இவற்றை எல்லாம் எழுதுவது கூட, அர்த்தம் இல்லை என்பது புரிகிறது. ஆனால் இவ்வாறான செய்திகளை வாசிக்கும்போது இதைக்கூட எழுதாமல் இருந்தால், ஆரம்பத்தில் கூறியது மாதிரி விரைவில் விசர் பிடித்துவிடுமோ என்ற அச்சமே காரணமே தவிர, வேறொன்றுமில்லை.

Thursday, December 08, 2005

கொலைகள் விளையும் தேசம்

Revenge killing by suspected paramilitaries
[TamilNet, December 08, 2005 10:06 GMT]

Two sisters of Puhalventhan, Mrs. Yogarasa Yogeswary, 26, and Thurairasa Vathany, 17, were shot dead, Wednesday night, by suspected paramilitaries, at Palacholai in Batticaloa. Puhalventhan, a renegade paramilitary cadre from Karuna Group, had surrendered along with Gnanatheepan, his colleague, to the LTTE in Amparai, Tuesday. The sisters were shot as they emerged from their door to greet two callers who had entered the compound around 9:30 p.m. Wednesday. A two years old child was seriously wounded.

Puhalventhan and Gnanatheepan claimed responsibility for the killing of Iniyabharathy, a senior Karuna operative, allegedly responsible for a series of recent attacks on Muslims with the intention of provoking Tamil-Muslim riots and Muslim-LTTE dissension.

The two claimed that the Karuna Group to which they belonged was attached to a Sri Lankan Special Task Force (STF) camp in the area, from which the group conducted raids on Muslim and Tamil villages.

Usha Yogarajah, the two-years-old child, admitted in Batticaloa Hospital. She lost her mother Wednesday. Eravur Police, investigating the case, said that Yogeswary’s child, Usha, 02, seriously wounded and rushed to the base hospital at Batticaloa, was still in critical condition.

Palacholai, a village in Vantharumoolai, is located 18 km north of Batticaloa town.The assailants had lobbed a grenade into the house before leaving the place, civilian sources said.

இவை குறித்தும் யாராவது 'சனநாயகவாதிகள்', 'நடுநிலைவாதிகள்' எழுதுங்களய்யா!

Tuesday, November 29, 2005

(அண்மையில்) படித்ததில் பிடித்தவை

ஆரம்பம் இங்கே

நிவேதா கொழும்பிலிருந்து அண்மையில் வலைப்பதிக்க ஆரம்பித்திருக்கின்றார். இறுதியாக எழுதிய கனத்துப்போன நினைவுகள் மிக அருமையாக இருக்கிறது. நேர்மையாகக் கருத்துக்களை வைக்கும்போது எந்தப்பயமோ, தயக்கமோ வருவதில்லை என்பதற்கு இந்தப்பதிவு நல்லதொரு உதாரணம். கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், அவரது மொழி ஆளுமை. ஒரு விடயத்தை எழுதுவது என்பது பெரிய விடயமல்ல, அதை எப்படி வாசிப்பவருக்கு present செய்கின்றோம் என்பதில்தான் உண்மையான எழுத்தின் பலம் இருக்கிறது. மிக இயல்பான எழுத்து நடை நிவேதிதாவுக்கு வந்திருக்கிறது. தனது பரீட்சைகளின்பின் இன்னும் நிறைய எழுதுவார் என்று எதிர்ப்பாக்கின்றேன்.

சன்னாசி, நகுலனின் புனைவுகள், பற்றியும், சல்மான் ருஷ்டியின் நாவல் பற்றியும் எழுதிய பதிவுகள் மிக அருமையானவை. சிலருடைய வாசிப்பையும், எழுத்தையும் வாயூற வாயூறப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்றால் அதில் சன்னாசியும் ஒருவர். இந்த ஆசாமிக்கு தெரியாத விடயம் ஏதாவது இருக்கிறதா என்று பலமுறை யோசிப்பதுண்டு (அப்படி நான் நினைக்கும் இன்னொருவர் பெயரிலி). சன்னாசியுடன் என்றாவது ஒருபொழுது நேர்காணல் கண்டு எப்படியெல்லாம் எழுத, வாசிக்க ஆர்வம் வந்தது என்பது பற்றியும், எப்படி இவ்வாறான் விரிவான தளத்துக்கு வாசிப்பை விசாலிக்கச்செய்தார் என்பதையும் அறிய ஆவல். மேலும் அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருபவன் என்பதால் எனது ஆதங்கம் ஒன்றையும் (விமர்சனம் செய்யாமல் எப்படி ஒரு பதிவு எழுதுவது :-)) கூறவேண்டும். நேரங்கிடைத்து, சந்தர்ப்பம் வாய்த்தால், புலம்பெயர், ஈழப்படைப்புக்களை வாசித்து தனது எண்ணங்களை சன்னாசி பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பு. இப்படி பரந்த வாசிப்புடைய சன்னாசி போன்றவர்களின் விமர்சனங்கள் ஈழ/புலம்பெயர் படைப்புக்களுக்கு இன்னும் வளம் சேர்க்கும் என்பது எனது தாழ்மையான் எண்ணம்.

மரம், கடைசியாய் எழுதிய பதிவு வித்தியாசமான கோணத்தில் அண்மைக்காலப்பிரச்சினைகளை யோசிக்கவைக்கிறது. குஷ்பு விவகாரம் குறித்து தெளிவாய் எனது கருத்துக்களை வைத்ததால் அவற்றைப்பற்றி இன்னொருமுறை பேசவேண்டிய அவசியமில்லை. குஷ்பு விவகாரத்தைச் சாட்டி, ஒரே நாளில் லிபரல்களாயும், பெரியாயவாதிகளாகவும் ஆன பலபேரை நினைக்கத்தான் பயமாயிருக்கிறது. திருமாவளவனும், இராமதாசும் குஷ்பு விவகாரத்தில் அபத்தமாய் கூறியதைச் சாட்டாக வைத்து அவர்கள் இதுவரை பேசிய அனைத்துவிடயங்களையும் மட்டந்தட்டிவிட்டுப் போகின்றவர்களைப் பார்க்கும்போதுதான், மரத்தினுடைய இந்தப்பதிவு எனக்கு முக்கியமாய்ப்பட்டது.

தமிழ்க் கலாச்சாரம், குஷ்பு விவகாரம், கற்பு குறித்து அருள்செல்வனும்
மூன்று கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். நான் யோசித்துப்பார்க்காத கோணங்களை, இன்னொரு விவாதத்திற்கான சில முக்கிய புள்ளிகளை விட்டுச்செல்வதால் அவையும் முக்கியமான கட்டுரைகளாக எனக்குத் தெரிகின்றன.

(1) மரம்
(2) ஜகாரஸ் ப்ரகாஷ்
(3) கண்ணன் (பெங்களூர்)

பி.கு: மதி, நீங்கள் கூறிய கட்டுப்பாடுகளுக்கேற்ப நான் விளங்கி எழுதினேனா தெரியவில்லை. திருத்த வேண்டியிருப்பின் சுட்டிக்காட்டவும். நன்றி.

Saturday, November 26, 2005

செல்லிடப்பேசிக்குள்ளால்...

பார்த்த காட்சிளும் பங்குபற்றிய சில நிகழ்வுகளும்


புத்தகம் வாசித்தபடி, 'காட்சிகளை' இரசிக்கும் Indigo யன்னல்கரையில்

நிலத்தைக்குடைந்து செல்லும் subway train சொற்பநேரத்தில் வெளியே வருகின்றசமயத்தில்


'கூர்' என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதைகள் வாசிப்பு நிகழ்வின்போது

பனி பெரும்மழையாய்க் கொட்டிய ஓரிரவில்....தெரு எது நடக்கும் பாதை எது என அடையாளம் மறைந்த பொழுதில்

குறும்படங்களுக்கான ஒரு பட்டறையின்போது

கவிதை வாசித்தலைக் கேட்பதற்கும் வாசிக்கவும் வந்திருந்தவர்கள்

Tuesday, November 22, 2005

'கவிதை' என்று எழுதுவதைத்தான் இல்லாமற் செய்துவிட்டார்கள். இனிப் புதிதாய் எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று (அப்பதானே fieldல் நிற்கலாம். இல்லாவிட்டால் துரத்திவிடுவார்கள் அல்லவா?) யோசிக்கலாம் என்று எனது ஏழாம் அறிவைச் சுரண்டியபோது, பிறருக்கு இலவச ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். மேலும் இதற்கு சொந்தமாய் எந்த முதலீடும் இல்லாதிருப்பதால், நக்கீரர்/நாரதர் வேலை பார்க்கும் கொழுவி போன்றவர்களின் தொல்லைகளில் இருந்தும் தப்பிக்கலாம். யாராவது அடிக்க வந்தால் கூட, இது நான் எழுதியதில்லை என யாரவது unknown personஐ கைகாட்டலாம் :-).

முக்கியமாய் கீழேயுள்ள பொன்மொழிகளை ஆண்கள் வாசித்து காயத்ரி (இது நீங்கள் சைட் அடித்த/அடிக்கும் காய்த்ரி என்னும் பெண் அல்ல) மந்திரம் மாதிரி நினைவுபடுத்தி, எதிர்காலத்தில்/நிகழ்காலத்தில் உங்களுக்கு இருக்கும் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கலாம். 'எவ்வளவு நல்ல மனுசன்' என்ற பெருமைமிகுபட்டங்களை உங்கள் துணையிடம்/காதலியிடம் பெற்றுக்கொள்ளலாம். பெண்களும் அட ஆண்களும் எங்களைப் புரிந்துகொள்ளப்பார்க்கின்றார்களே என்று புன்முறுவல் பூக்கலாம். மேலும் இப்படி உங்களின் உளவியல் புரிந்தவனாய் இருக்கின்றானே என்று என்னையும் சற்றுப் பாராட்டலாம். அதிகம் பாராட்டி நிரம்பத்தும்மச்செய்து 'ஜலதோசம்' மட்டும் வரச்செய்யவேண்டாம்.

WORDS WOMEN USE

FINE
This is the word women use to end an argument when they are right and you need to shut up.

FIVE MINUTES
If she is getting dressed, this is half an hour. Five minutes is only five minutes if you have just been given 5 more minutes to watch the game before helping around the house.

NOTHING
This is the calm before the storm. This means "something," and you should be on your toes. Arguments that begin with 'Nothing' usually end in "Fine."

GO AHEAD
This is a dare, not permission. Don't do it.

LOUD SIGH
This is not actually a word, but is a non-verbal statement often misunderstood by men. A "Loud Sigh" means she thinks you are an idiot and wonders why she is wasting her time standing here and arguing with you over "Nothing"

THAT'S OKAY
This is one of the most dangerous statements that a woman can make to a man. "That's Okay" means that she wants to think long and hard before deciding how and when you will pay for your mistake.

THANKS
A woman is thanking you. Do not question it or faint. Just say you're welcome.

WHATEVER
It's a woman's way of saying *!#@ YOU!

என்ன, இதையெல்லாம் நான் தான் எழுதினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் சோகம் என்னவெனில் இது ஒரு தோழியால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. கொஞ்சம் பொறுத்திருந்தால் நான் இதையெல்லாம் எழுதியிருப்பேன் என்று ஆண்களின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காய்ச் சொல்லிவைக்கின்றேன்.

Wednesday, November 02, 2005

கட்டாய விருப்ப ஓய்வு குறித்து ஒரு சத்தியக் (ம் அல்லாத) கடதாசி

சில வாரங்கள் (அல்லது சில மாதங்கள்) வலையில் எழுதுவதை நிறுத்தி நண்பர்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற வருடம் கார்த்திகை மாதத்தில் ஏதோ ஒருநாளில்தான் வ்லைப்பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தேன். இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு பதிவுகள் எழுதியிருப்பேன் போலக்கிடக்கிறது (ஆகக்குறைந்தது பத்துப் பதிவுகளாவது உருப்படியானதா என்பது வேறு விடயம் :-) ).

சரி ஓய்வு எடுத்துவிட்டு, இயலுமாயின் நல்ல செய்தியோடு திரும்பி வருகின்றேன். போவதற்கு முன், புரட்டாதி 28ந் திகதி புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தேன். அன்றைய நாளில் பிரியமான இரண்டு தோழியரின் பிறந்த நாளும் வந்தததால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வலைப்பதியவும் செய்யும் அந்த இரு தோழியருக்கும் வாழ்த்து! அத்தோடு இந்த கார்த்திகை மாதத்தில், திருமணப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் அருமைத் தோழர் ஒருவருக்கும் திருமணநாள் வாழ்த்து உரித்தாகட்டும் (I am missing the opportunity to see your wedding ceremony buddy).

இறுதியாய், கனடாவில் இயல் விருது என்று ஒரு விருது படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்பட்டபின் இவரை விட அவருக்கு வழங்கியிருக்கலாம் என்று முணுமுணுப்பதைவிட, இந்த முறை என் சிற்றறிவுகுட்பட்டவகையில் இந்த விருதுக்காய் சிலரைப் பரிந்துரைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

கார்த்திகேசு சிவத்தம்பி
கி.ராஜநாராயணன்
அம்பை
சோ.தர்மன்
எம்.ஏ. நுஃமான்
ராஜம் கிருஷ்ணன்
வண்ணநிலவன்

நன்றி.

Tuesday, October 25, 2005

சுந்தர ராமசாமி

நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்

சுந்தர ராமசாமியின் மறைவுக்கான நினைவஞ்சலிக் கூட்டம், ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்தது. வழமைபோல நான் 'நேரத்துக்கே' சென்றதால் அ.முத்துலிங்கம், சு.ராவுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்ததைத்தான் எனது ஆரம்பமாகக்கொள்கின்றேன். அ.முத்துலிங்கம், கனக செல்வநாயகம், தேவகாந்தன், திருமாவளவன், சேரன், வ.ந.கிரிதரன், பா.அ.ஜயகரன், எம்.கே.மகாலிங்கம், 'காலம்' செல்வம், சிவதாசன் என்று பலர் சு.ராவுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்தனர். 'சு.ராவுடனான படைப்புக்களுக்குள் போகாமல் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்' என்று தலைமை வகித்த எம்.கே.மகாலிங்கம் கேட்டதால், அனேகர் சு.ராவுடனான தமது தனிப்பட்ட நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சு.ரா பழகுவதற்கு அருமையான மனிதர் எனவும், தான் பேசுவதற்கான வெளியை (space) உருவாக்குவதில் கவனம் எடுப்பதைவிட, எதிரே இருப்பவர் பேசுவதற்கான வெளியை எப்போதும் உருவாக்கி கொண்டிருந்தவர் என்பதை நான் சு.ரா பற்றி இவர்களின் பேச்சினூடாக விளங்கிக்கொண்டேன். அனைவரின் உரைகளிலும், சு.ராவின் சடுதியான இழப்பை சற்றுத் தாங்க முடியாதது போல இருந்தது. சு.ரா தனது இறுதிக்காலத்தில், ஒரு புதிய நாவலை எழுதிக்கொண்டிருந்தார் என்றும் அது எவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்டன என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை என்றார் அ.முத்துலிங்கம். சிவதாசன், சு.ரா தனது இறுதிப் பயணத்தைச் சடங்குகள் இல்லாமற் செய்ததன் மூலம், 'பிராமணர்', 'பிராமணியம்' போன்று அவருக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இல்லாமற் செய்திருக்கின்றார் எனத்தன் பேச்சில் குறிப்பிட்டு அப்படிச் செய்ததற்காய் தலைவணங்குகின்றேன் என்றார். தேவகாந்தன், சு.ரா, ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள் நடத்திய கூட்டத்திலும், கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவிலும் சு.ராவின் பங்கும் பெருமளவில் இருந்தது என்று குறிப்பிட்டார். திருமாவளவன், தனது முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது கவிதைத் தொகுப்பு முற்றிலும் மாறுபட்டதற்கு சு.ராவே காரணமென்றார். இரண்டாவது தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதுப்படுகின்ற காலத்தில், பசுவய்யாவின் கவிதைகளை தினம் ஒன்றாவது படித்திருக்கின்றேன், அந்தவகையில் சு.ரா தனக்கு குருவென்றார். 'காலம்' செல்வம் சுரா நட்புக்காய் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார், முக்கியமாய் குமுதம் போன்றவற்றை சு.ரா விமர்சித்துவிட்டு தீராநதியில் எழுதப்போனது நட்பின் நிமிரத்தம் என்றார். அதை, தான் விமர்சித்தபோது, ஒத்துக்கொண்டு அது தனது நெருங்கிய நண்பர் மணாவுக்காய்தான் நேர்காணலைக் கொடுத்திருந்தேன் என்று குறிப்பிட்டாராம். சு.ரா சென்னைக்கு வரும்போது கட்டாயம் ஒவ்வொருமுறையும் இரண்டு பேரைச் சந்திப்ப்பேன் என்று கூறியபோது, தான் ஜெயகாந்தனையும் அசோகமித்திரனையும் ஆக்கும் என்று நினைத்தால், சின்னக்குத்தூசியையும், மணாவையும் என்று சு.ரா கூறியபோது தனக்கு அது ஆச்சரியமாக இருந்தது என்றார் 'காலம்' செல்வம். எந்தக் குறிப்பும் இல்லாமல் சு.ராவின் சில கவிதைகளையும், நாவல்களில் வரும் பகுதியையும் அப்படியே செல்வம் ஒப்பித்தபோது, சு.ராவின் பாதிப்பு எவ்வளவு செல்வத்திடம் உள்ளது என்று விளங்கியது. முக்கியமாய், தனக்கு எமர்ஜென்சிக்காலத்தில் இந்திராகாந்திக்கு எதிராய் சு.ரா எழுதிய கவிதை பிடிக்கும் என்றார். அதிலும் 'இது உறக்கம் அல்ல தியானம்' என்ற வரிகள் தன்னை ஒருகாலத்தில் பாதித்தது என்று செல்வம் குறிப்பிட்டது நினைவிலுண்டு. சு.ராவுகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டால் நன்றாகவிருக்கும். எனெனில் அந்த விருதின் மூலம் அவரது படைப்புகளை ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்த்து அரசு வெளியிடும் என்பதால் சில்லறைப் படைப்புகளுக்குப் பதிலாய் சு.ராவின் படைப்புக்கள் பிற மொழி பேசுபவர்களை அடைந்தால் நல்லதே என்று வ.ந.கிரிதரன் குறிப்பிட, காலம் செல்வம் இடைநிறுத்தி, 'என் முன்னோர்களுக்கு கிடைக்காத விருதை எனக்குத் தந்தால் அவர்கள் முகத்திலேயே வீசி எறிவேன்' என்று சு.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கின்றார் என்பதை நினைவு கூர்ந்தார்.

வழமைபோல கூட்டம் முடிவதற்கு முன்னரே,வெளியில் நின்று சில நண்பரகளோடு உரையாடிக் கொண்டிருந்தேன். ரொறண்டோவில் நடந்த சு.ராவுடனான, தளையசிங்கத்தின் 'ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி' விவாதத்தைப் பற்றிச் சில விடயங்களை வ.ந.கிரிதரன் நினைவுபடுத்தினார். அப்போது நான் கனடாவுக்கே வரவில்லை என்பதால் அதைக் கேட்க சுவாரசியமாக இருந்தது. 'காலம்' செல்வமும் இணைந்துகொள்ள, 'அந்த மாதிரி சு.ராவின் பாதிப்பு உங்களுக்கு இருக்கிறது' என்று நான் வழமை போல வாயைப் பிளந்து சொல்ல, முந்தி 'காலம் என்றால் சு.ரா, சு.ரா என்றால் காலம்' என்று ஒரு காலம் இருந்தது என ஒரு நண்பர் குறிப்பிட்டார் :-) . வேறொருவர், சு.ரா என்றவுடன் சில நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், ஆனால் ஜெயமோகனுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல ஒரு நாவலும் இல்லை என்றார். ஜெயமோகன் ஏன் பேச்சின் நடுவில் ஓடி வந்தார் என்றால் அதற்கு நான்தான் காரணம். 'காலம்' செல்வம் யாரோ ஒருவருக்கு 'இவன் நமது கூட்டாளி' என்று அறிமுகப்படுத்தி 'என்ன நான் சொல்வது சரிதானே?' என்று என்னைக் கேட்க, 'ஓம் எல்லோருக்கும் கூட்டாளிதான், அது சரி நமது கூட்டணி இப்போது காலச்சுவட்டுடனா அல்லது ஜெயமோகனுடனா?' என்று நான் திரும்பிக் கேட்கும்போதுதான் சும்மா இருந்த ஜெயமோகனும் பேச்சினிடையே வந்துவிட்டார். மற்றப்படி, நான் முன்பு வேறு சில பதிவுகளில் குறிப்பிட விரும்பினாலும், பல நண்பர்களுக்கு அவர்கள் மீது நான் எழுத்தில் வைக்கும் விமர்சனங்கள் தெரிந்தும், விமர்சனம் வேறு நட்பு வேறு என்று இயல்பாய் அவர்கள் பேசுவதை பெரிய விடயமாகக் கருதுவதைக் குறிப்பிடவேண்டும்.. காலம் புத்தகங்களுக்கு விமர்சனங்கள் வைத்திருக்கின்றேன். தேவகாந்தனின் 'கதா காலம்' புத்தக வெளியீட்டு விழாவுக்கும் எனது கருத்தை எழுதியிருக்கின்றேன். அ.முத்துலிஙகத்தின் படைப்புக்களை பல பொழுதுகளில் கடுமையாகவே விமர்சித்திருக்கின்றேன். சுமதி ரூபன், திருமாவளவன் போன்றவர்களுடன் சில விடயங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் எவரும் முகத்தைத் திரும்பிக்கொண்டு போகாதது ஆறுதலாயிருந்தது. காலம் செல்வத்தோடு நகைச்சுவையாகக் கதைக்க முடிந்தது. அ.முத்துலிஙகம் 'எப்படி இருக்கின்றீர்? என்றபோது, அவரது சுகம் குறித்து (சற்று சுகவீனமாய் இருக்கின்றார்) கேட்கமுடிந்தது. தேவகாந்தனுடன் 'பறை'யில் புதிதாய் எழுதும் தொடர் பற்றி இரண்டு வரி பேச முடிந்தது. சுமதி ரூபனிடம், இலண்டனில் நடந்த பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது என்று விசாரிக்க முடிந்தது. திருமாவளவன், றஷ்மியின் புதிய
தொகுப்பை காசு வாங்காமலே தந்து வாசி என்று அதே பழைய நட்புடன் இருந்தார்.

கலைச்செல்வன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் மரணங்கள், இன்னும் இந்த நண்பர்களைப் புரிந்துகொண்டு பழகவேண்டும் என்ற தவிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகக்குறைந்தது அவரவர்களின் உடல் நலங்களிலாவது கவனமாக இருங்கள் என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகின்றது. சேரனைச் சிலவருடங்களுக்கு முன் கண்டதற்கும் இப்போது பார்ப்பதற்கும் தன்நிலை குறித்து கவலை இல்லாது திரிவது போன்ற எண்ணத்தை தர, சற்றுக் கவலையாய் இருந்தது. நாங்கள் வெளியே நிற்கவும் கூட்டமும் முடிந்துவிட்டது. எம்.கே மகாலிங்கம் என்னைக் கண்டுவிட்டு, 'உம்மையும் இரண்டு வரி பேசச் சொல்லலாம் என்று தேடினால் நீர் வெளியில் வந்துவிட்டீர்?' என்றார். எழும்பி நின்று இரண்டு வரி பேசுவதற்குள், நாலைந்துமுறை பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், 'எனக்கு சு.ராவோடு தனிப்பட்ட அனுபவம் என்று ஒன்றுமில்லைத்தானே' என்று சமாளித்துவிட்டேன்.

கண்ணன் குறிப்பிட்ட மாதிரி, சு.ரா ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கின்றார் போலத்தான் எனக்கும் தோன்றியது. மேலும் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்க்காத பிக்கல் பிடுங்கள் இல்லா வாழ்வையும், தனது பிள்ளைகளையும் பிறர் குற்றஞ் சொல்லமுடியாத நிலையில் ஒரு தகப்பனாய் நின்று வளர்த்துவிட்டும் போயிருக்கின்றார். அந்த வகையில் சு.ராவின் வாழ்வு எனக்கு நிறைவளிக்கிறது. பா.அ.ஜயகரன் குறிப்பிட்ட மாதிரி, இனித்தான் சு.ராவை நிரம்ப (மீள)வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்ற கருத்தைத்தான் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியெ எனக்காய் கொண்டு வந்த செய்தியாக இருந்தது. தமது மறைவின் பின்னும் தமது இருப்பை அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் விட்டுச் செல்பவர்கள் உயர்ந்த படைப்பாளிகள், சு.ராவும் அவர்களில் ஒருவர்.

Saturday, October 22, 2005

sura
இன்று பழைய குப்பைகளைக் கிளறியபோது கண்ணில்பட்ட நாட்குறிப்புப் பதிவொன்று. நான் ஒருபோதும் நாட்குறிப்புக்கள் தொடர்ந்து எழுதியவனல்ல. 2000ம் ஆண்டு நாட்குறிப்பைப் பார்த்தபோது, நாலைந்து பக்கங்கள்தான் எழுதியிருந்தது தெரிந்தது (பிறகு வந்த வருடங்களில் அந்த நாலைந்து பக்கங்களைக்கூட எழுதியதில்லை). சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புக்கள் வாசித்தபோது எழுதிய குறிப்பாய் இருந்ததால், ஒரு நனவிடைதோய்தலாய்ப் பார்க்கமுடிந்தது.

file1
இந்தக் 'கவிதையும்' கிட்டத்தட்ட அந்த ஆண்டுகளில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இப்போது நிதானமாய்ப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியின் 'உன் கவிதையை நீ எழுது'வின் பாதிப்பு (அல்லது அப்பட்டமான கொப்பி மாதிரியும்) இருந்ததாயும் தெரிகிறது.McMaster University தமிழ் மாணவர்கள் வெளியிட்ட (விழிப்பு) புத்தகமொன்றிலும், நண்பன் ஒருவன் ஆசிரிய குழுவில் இருந்தபோது இது வெளிவந்திருந்தது. இப்படி இந்தப்பொழுதில் எழுதியிருப்பேனா என்பது ஒருபுறமிருக்க, அந்தக்காலத்தில் எப்படியிருந்திருக்கின்றேன் என்று ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதால் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

ஜந்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளை ஒருமுறைச் சுரண்டிப்பார்க்கவும், சுந்தர ராமசாமியின் அந்தக்காலத்துப் பாதிப்புப் பற்றியும் நினைவு கொள்ளவும் இந்த இரு குறிப்புக்களும் உதவுவதால், அவற்றுக்கும் நன்றி :-).

Saturday, October 15, 2005

நினைவு கூர்தல்: சுந்தர ராமசாமி

PA140010

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-சுந்தர ராமசாமி (1985)