Tuesday, July 31, 2007

நயாகராவும், Ninda Noyana Handawa..ம்

அண்மையில் இங்கு வந்திருந்த ரோஸாவசந்தோடு நயாகராவிற்கு பயணித்தபோது...



















-----------------
நல்ல வெயில் பொழுதில், நயாகராவில் சாரல் முகம், கைகள் எங்கும் பட்டபொழுது மிக இதமாய் இருந்தது. அப்படியே இந்தப்பாடலும் (Ninda Noyanda Handawa) எவரையோ நினைத்து என் நினைவலைக்குள் வந்து விழுந்தது.

Ninda Noyanda Handawa


கல்வி கற்பதற்காகத் தோழி பிரிந்து செல்கையில் இளைஞன் பாடுவதாக அமைவது. Ninda Noyanda Handawa... Sondurui da mona tharam...'உறக்கமற்றுப்போன பின் மாலைப்பொழுதுகள் எவ்வளவு இரம்மியமானவை' எனத் தொடங்கும். 'நீங்கள் போவதாயிருந்தால் நான் வேதனைப்படாதிருத்தல் சாத்தியமில்லை... ஆனால் அனைத்தையும் தாங்கியபடி அடுத்த விடுமுறைக்கு நீங்கள் வரும்வரையும் காத்திருப்பேன்'. THass vasaa....Kandulu salaa..'மூடிய விழிகளுடன் கண்ணீர் உகுத்தபடியிருக்கின்றேன்....பார்வையால் புன்னகைத்து, உணர்வுகளால் உரையாடியவள்....தனது வாசத்தை மட்டும் விட்டுச் செல்கிறாள்.

(பாடலைப்பற்றி....தோழரொருவர் எழுதிய கடிதத்திலிருந்து)

Saturday, July 14, 2007

மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா...

..உடன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கூத்து & இசை நிகழ்ச்சி
-வானமற்ற வெளி-
காலம்’ சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு


மூன்று புத்தகங்களின் வெளியீடு
‘கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள்’ -செழியன்
வாத்து’ - சோலைக்கிளி
‘வீழ்ச்சி’ - சீனுவா ஆச்சுபே தமிழில்: N.K.மகாலிங்கம்


தென்மோடி நாட்டுக்கூத்து
வீரர்கள் துயிலும் நிலம்(வீரபாண்டிய கட்டபொம்மன் கூத்தின் சுருக்கம்)


மூலப் பிரதி பாசையயூர் புலவர் நீ.மிக்கோர்சிங்கம்
அண்ணாவி வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிரதி ஆக்கம், தயாரிப்பு: செல்வம் அருளானந்தம்
நெறியாள்கை:சவரிமுத்து



நெஞ்சினில் ஊறும் நினைவுகள் (இசை நிகழ்வு)
ஆரணியா பாபு
வயலின்: ஆதிரை சிவபாலன், கீபோட்: முகுந்தன் சிவபாலன்,

தபேலா: ஜோன்சன்


சேரன் & அ.முத்துலிங்கம்

Saturday, July 07, 2007

சில நிகழ்வுகள்: மப்பும் மந்தாரமுமான படங்கள்

Beats, Breaks & Culture



பலவேறு நாட்டுக் கலாச்சார நிகழ்வுகள் ஒன்ராறியோ வாவியோடு ஒட்டிய ரொரண்டோ பெரும்நகர்ப்பகுதியில் கோடையின் ஒவ்வொரு வாரவிறுதிகளில் நடைபெற்றுவருகின்றது. களரி உட்பட தென்னாசியா நிகழ்வுகளும் நடைபெறுகின்றது என்றறிந்து வெள்ளிக்கிழமைபோக, நாங்கள் அரங்கை அடையமுன்னரே அந்நிகழ்வுகள் முடிவடைந்திருந்தது. எனினும் தொடர்ச்சியாக வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன.



Jazz நிகழ்வு மிக அற்புதமாக இருந்தது. இதற்கு முன்னரும் -பத்து நாட்களாய்- தொடர்ந்து ரொரண்டோவில் நடந்துகொண்டிருந்த Jazz festival நிகழ்வொன்றில் கலந்துகொள்ள முடிந்திருந்தது ஒரு இனிய அனுபவம்.



பொழுது சாயும் பின் அந்தி நேரம், வாவி நீரில் அசையும் படகுகள், மென்மையாக வீசும் காற்று இவை அனைத்தும் காதலிக்கும் மனதை மட்டுமில்லை, முரண்பட்ட மனிதர்களைக்கூட நேசிக்கமுடியுமென்றதொரு கதகதப்பான மனநிலையைத் தந்ததென்பது உண்மைதான். (பக்கத்தில் காதலியொருத்தி இருந்து Jazzஐ இரசித்தால்/slow stepsல் ஆடினால் அதைப்போலொரு சொர்க்கமுமில்லை)



இன்னிசை மழை


(எஸ்.பி.பாலசுப்பிரமணியம்)

சென்ற வாரவிறுதியில், எஸ்பிபியும், ஜேசுதாசும் (முதன்முதலாய் கனடாவில் இருவரும் ஒரே அரங்கில் சேர்ந்து பங்கேற்கும்) நிகழ்வொன்று நடந்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்வைப்போல இதைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று ஆவல் எனக்கு இருக்கவில்லை. ஒரு நண்பர், இறுதிநேரத்தில் அவரது துணைவியார் வரமுடியாத காரணத்தால் தன்னோடு சேர்ந்து வருகின்றாயா என்று வினாவினார். இலவசமாகக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏன் தவறவிடுவான் என்று போயிருந்தேன்.


(எஸ்.பி.பி & ஜேசுதாஸ்)

நண்பருக்கு என்னைவிட பதினைந்து வயது கூடவாயிருக்கும் (அவருடன் உரையாடும்போது அவரது முன்னாள் இயக்க அனுபவங்களைக் கேட்பது/முரண்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று :-) ). எனவே அவருக்கு இடைக்கால (80களின் பாடல்கள்) பாடப்படுவதைக் கேட்பது பிடித்தமாயிருந்தது. பெரிய அரங்குக்கு (15,000-20,000; ஏ.ஆர்.ஆரின் நிகழ்வும் இங்கேதான் நடந்தது) ஜேசுதாஸின் குரல் எடுபடவில்லை; எஸ்பிபியின் குரல்தான் பொருத்தமாயிருந்தது.


(எஸ்.பி.பி & சித்ரா)

எனக்கு ஆடவைக்கவேண்டிய பாடல்கள் வேண்டியிருந்தது அல்லது நித்திரை வரும்போல இருந்தது. ஆனால் அவர்கள் 80களில் ஹிட்டாக இருக்கக்கூடிய பாடல்களையே பாடாது தவிர்த்திருந்தது நண்பருக்கும் (எனக்கும்) ஏமாற்றமாயிருந்தது. கடைசியாக பல்லேலக்காவிற்கும், தளபதி பாடல்களுக்கும் தான் உற்சாமடைந்து நிகழ்வைக் கொஞ்சமாகவேனும் கொண்டாடக்கூடியதாக இருந்தது. ஜேசுதாஸ் பாடியதில், 'கடலினக்கரை போயினரே'யும், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையேயும்' பிடித்திருந்தது. பாடகர் மகேஷ், 'அப்படிப்போடு', 'திருட்டுப்பயலே' போன்ற பாடல்களைப் பாடி என்னைப் போன்றவர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தினார். மற்றது சின்மய் அழகாக இருந்தார்.


(பா.விஜய்)

இசைநிகழ்வில், பா.விஜய் நிகச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். நயாகராவில் நனைந்தபோது, சுடச்சுட கோப்பி தயாரித்துமாதிரி ஒரு நீண்டகவிதையை தான் எழுதியதாய் வாசித்துக் காட்டினார். நயாகரா ஒரு ஆணா, பெண்ணா என்ற தத்துவ விசாரம் வந்ததாய் அதில் கூறி (என்னை) விசர்ப்படுத்தினார். வழமைபோல் -நம்மைப்போன்ற அனைத்து ஆண்களும் கூறுவதுமாதிரி- நயாகரா பெண்தான் என்று ஆராய்ச்சி செய்து பா.விஜயும் பொறுமையைச் சோதித்தார் (வைரமுத்துவின் -ரிதம் பட- 'நதியே நதியே' என்ற நல்லதொரு பாடல், பா.விஜயின் கவிதையைக் கேட்டபோது நினைவுக்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை). பா.விஜய் பெண்ணுக்குரிய குணங்களை ஒப்பிட்டுக்கொண்டுவந்துவிட்டு, திடீரென்று ஆஜானுபான நதி என்று உணர்ச்சிவசப்பட்டிருந்தார். தமிழ் (ஆண்) இலக்கியத்தில் பெண்ணை விபரிக்க ஆஜானுபான என்ற சொல்லை எப்போது மாற்றியெழுதினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை சொல்லப்பட்டு வந்துகொண்டிருக்கும், 'பெண்மை'க்குரிய குணாதிசயத்தை, இப்படி மாற்றியமைத்திருந்தால் அது நல்லதும் கூடத்தான்.


நட்சத்திரத் திருவிழா


சுடச்சுட நல்ல ரிதத்தோடு தயாராகும் கொத்துரொட்டி

நட்சத்திரத் திருவிழா என்றபெயரில், இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் வானொலி ஒன்று திறந்த/மூடிய அரங்குகளில் வர்த்தகச்சாவடிகள், விளையாடு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள் என்று இன்றும் நாளையும் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். அண்ணாவின் மகன், spelling bee நிகழ்வில் பங்குபற்றியதால் அவனின் நிகழ்வைப் பார்க்கவும், ரொரண்டோ பொம்பிளைப் பிள்ளைகளைச் சுகம் விசாரிக்கவும் சென்றிந்தேன். 'ஊருக்குள்ளே வயசுப்பெண்ணுகள் சவுக்கியமா' என்று இந்திரா பட, 'மாரிமுத்து' பாடலை தயவுசெய்து நினைவில் கொண்டுவரவும். இளநீர், நுங்கு, முழுநெல்லிக்காய், ஜம்புக்காய், ரம்புட்டான் என்று அரிதில் கிடைக்காத சிலவற்றை உருசித்துப் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்ததைத் தவிர வேறு ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு நடக்கவில்லை. பின்னேர நிகழ்வில், கிளித்தட்டு, வழுக்குமரம் ஏறுதல், தலையணைச் சண்டை(?), உதைபந்தாட்டம் போன்றவை இருப்பதாகச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் நின்று இரசிக்கும் பொறுமையில்லாது, வாரவிறுதி நித்திரை என்னையும் எனது நண்பனையும் வீட்டுக்கு அடித்துத் துரத்தியிருந்தது. என்றாலும் எங்கள் ரொரண்டோ கேர்ஸைப் போல அழகானவர்கள் உலகில் அரிதுதான் (அஸினைத்தவிர).


விநோத உடைப்போட்டியில்



'வசீகரா' பாடிக்கொண்டிருந்த ஒரு பதின்மவயதுப் பாடகி



சுடச்சுட வறுத்துத்தந்த கச்சான்



வர்த்தகச் சாவடிகளிலேயே நன்றாக வியாபாரம் போய்க்கொண்டிருந்த பகுதி உணவுப்பகுதிகள்தான்.

Sunday, June 24, 2007

Gay Parade - Toronto

June 24, 2007

Unstoppable: மேலதிக விபரங்களுக்கு


P6290426


P6290398


P6290404



P6290418


P6290411


P6290420


P6290433


P6290405


Pride Paradeற்குப் போய் படங்களை ஆரம்பக்கட்டத்தில் எடுத்துக்கொண்டிருந்தபோதே புகைப்படப்பெட்டி என்னோடு மல்லுக்கட்டத்தொடங்கியது. சென்றவருடம் கரீபானாவில் அழகாய் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை zoom செய்து படமெடுத்துக்கொண்டிருந்தபோது குறுக்காலை நடந்துபோன இன்னொரு பெண் தவறுதலாகத் தட்டியதால் அப்படியே சீமெந்துத் தரையில் கமரா விழுந்திருந்தது. திருத்தியெடுத்திருந்தாலும் முன்னர் போல இயங்குவது இல்லை; விலை சற்று அதிகமாய் வாங்கியதால் உடனே குப்பையில் எறியவும் மனமில்லை. எனவே இன்றும் ஆரம்பக்கட்டத்தோடு புகைபடப்பெட்டி உறங்குநிலைக்குப் போயிருந்தது. ஏதோ கொஞ்சப்படங்களாவது எடுக்க முடிந்ததே என்றவளவில் ஆசுவாசப்படவேண்டியதுதான்.

Friday, June 22, 2007

கியூபாவில் கிள்ளியவை மற்றும் SICKO

கியூபாவில் கடைக்கு, வங்கிக்கு, மற்றும் போகின்ற இடங்களில் நாங்கள் சந்தித்தவர்களில் அநேகர் நாங்களும் கியூபர்கள் என்றவகையில் எங்களுடன் ஸ்பானிஷ் மொழியிலேயே உரையாடத் தொடங்கிருந்தார்கள். எமக்கு சென்னோரிட்டா, கிராசியஸ், சர்வேசா போன்ற 'பொறுக்கி'யெடுத்த சொற்களைத் தவிர வேறோன்றும் ஸ்பானிஷ் மொழியில் தெரியாது; அத்துடன் நாங்கள் கியூபர்கள் அல்ல என்றபோது, பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்று அநேகர் சொல்லியிருந்தார்கள். ஆகவே அடுத்த முறை, கியூபா போகின்றபோது ஸ்பானிஷ் மொழி அறிந்துகொண்டுபோய் கியூபர்களாக மாறிக் கலக்குவதாய்த் தீர்மானித்திருந்தோம். இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் தந்த உற்சாகத்தில் நண்பன் பயணியர் கையேட்டை விரித்துவைத்து ஒன்றிலிருந்து பத்துவரை ஸ்பானிஷில் சொல்லக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தான் என்பது வேறுவிடயம். அங்கிருந்த மக்கள் மிக நட்பாயிருந்தார்கள்; அதேபோன்று பலருக்கு 'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை' போல கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெயரும் விருப்பமும் இருக்கிறது.

கியூபாவில் நின்ற நாட்களின் மலரும் நினைவுகளை அவிழ்த்தால், நிறைய மலர்கள் நறுமணத்துடன் வலையில் மலரக்கூடும். அதெல்லாம் இப்போது வேண்டாம். அங்கே கொய்த சிலவற்றைப் பதிவு செய்கின்றேன். இரண்டு கால்களுடன் அலைந்து திரிந்த 'இயற்கை'யை இரசிக்கவே எங்களுக்கு நேரம் போதாமல் இருந்தபோது புகைப்படப்பெட்டிக்குள் வந்த இயற்கை அப்படி இப்படித்தான் இருக்கும். மன்னிக்குக!

இப்பொது ஏன் கியூபா பற்றி நினைவுக்கு வந்தது என்றால், மைக்கல் மூர் (ஃபரனைட் 9/11ற்கு பிறகு) SICKO என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கின்றார். எப்படி அமெரிககாவில் Health System இருக்கின்றது என்பதை கியூபாவின் Health System யோடு ஒப்பிட்டு எடுத்திருக்கின்றார். கியூபா புரட்சியின் பின், ஃபிடல் காஸ்ரோ போன்றவர்களால் கியூபாவின் மருத்துவ அமைப்பு மிகச்சிறப்பாக (அனைவருக்கும் இலவசமாக) இயங்கிவருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. இம்மாத இறுதியில் திரையரங்கிற்கு வரவிருக்கும் SICKOவை முடிந்தால் பாருங்கள். இணையத்தில், உங்கள் படம் திரையங்கில் வெளியிடமுன்னரே வெளிவந்துவிட்டதே என்று மூரிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு அது பற்றி கவலையில்லை, தனது பெயரைக் களவெடுத்து தங்களது படம் என்று போடாமல் வேறு என்ன செய்தாலும் பரவாயில்லை. படம் எடுத்ததன் நோக்கமே பரவலாய் பலரைப் போய்ச்சேரவேண்டும் என்று மூர் குறிப்பிட்டிருந்தார். 9/11 ஆல் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளையும் கியூபாவிற்கு அழைத்துச்சென்று அங்கே படமெடுத்தத்தற்காய் அமெரிக்க அரச இயந்திரத்தால் தீவிர விசாரணைக்கும் மைக்கல் மூர் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


































Tuesday, June 19, 2007

சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வு

-தமிழ்ச்செல்வியை முன்வைத்து-

ஷ்ரேயா (தமிழ்ச்செல்வி) அறிமுகமாகும் காட்சி நமது தமிழ்ப்பண்பாட்டிற்கு முன்னுதாரணமாய்க் கொள்ளக்கூடியது. ஓம்...(இது கந்தன் அருளிய பிரணவமந்திரம் அல்ல) கோயில்தான் ஷ்ரேயா அறிமுகமாகின்றார். அவர் அந்தப்பொழுதில் அணிந்திருந்தது சேலையா அல்லது half--saree யா (பாவாடை& தாவணியா) என்பது ஆழமான ஆய்வுக்கு வழிகோலக்கூடியது.

இரண்டாவது காட்சியில் ஷ்ரேயாவைப் 'பொண்ணு பார்க்கப்படுவதனான படலத்தில்' ஆடுகின்றார், பாடுகின்றார்..அவ்வாறு எங்களைப் பயமுறுத்திப் பார்த்துத் தோற்கின்றார். படத்தில் முதல் முதலாக அவரது இடுப்புத் தாவணி கொஞ்சம் விலகுகிறது.

அடக்க ஒடுக்கமாய் சாறி கட்டும் தமிழ்ப்பெண்ணாகவிருக்கும் ஷ்ரேயா (அதனாற்றான் சிவாஜி சார் காதலிக்கிறார்). சிவாஜியின் காதலியானவுடன் இடுப்பு இன்னபிற cleavages தெரிய ஆட்டமாடுகின்றார். இதன் மூலம் தமிழ் கலாசார பெண்கள், ஆண்களைக் காதலிப்பார்களாயின் அவர்களுக்கு எந்த (அரைகுறை) ஆடையும் அணியும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற போதனையை இப்படம் கற்றுத்தருகின்றது. காதலித்தவுடன் உரிமை, உடமை, பொஸஸ்சிவ்னெஸ் இருபாலார் 'இடை'யும் கூடுமென்று அறிவுஜீவிகள் கூறுகின்றார்கள். ஆனால் நமது தமிழ்க் கலாசாரத்தில் தொப்புள் என்ன பரப்பளவில் தமது காதலிகளுக்கு இருக்கின்றது என்று பொதுவெளியில் காட்டவும் தயங்காத மிகத் திறந்த மனதுடையவர்களாக தமிழ் ஆண் சிங்கங்கள் இருக்கின்றார்கள் என்பதை இப்படம் தொப்புள் சாட்சிகளுடன் ஆவணப்படுத்துகின்றது. அந்தளவில் கல்தோன்றா மண்தோன்றா மூத்த குடிகள் நாமென்பதையும் நாகரிகத்தைப் பிறருக்கு கற்றுத்தந்தவர்கள் நாமே என்ற வரலாற்றை மீளவும் தூசி தட்டவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

ஜோசியத்தின்படியே எல்லாம் நிகழும் என்றபடியால், நீங்கள் காதலித்தாலும் ஜோசியம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டும். டீப்பாய் காதலித்தால் என்ன, ரிப்-ரொப்பாய் காதலித்தால் என்ன, ஜோசியம்/ஜோசியர் காதலிக்கக்கூடாது என்றால் காதலிக்கக்கூடாதுதான்...இல்லையெனில் பெரும் பாரதூரமான் விளைவுகள் உருவாகும், அத்றகு முக்கிய உதாரணமே ஷ்ரேயாவின் கண்ணில் வரும் கிளிசரின் கண்ணீர்த்துளிகள் (அல்லது தமிழ்க் கலாசாரத்தின் கறுப்புத்துளிகள் எனவும் சொல்லலாம்)

ஷ்ரேயா மெல்லிய நீல சேலையில் அழகாக இருக்கின்றார். ஆகவே இனி அனைத்துத் தமிழ்ப்பெண்களும் மெல்லிய நீல நிற சாறியைத் நமது தமிழ் அடையாளக் கலராக ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை....அது see-throughவாய் இருக்கவேண்டும். பின் பக்க blouse, emptyஆக இருத்தல் விருப்பத்தக்கது. எனெனில் பிறகு தொப்புளுக்கு ஒரு நீதி தமக்கு ஒரு நீதியா என முதுகு கோபிக்கக்கூடும்.

ஷ்ரேயாவுக்கு காதல் வரும் காட்சியில் ரெயினுக்கும் முன் சிவாஜி சாரின் கால் (ஓமொன்று சொல் இல்லாட்டி தற்கொலை என்ற சபதத்தின்படி)தண்டவாளத்தில் சிக்குகிறது. அந்தப்பெரிய உருப்படியைக் கண்டு நிற்பாட்டமுடியாத வண்டலூர் ரெயின் ஷ்ரேயா தன் தாவணியைத் தூக்கிப்போட்டு blouse யோடு ஓடும்போது மட்டும் நிற்கிறது (ஆகவே அந்த ரெயின் ஒரு ஆண் என்பது நிரூபணமாகிறது). அப்படியே குனிந்து நிற்கும் ஷ்ரேயாவை கமரா மேலிருந்து தன் கலைத்தாகத்தோடு படம் எடுக்கிறது இந்நூற்றாண்டில் தவறவிடக்கூடாத நூறு ஒளிப்படங்களில் ஒன்றென ரைம்ஸில் வரக்கூடிய அரிய காட்சி அது.

தொப்புள் காட்டாவிட்டால் தமிழ் ஆண்கள் டூயட் பாடமாட்டார்கள் என்பதால் தொப்புளைக் காட்டாமல் ஒருபாட்டும் ஷ்ரேயா ஆடிவிடவில்லை.. அவ்வப்போது தடாகத்தில் மெல்லிய ஆடைகளுடன் நீந்தவும் செய்கிறார். ஆனால் தலை துவட்டும் காட்சியைக் காணவில்லை. அவருக்கு 'ஜலதோசம்' பிடித்துவிடுமே என்று படம் முடியும்வரை உங்கள் உள்ளம் -என்னைப்போல அதிர்ந்தால் - நீங்கள் ஒரு மனிதாபிமானமுள்ள தமிழ் ஆண் என்பது உறுதிப்படுத்தப்படும்..

இடைவெளிக்குப் பின் நெடும் நேரமாய் ஷ்ரேயாவைக் காணவில்லை. சிலவேளை ஸ்கிரினிலிருந்து வெளியே வந்து ஒய்வெடுக்க அரங்கின் இருக்கையில் எங்காவது இருக்கின்றாரோயெனத் தேடத்தொடங்கினேன். மெல்லிய இருட்ட்டிலும் கன ஷ்ரேயாக்கள் அரங்கில் இருப்பது எனது கண்களுக்கு புலப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் சேலை கட்டியிருக்கவில்லை என்பதாலும் தொப்புளின் பரப்பை வெளியே பறைசாற்றிக்கொண்டிருக்காததாலும் அவர்கள் தமிழ்ப்பெண்களாக இருக்கச் சாத்தியமில்லை. (ஆனால் தமிழில் கசமுசாவென்று கதைத்துக்கொண்டிருந்தார்கள்).

சிவாஜியின் laptop சிபிஜக்கு காட்டிக்கொடுத்து சின்னத்திரை வில்லி மாதிரி வந்து ஷ்ரேயா ஒருகாட்சியில் கண்ணீர் வடிக்கிறார். அப்போது மட்டும் அவரது இடுப்பு தாவணியால் மறைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்காட்சியில் ஷ்ரேயா ஸ்கிரினில் hi hi (or bye bye) என கையைக்காட்டுகிறார். மூன்று மணித்தியாலமாய் தமிழ்க் கலைத்தாகம் கொண்ட ஒரு படத்தைப் பார்த்த்தால் கையில் வைத்திருந்த ஆறு ரிக்கெட்டுக்களை ரென்சனின் சுக்குநூறாக கிழித்திருந்தது கூட எனக்குத் தெரியவில்லை என்பதில் இந்தப்படத்தின் அருமை பெருமை உங்களுக்குப் புரியும். அருமையான படத்தில் அற்புதமாய் நடித்த ஷ்ரேயாவுக்கு அந்த கடதாசித்துண்டுகளை ஸ்கிரினை நோக்கி எறிந்து எனது அன்பைக் காணிக்கையாக்கினேன்.

------------------
நானாவது பரவாயில்லை, எனக்கு ஓசியில் ride கொடுத்து ஓசியில் ரிக்கெட்டும் எடுத்துத் தந்த நண்பனுக்கு எப்படியிருக்கும்? அவனுக்காகவே இந்தப்பதிவு சமர்ப்...பணம்!

தோழா, ஷ்ரேயா போல ஒரு தமிழ்ப்பெண் உனக்குக் கிடைக்க கடவுக.
------------------

சிவாஜி சாருக்கு அவனவன் பாலாபிஷேகம், பூந்தி இலட்டு அபிஷேகம், நடுரோட்டில் ஆடறுத்து ரத்தாபிஷேகம் என்று செய்யும்போது, நம் தமிழ்ப்பெண் ஷ்ரேயாவிற்கு என்னாளானது... ஒரு பெங்குவின் ஆட்டம்!

.