Sunday, June 10, 2007

ஏ.ஆர்.ரஹ்மான் - ரொரண்டோ

-June 10, 2007-

ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி 7.30 Air Canada Centreல் ஆரம்பிக்கும் என்று நுழைவுச்சீட்டு பயமுறுத்திக்கொண்டிருக்க, காருக்கான தரிப்பிடம் கிடைக்காது மெட்ரோ ரொரண்டோவில் அவதிப்பட்டபடியிருந்தோம். ஏ.ஆர்.ஆர் தனது நிகழ்ச்சியை நேரத்திற்குத் தொடங்கிவிடுவார் என்பதைவிட, நிகழ்ச்சிக்கு வருகின்ற பெண்களை நாம் நேரத்திற்குச் சென்று வாசலில் நின்று வரவேற்காது போனால் அவர்களின் முகம் வாடிப்போய்விடுமே என்ற கவலையே அதிகம் எமக்குள் இருந்தது. நண்பனும், இப்படிப் பெண்கள் -ஆடை, அலங்காரத்திற்கு- நேரம் மினக்கெடுத்தி வெளிக்கிட்டு வரும்போது நாம் அவர்களை பார்த்து இரசிக்காவிட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று எனது அலைவரிசையில் நின்று உரையாடிக்கொண்டிருந்தான் (ஆனால், நண்பா செப்ரெம்பர் -உன் registrationற்குப் பின்- நாம் இப்படியெல்லாம் கலர் பார்ப்பதை ஆய்வுகள் செய்யமுடியுமா என்ன?)

P6150140

ஒரு மாதிரி காரைப் பார்க் செய்துவிட்டுப் போனால் இருக்கைகளைச் சரியாகக் காட்டும் பெண் ஒருவர், 'நீ அணிந்திருக்கும் ஆர்ஜெண்ரீனா ரீசேர்ட் நல்லாயிருக்கிறது' என்று என்னை குளிரவைத்து நண்பனைக் கொதிக்கவைத்தார். அந்த ஸ்பானிஷ் பெண்ணோடு 'கடலை போடுவதா'? அல்லது இருக்கைகளில் எங்களைக் காணாது ஆம்பல் முகம் சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதா என்று நினைப்பதற்குள் நிகழ்வு ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டது.

P6150161

நிகழ்வில் அதிகமாய் ஹிந்திப் பாடல்களைப் பாடினார்கள் (தமிழர்கள் பெரும்பான்மையாய் வருவார்கள் என்று தெரிந்தும்/ அரங்கில் இருந்தும்). அதனால் சோர்ந்து போயிருந்த எம்மை முன்னுக்கு இருந்த வட இந்தியாப் பெண்களும், பின்னுக்கு இருந்த தமிழ்ப்பெண்களும் ஆடியாடி, கத்திக்குழறி(?) உற்சாகப்படுத்தியபடியிருந்தார்கள். நணபனுக்கு *சர்வேசா அருந்தாமலே உருவேறுதல் நிகழ்ந்து, தமிழ் ஹிந்தி என்று வேறுபாடில்லாமல் எல்லாப்பாடல்களுக்கும் சாமியாடத்தொடங்கியிருந்தான். நான், அவனுக்கு அவ்வப்போது கூக்குரலிலிட்டு, ரிதம் ஏற்றி வேப்பிலை அடித்துக்கொண்டிருந்தேன். 'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே....ஹம்மா, ஹம்மா, ' என்று ரஹ்மான் உச்சஸ்தாயியில் பாடத்தொடங்கும்போது எனக்கும் உருவேறியிருந்தது; கஞ்சா அடிக்காமலேயே நானும் எங்கையோ உயர உயரப் பறக்கத் தொடங்கியிருந்தேன்.

P6150167
ஆடிக்கொண்டிருக்கும்போது, ரஹ்மானின் பாடல்களைப் போல, எனக்குப் பிரியமான பெண்ணும் ஏன் இவ்வளவு குளிர்மையாக மனதிற்குள் வந்துபோய்க்கொண்டிருக்கின்றாள் என்பது என்றுமே புரிவதில்லை....ல்லை...லை.

P6150172

நாலைந்து வருடங்களுக்கு முன் ரஹ்மானின் பாடல்கள் மீதிருந்த பைத்தியம் இப்போதில்லை. மேலும் சிவாஜி படப்பாடல்களில் அநேகமானவற்றைப் பாடியதைத் தவிர்த்து வெவ்வேறு தமிழ்ப்படங்களிலிருந்து சில பாடல்களைப் பாடியிருக்கலாம். சிவாஜியில் 'ஆம்பலை'த் தவிர மிச்சம் எல்லாம் வீணான பாடல்கள் என்பது எனது துணிவு.

P6160190

இப்படியான நிகழ்ச்சிக்குப் போயும், இறுக்கமாய் இருந்து இரசிக்கும் elite மனநிலையை, தமிழ்க் கலாசார பின்புலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்று நானும் நண்பனும் இடையிடை அலசிக்கொண்டிருந்தோம். பார்ட்டிகளுக்குப் போய் தண்ணியடித்து மனுசன்மார் டான்ஸ் ஆடி fun அடித்துக்கொண்டிருக்கும்போது, இறுக்கமாய் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களிலிருந்து இந்த உரையாடலை ஆரம்பிக்கலாம்.

P6150155

அந்தவளவில் வட இந்தியக் கலாசாரம் வித்தியாசமானது. பெண்களையும் தமது கொண்டாட்டங்களில் அநேக இடங்களில் உள்வாங்கிகொண்டிருப்பதாய் நான் வாசித்தளவில் அறிந்து வைத்திருக்கின்றேன். நல்லதை எவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். வறட்சியான தமிழ்க்கலாச்சாரம் பற்றி பின்னர் உரையாடலாம். எனெனில் எனக்கு இப்போது தூக்கம் வருகின்றது.

*beer in spanish

சிவத்தம்பி பவளவிழா

-காலம் சிறப்பிதழ் வெளியீடு & புத்தகக் கண்காட்சி-
ஜூன் 09, 2007

siv1
சிவத்தம்பிக்காய் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிலவருடங்களுக்கு முன்பாய் மூன்று நாட்கள் (?) நடந்த கருத்தரங்கிலிருந்தும், சிவத்தம்பி கூத்துப்பற்றி விபரமாய்க்கூறும் ஒளிப்படமும் காட்டப்பட்டது. இவற்றிலிருந்து நிறைய விபரங்களை சிவத்தம்பி குறித்து அறிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது. முக்கியமாய் கூத்துப்பற்றி அவர் விபரமாய் உரையாடுவது பல விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் அழைத்துச்செல்லக்கூடியவை. கூத்துப்பற்றிய சிவத்தம்பியின் விபரணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இப்படி ஒரு தமிழர் அழகாய் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கின்றாரே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது முடிவில் இயக்கம் தர்மஸிறி பண்டாரநாயக்கா என்று போடப்பட்டபோது, அட அதுதானே என்ற உணர்வு மனதிற்குள் வந்ததையும் குறிப்பிடத்தான்வேண்டும்.


siv13
'காலம்' - சிவத்தம்பி பவளவிழா (+ தாசீசியஸ் இயல்விருது) சிறப்பிதழ் வீ.அரசுவினால் வெளியிடப்பட்டபோது...


siv7
சிவத்தம்பியின் பால்ய நணபரொருவர், வீ.அரசு, சந்திரகாந்தன் அடிகள் & தாசீசியஸ்.


siv19
வந்திருந்த பார்வையாளர்களில் ஒருபகுதி.

siv11
உ.சேரன்


siv22
'காலம்' புத்தகக்கண்காட்சியில்...

(நன்றி: Photos by Ramanan - looktamil.com )

இம்முறை விரும்பிய சில புத்தகங்கள் கிடைத்திருந்தன, சில வாங்கமுடியாமற்போயின. சாருவின் 'ராஸலீலா' வாங்கவேண்டும் என்ற ஆவலில் (சாரு எனக்கு தனிப்பட்டு அறிவுறுத்தியபடி :-) ) 'காலம்' செல்வத்திடம் கேட்டபோது, வந்திருந்த ஒரு பிரதியையும் யாரோ ஒருவர் வாங்கிச் சென்றுவிட்டார் என்று கையை விரித்திருந்தார். ஜெயமோகனின் 'கொற்றவை' வாங்கவேண்டும் என்ற விருப்பை அதன் விலை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது :-(.

சில புத்தகங்கள்
(1) வடு - கே. ஏ. குணசேகரன்
(2) மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக்கவிதைகள்) - தமிழாக்கம்: வ.கீதா- எஸ்.வி.ராஜதுரை (தேடிய ஒரு நூல் கையில் கிடைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி)
(3) புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ (மொ-பெ:சா.தேவதாஸ்)
(3) அக்கரைக்குப் போன அம்மாவுக்கு - ஹம்சத்வனி (ஈழத்துக்கவிஞர், 80களின் ஆரம்பத்திலும் மத்தியிலும் தீவிரமாய் இயங்கியிருக்கிறார். தமிழ்ச்செல்வன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தற்சமயம் கனடா, மொன்றியலில் வசித்துவருகின்றார் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து பேசப்படும் ஒன்றிரண்டு ஈழத்து மையப்புள்ளி கவிஞர்களால் காலம் புதைத்த ஒரு கவிஞராக இவர் இருக்கக்கூடும். ஹம்சத்வனியின் சில தொகுப்புகளை வாசித்திருக்கின்றேன். 80களின் ஈழக்கவிதைகளோடு வைத்துப்பார்க்கும்போது அலட்டடில்லாது நல்ல கவிதைகளை எழுதியிருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது)
(5)பெண் வழிகள் (மலையாளப் பெண் கவிஞர்களின் கவிதைகள்)- தமிழில்: சுகுமாரன்
(6) கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா

Friday, June 01, 2007

தமிழியல் மாநாடு

-வெள்ளிக்கிழமை-

P6050110

'புலம் பெயர் சூழலில் தமிழ் மொழி கற்றல்/கற்பித்தல்' அமர்வில், பார்வதி கந்தசாமி, குலம் சண்முகம் & செல்வா கனகநாயகம்

P6050111

பார்வையாளர்களில் ஒரு பகுதி

P6050118

சுமதி ரூபன், அ.மங்கை, வீ.அரசு & சித்திரலேகா மெளனகுரு

P6050117

டி.பி.எஸ்.ஜெயராஜ், சேரன் மற்றும் பார்வையாளர்கள்

P6050122

சென்ற ஆண்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாய் வெளியிட்டபோது பொ.கனகசபாபதி, சேரன் மற்றும் சிலர்.

P6050114

அமர்வுகள் நடைபெற்ற வளாகம்.

Wednesday, May 30, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு இரத்தும்...

இதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்

எதிர்வரும் ஜூன் 02 நடைபெற இருந்த வலைப்பதிவர் சந்திப்பு -தவிர்க்கக் கூடிய காரணங்களால்- இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

siva1

மற்றும்படி -தொடர்புகொண்ட- தமிழியல் மாநாட்டுக்கு சமூகமளிக்கும் நண்பர்களைச் சந்திக்கலாம். வேறு சில வலைப்பதிவுகள் எழுதாத நண்பர்களும் வருகை தருவார்கள் என நம்புகின்றேன். வலைப்பதிவர்கள் என்ற தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே தவிர்க்கப்படுகின்றது. அவ்வளவே :-).

siva3

--------------------------------

வலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன். என்கின்றபோதும் நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.

Wednesday, May 16, 2007

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு?

வருகின்ற மே 31-ஜூன் 02 வரை தமிழியல் மாநாடு ரொரண்டோவில் நடைபெறவுள்ளது. சென்ற முறை கட்டணம் இல்லாது அனுமதித்தவர்கள், இம்முறை மதியவுணவு தருகின்றோம் கட்டணம் கட்டி வாருங்களென பயமுறுத்திக்கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இம்மாநாட்டில் வலைப்பதிவுகள் எழுதுபவர்களும் கலந்துகொள்ளக்கூடும் என ந்மபுகின்றேன்.

எனவே ஜூன் 02, சனிக்கிழமை அன்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாமொரு அறிமுகக் கலந்துரையாடலைச் செய்யலாம் என்று நம்புகின்றேன். வலையில் பதிபவர்கள் மட்டுமில்லாது, வலைப்பதிவுகளை வாசிப்பவர்களும் கலந்துகொண்டால் இனியதொரு பொழுதாய் அது அமையக்கூடும்.

பின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.

மின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு: dj_tamilan25@yahoo.ca

Saturday, May 12, 2007

இதமாகட்டும் இந்தச் சனிக்கிழமை

A dream


அதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின ஆளுமைகளினூடாக பேசுவதைப் பார்க்கலாம். இவ்விரு பாடகர்ளும் பிற ராப்/R&B பாடர்களின் பாடல் வரிகளிலிருந்து வித்தியாசமாய் எழுதுபவர்கள். பல பாடகர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுப்பதுடன், பாடல்களை அவர்களுக்காய் இசைகோர்த்து தயாரித்தும் கொடுப்பவர்கள். Will I Am, Black Eyed Peasன் முக்கிய ஒரு பாடகர். இப்பாடல் Freedom writers என்ற படத்திற்காய் தயாரிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் எமினெத்திற்கு பிறகு எனக்கு அதிகம் பிடித்த இன்னொரு பாடகர் Common.

Promiscuous


Nelly Furtado நமது நாட்டுக்காரி. கனடாவின் கிழக்குப்பகுதியான வன்கூவரில் பிறந்து வளர்ந்தாலும், போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். அண்மையில் வந்த அவரது Loose இறுவட்டு பெருமளவில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. Grammy போல, கனடாவின் முக்கிய இசைவிருது நிகழ்வான Junoவில் Nelly முக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தவர் . இந்தப்பாடலைப் பார்த்து ஆடாமல் இருந்தால்தான் அதிசயம்.

Timberland தனது நிறுவனத்திலும் Nellyஐ ஒரு பாடகராக இணைத்திருக்கின்றார். தனித்தனிப் பாடலாக Tamberland பிறருக்காய் பாடிய/தயாரித்த பாடல்களை இரசித்த எனக்கு, அவரின் அண்மையில் வெளிவந்த Shock Value இறுவட்டை வாங்கிக்கேட்டபோது ஏமாற்றமாயிருந்தது. இதே Timbarland தயாரிக்க அதில் பாடவிருந்த M.I.Aன் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Nobody wanna see us 2gether, don't matter...


Akon புகழின் உச்சியில் (வேறு விடயங்களிலும் கூட) ஏறிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்திருப்போம். ஆபிரிக்க (செனகல்) நாட்டுப் பின்னணியில் வந்தவர்; பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர். இப்படியொரு ஆபிரிக்கர், அமெரிக்க R&B /Rap ல் பெருமளவு இரசிகர்களைக் கொண்டிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளகூடியது. அவரின் இரண்டாவது இறுவட்டான Konvicted பல Billboard சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கின்றன. எமினெமோடு smack thatம், Snoop Dogg டன், I wanna love you பாடலும் தொடர்ந்து எங்கும் ஒலி/ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

R.Kelly ஐயும் Shaggy ஐயும் கலந்து நினைவுபடுத்தும் ஒரு குரல் Akonனினது. Akonன் இந்தப்பாடலோடு, R.Kelly யின் Ignition பாடலையும் மற்றும் R.Kelly, Cassidyயோடு பாடிய் Hotel ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது புரியும். கறுப்பினத்தவர்களில் கூட கறுப்பாய் இருப்பது குறைத்து மதிப்பிடுகின்றது என்பதை அதிக நேர்காணலில் Akon அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஏன் தான் இவ்வளவு கறுப்பாய் இருக்கின்றேன் என்று சில கறுப்பினச் சிறுவர்களால் கூட கேட்கப்படும்போது எவ்வாறான சிந்தனைகள் சிறுவர்களிடம் புகுத்தப்படுகின்றது என்று கவலைப்பட்டிருக்கின்றார்.

இப்பாடல், தாங்கள் காதலிப்பதை வேறொருவரும் விரும்பவில்லை என்பதைக் கூறுகின்றது. ஆனால் எமது காதலுக்கான உரிமைக்காய் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிறது. Fight for our right to love என்பது அநேகருக்குப் பொதுவாய் இருக்கிறது போலும்.

Sunday, May 06, 2007

நான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பும்

Spider-man-1 பார்த்த முதலாவது சந்தர்ப்பம் அழகானது (அது ஒரு கனாக்காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம்). இரண்டாவது படம் எப்படிப் பார்த்தேன் என்று நினைவினில்லை. மூன்றாவது படம் வெள்ளி மாலையில் இங்கு திரையங்குகளில் வந்திறங்கியபோது, அண்ணாவின் மகனோடும் (கீர்த்தி), நண்பனோடும் பார்ப்பது என்று முடிவுசெய்து வெளிக்கிட்டோம். ஆனால் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கு ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் எல்லாக் காட்சிகளும் நிரம்பிவிட்டிருந்தன். இணையத்தின் ஊடாக பதிவு செய்து போயிருக்கலாம் என்றாலும், குறித்த நேரத்திற்குப் போவதில் வல்லவர்கள் என்பதால், அப்படிப் பதிவு செய்து போக நான் பிரியப்படவில்லை.

என்றாலும் இன்று (வெள்ளி) ஸ்படைர் மான் பார்க்காது வீட்டிற்குத்திரும்புவது எமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்து நகரின் வெவ்வேறு திசைகளில் இருந்த மூன்று தியேட்டர்களுக்கு காரை விரட்டினோம். ஆனால் அங்கும் இருக்கைகள் நிரம்பிவிட்டிருந்தன. பின்னிரவுக் காட்சிகளுக்குப் போயிருக்கலாமென்றாலும் அண்ணாவின் மகன் நித்திரையாகிவிடுவான் என்பதால் நாளை போவோமென திரும்பி வந்திருந்தோம்.

இனியென்ன செய்வது? கீர்த்தியை வீட்டில் இறக்கிவிட்டு, இவ்வெள்ளியை எப்படிக் கழிப்பது என்று நானும் நண்பனும் நினைத்தபடி, வருடமொன்றுக்குப் பின்பாக -manualவாக- காரைக் கழுவிக்கொண்டு, வளாக நண்பர்கள் சிலரை அழைத்தோம். சரி, இன்று Toronto (Raptors) Vs New Jersey (Nets) basketball playoff game போகிறது அதையாவது பார்ப்பமென்று ஒரு loungeற்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கினோம். வழமைபோல நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோமோ அந்த அணி தோற்றுப்போகும் என்ற 'விதி'யிருப்பதால் Raptors playoff ஆட்டத்திலிருந்து (4-2) இல்லாமற்போயிருந்தார்கள். இந்தமுறையாவது சிலவருடங்களுக்கு முன்புவரை நானிருந்த/எனக்கு மிகப்படித்த நகரமாகிய ஒட்டாவாவின் ஹொக்கி அணியாவது (Ottawa Senators) stanley cup ஐ வெல்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் பாலிப்பாராக.

இவ்வாறாக, chicken wings ஐயும், french fries ஐயும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு நண்பர்கள் நாம் நனவிடை தோய்ந்துகொண்டிருந்தோம். நனவுகளை இன்னும் கொஞ்சம் அழகாக்க தண்ணியை வித்தியாசமான வர்ணங்களில் அவ்வப்போது mix பண்ணிக்கொண்டிருந்தோம். மற்றப்பக்கம் சற்று இருட்டான dance floorல் DJ spin பண்ணத்தொடங்கியிருந்தார். Ne-Yoவும், Casseyயும் கிறங்கலான குரல்களில் பாடிக்கொண்டிருக்க, 'இப்படி சின்னப்புள்ளத்தனமாய் பாடலாமா' என்று 50Centம், Jim Jones வந்து அடிக்கடி அவர்களை அதட்டிக்கொண்டிருந்தார்கள். பதின்மங்களை அப்போதுதான் தாண்டியவர்கள் என்று நினைக்கத்தக்க பெண்கள் சிறகுகளை விரித்து dance floorல் high highயாய் பறக்கத்தொடங்கியிருந்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆடமுடியவில்லையே என்று - மனசால் இப்போதும் பதின்மத்தில் இருந்தாலும் ஆண்டுகளில் அதைத்தாண்டி எங்கையோ தூக்கியெறியப்பட்ட என்னைப்போன்றவர்கள்- வயசை உயர்த்திக்கொண்டிருக்கும் கடவுளை இரண்டு நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டு, பக்கத்திலிருந்த wing machine
ல் பிட்ஸாவும், சிக்கினும் வாங்கி வயிற்றுக்குள் அமுத்தினோம்.

வானம் மற்றும் மனம் மப்பாய் இருப்பது (போல) தோன்றிய எனக்கு அடுத்த நாள் கீர்த்தியை பகற்காட்சியிற்கு கூட்டிக்கொண்டுச்செல்வதாய் கொடுத்த வாக்குறுதி மேகத்தைப் போல மிதந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் சனிக்கிழமை விடிய 12.10 p.m எழும்பியபோது (நேரத்தில் பிழையல்ல), தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மூன்றாம் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தோழரொருவர் அதிகம் கவலைபட்டுக்கொண்டிருந்தார். மனுசருக்கு ஸ்பைடர் மான் பார்க்க முடியாதிருக்கின்றதெனும் முக்கிய பிரச்சினையிருக்க, உங்களுடைய பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வழமைபோல தத்துவப் புடலங்காயை அறிவைச் சீவிக்கொடுத்தபின், கீர்த்தியையும் நண்பனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப்போனால் அங்கே ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ரிக்கெட் கிடைக்கும் என்றார்கள். இன்றைக்கு தோல்வியுடன் திரும்பிப்போவதில்லையென மதிய உணவுப் பசிக்காய் pizza-pizzaவில் ஓடர்பண்ணிவிட்டு mallற்கு போய்க்கொண்டிருந்த பெண்களை patioவிலிருந்து sight அடிக்கத்தொடங்கினேன். திரும்பவும் என் மனவிசாரம் வேதாளம் போல மேப்பிள் மரத்தில் ஏறத்தொடங்கியது; எனக்கு மட்டும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது, நான் இரசிக்கின்ற பெண்களுக்கு மட்டும் ஏன் வயசு ஏறுவதேயில்லையென்று.

குறிப்பிட்ட நேரத்தை விட, ஒன்றரை மணித்தியாலம் பிந்தி படத்தை நாங்கள் பார்க்க ஆரம்பிக்க, படத்தின் இடைநடுவில் அண்ணா தொலைபேசி அழைத்து தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னேரம் வேறொரு நிகழ்வுக்குப் போகவேண்டியிருப்பதால் கெதியாய் கீர்த்தியைக் கூட்டிக்கொண்டு வாவென்று. உள்ளே ஸ்படைர் மான் தன்ரை girl-friendஐ propose செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையில்தான் இப்படி proposal செய்யமுடியாதிருக்கிறது படத்திலாவது பார்ப்பமென்றால் அதற்குமா இப்படி குறுக்கீடுகள் வரவேண்டும்? அரங்கைவிட்டு வெளியே போய் தொலைபேசியில் கதைத்தபின் உள்ளே வந்து பார்த்தால் வேறு காட்சியிற்கு கதை நகர்ந்திருந்தது.
-------------
எங்கே ஸ்படைர் மானின் கதையென்று கேட்கின்றீர்களா? மேலே நான் எழுதியதை வாசித்தபோது எப்படி உங்களுக்கு விசர் வந்ததோ அதைவிட இரண்டு மடங்கு விசர் எனக்கு அந்தப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. ஆகவே,நான் பெற்ற இன்பத்தை நீங்களும் ......!

இப்படியாக அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து pursuit of happynessஐயும், வடிவேலின் 'நகைச்சுவை கதம்பம்' என்ற டிவிடியையும் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
-------------
....எனினும் கீர்த்தியிற்கு படம் பிடித்திருந்ததாய்ச் சொன்னான். Meet the Robinsonsஐ இன்னும் கூடவாய் இரசித்தேனென்றான். TMNT பார்க்கவேண்டுமென்றான்.

குழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது.

Friday, March 09, 2007

பெண் பார்க்கப்போன நண்பர்களின் கதை

ஈழத்தில் பெண் பார்க்கும் படலத்தை நண்பர்கள் சிலர் அக்குவேறு ஆணிவேறாக அலசிக்காயப்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இந்த வழக்கம் இருக்கின்றதா அல்லது வழக்கொழிந்துபோய்விட்டதா என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், நமது நண்பர்கள் பெண் பார்க்கப்போனால் எப்படியிருக்கும் என்று கற்பனைக்குதிரையின் கடிவாளத்தை சற்று நழுவவிட்டேன்.

இனி...............

கானா பிரபா:
பி: வாவென் மலையாளச் சேச்சியே...நானுன் பட்டியாய் காலம் முழுக்க இருப்பேன். உன் கொப்பர் பிடித்திருக்கா என்று கேட்டால்... கெதியாய் சொல்லடி..ஓமென்று.
பெண்: என்ன பட்டியோ....அது யாரு? ஆடு மாடுகளை அடைக்கிற பட்டியா உது?
பி: இல்லை நாய்.
பெ: என்னை நாயெண்டால் செருப்பைக் கழட்டி அடிப்பேன்.
(பிரபா மனதிற்குள்.....) ஆ...இவாவுக்கு மலையாளந்தான் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...இப்ப பார்த்தால் தமிழும் விளங்காது போல.
பெ: சரி உம்மடைபாட்டில் முழியை உருட்டாமல் இதைச் சொல்லும்..... நான் கேள்விப்படது உண்மையோ ...
பி:: என்ன கேள்விப்பட்டனீர்...?
பெ: இல்லை நீர் முந்தி யாரையோ ஒரு பெடிச்சியை வேலிப்பொட்டுக்குள்ளால் எட்டிப்பார்த்தனீர் என்றொரு கதை உலாவுகிறதே....உண்மையோ?
பி: ஆ... ஷ்ரேயா இதை உம்மட்டையும் சொல்லிப்போட்டாவோ?
பெ: அவா ஒன்டும் சொல்லவில்லை...உங்கை வலைப்பதிவுகளில் உதுதான் பெரிய நியூசாய் எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கினம்.
பி: அதொன்டும் பெரிய கதையில்லை....நான் முந்தி ரியூசனுக்குப் போகேக்கை, ரீயுசனுக்குப் பக்கத்து வீட்டிலை இருந்த ஒரு பெட்டை வேலிப்பொட்டுக்காலை என்னைப் பார்த்து அடிக்கடி விசிலடிப்பா... அது பத்தாது என்டு ஒருநாள் 'அலைபாயுதே கண்ணா' என்டெல்லோ என்னைப் பார்த்து பாடினவா...
பெ: அவா தன்ரை பாட்டில் பாடியிருப்பா உமக்கு உம்மைப்பார்த்து பாடினதாய் ஒரு நினைப்பு.
பி: கொஞ்ச நேரம் சும்மாயிரும்......இவா இப்படிப் பாடி என்னை நக்கலடித்தால் சும்மா விடமுடியுமோ..? அடுத்த நாள் அவா வேலிப்பொட்டுக்குள்ளாலை இருந்து எனக்கு விசிலடிக்க முன்னர், அவாவுக்கு விசிலடிக்க நான் வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்...
பெ: ஓகோ அப்படியா..பிறகு...?
பி: யாரோ அங்காலை சரசரவென்று நடந்துவாற சருகுச் சத்தம் கேட்டுது....நான் உடனே உய் உய் உய்ய்ங்.. என்று நல்ல சத்தத்தோடு விசிலடித்தேன்....ஆனால்....
பெ: என்னப்பா நடந்தது?
பி ஆனால் நடந்துவந்தது அவாவில்லை, அவாவின்ரை தேப்பன்...அந்தாள் வந்து வேலிப்பொட்டுக்குள்ளாலை ஒணான் எட்டிப்பார்க்கிறமாதிரி பார்த்திச்சு.
பெ: பிறகு...?
பி உமக்கு வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுகிறது கைவந்த கலை போல. பிறகென்ன...அவர் துரத்த நான் ஓட....நான் ஓட அவர் துரத்த...இணுவிலிருந்து ஆரம்பித்து கோட்டை முனியப்பர் கோயிலைக் கடக்கும்வரை என்ரை மூச்சு எனக்குச் சொந்தமாய் இருக்கவில்லை.

பிரபாவிற்கு பிடித்த படங்கள்: 'ஜெயம்' ரவி மலையாளச் சேச்சிகளுடன் நடித்த -காதல் ரேஸிங்- படங்கள்.
-----------------

பெயரிலி:
காதலர் பூங்காவிற்கும் நாவலப்பட்டிக்கும் அங்கொடைக்கும் போகும் ஒரு முப்பரிமாணச் சந்தியில் உன்னைக் கண்டபொழுது நான் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கங்கள் எல்லாம் நீட்சேயாக நீட்சியடைந்து மார்க்வெஸ் நாவலில் கடைசிப்பக்கமாய் முடிந்துகொண்டிருக்கையில் உன் விரல்களிலாத காலில் வாசனையாக அலைந்துகொண்டிருந்த காற்சங்கிலியின் கோழிக்கறி சுவையில் நான் மயங்கிய அந்தக்கணமே தண்டவாளத்தில் நசிந்துபோய்க்கிடந்த பச்சையமில்லாத காளான் முனையாய் காதல் என் நெஞ்சில் வந்து குத்தத்தொடங்குகையில்....
என்னப்பா தண்ணி வேணுமோ...முற்றுப்புள்ளியில்லாது பேசினால் இப்படித்தான் மூச்சுவாங்கும்...
உனக்கெங்கே விளங்கிப்போகின்றது எனது அவதி? எனது உயிர் கண்டி தலதா மாளிகையின் புத்தரின் தந்தப்பல்லிலும், கோணமலை இராவணன் வெட்டிலும், ஷங்காய் ஷம்பெயினிலும் தற்கொலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் யுகங்களைத் தாண்டிய.....
போதும் போதும் உங்கடை அலம்பலை நிறுத்துங்கோ. நான் இப்பவே உங்களைத் திருமணஞ்செய்ய ஓமொன்று சொல்கின்றேன்..
ஆகா பெண்ணே...நான் கவித்துவமாய் உரையாடியது எல்லாம் விளங்கிவிட்டதா கண்ணே?
இல்லை...இப்படியான கொடூரத்தை இன்னொரு பெண்ணும் கேட்டு தற்கொலை செய்யக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காய் ஓமொன்று சொன்னேன்.

பெயரிலிக்கு பிடித்த படங்கள்: Bombay, கில்லி, ரன்.
-----------------------

சுகன்:
புத்தனின் தாழ் பணிந்து காதல் வந்தனம் சொல்கிறேன் கண்ணே!
என்ன புத்தரோ...அவரே மனுசி வேண்டாம் என்று வீட்டைவிட்டு ஓடிபோனவர்...எனக்கும் அந்த நிலையா எதிர்காலத்தில் வரப்போகிறது?
புத்தரை புத்தராய் பார்க்காதே; புத்தர் என்பது புத்தராயுமில்லை..புத்தராய் இருக்காதது புத்தருமில்லை..
என்னப்பா ஒரே குழப்புகிறியள்....சரி கொஞ்சகாலத்துக்கு முன் முஸ்லிமாய் மாறப்போகிறியள் என்டெல்லோ கதை வந்தது...
சா...மனுசர் நிம்மதியாய் ஒருவிசயம் செய்ய இவங்கள் விடமாட்டாங்கள்...உதை யார் உமக்குச் சொன்னது?
நீங்கள்தானே மதம் கடவுள் என்டு ஒன்டும் வேண்டாம் என்கிறனியள்...பிறகேன் மதம் மாறப்போகிறேன் ...புத்தர், அல்லா என்று ஓடித்திரிந்துகொண்டிருக்கிறியள்..?
கேட்டாயடி ஒரு கேள்வி என் செல்லக்கிளியே ..இப்ப பாரும்... மதமில்லை என்று சொல்கிறதும் ஒன்டுதான்... அல்லது எல்லா மதங்களிலையும் இருக்கிறன் என்டு சொல்கிறதும் ஒன்டுதான்.
ஆ... இவர் திருப்ப குழப்பத்தொடங்கிவிட்டார்.
இப்ப என்ன சொல்கிறீர்?
உங்களைக் கலியாண்ஞ்செய்ய எனக்கும் சம்மதம்தான்....ஆனால் முள்முருங்கையை நடுகிறதுக்கு பதிலாய் எலுமிச்சை மரம் நடச்சொல்லவேணும்
ஏன்...? எதற்கு...?
பின்ன, உங்களுக்கு அடிக்கடி பித்தம் வர அதைத் தெளிவிக்க, நான் தேசிக்காய் கடையிலை வாங்கி கட்டுபடியாகுமோ?

சுகனுக்குப் பிடித்த படங்கள்: இராம நாராயணன் இயக்கிய அம்மன் படங்கள்.
-------------------

சயந்தன்:
இதென்ன பொம்பிளை பார்க்க வந்திருக்கின்றீர்....மனுசர் ஒருத்தரையும் காணவில்லை..ஒரே நாயும் பூனையுமாய் இருக்கிறதே.
அதுவா நான், நாய் பூனை படங்கள் என்னுடைய வலைப்பதிவில் போட்டவுடன் பூனை பாட்டி, பூனை தாத்தா பூனை மாமா, பூனை அத்தை என்று கனபேர் என்னோடு உறவாகிட்டினம்.
ஓகோ அதுவா... அது சரி யார் உந்தப்பூனை? எங்களைப் பார்க்கப்பிடிக்காமல் வாசற்பக்கம் ஜயப்பனுக்கு மாலை போட்டதுமாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறது?
அது வேறு யாருமில்லை வசந்தன்தான்..அவருக்கு பொம்பிளையள் என்டாலே பிடிக்காது.
அப்படியோ?
அதைவிடும் பொம்பிளை பார்க்கிற சம்பிரதாயத்திலை பாட்டுப்பாடவேண்டும் என்டுவினம். எனக்கொரு பூனைப்பாட்டு பாடிக்காட்டும்.
பூனைப்பாட்டோ?
ஓமோம்..ஏதோ ஒரு படத்தில் நமீதா 'மியாவ் மியாவ்' என்டு செக்ஸியாய் ஒரு பாட்டுப்பாடுவாவே...அதைப்பாடும்.
(அந்தப்பெண் பார்க்கின்ற புலிப்பார்வையில், சயந்தனும் அவரது பூனைப்பட்டாளமும் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்....)

சயந்தனுக்குப் பிடித்த படங்கள்: Cat woman, 101 Dalmations
--------------------

ஷோபா சக்தி:
'ஷோபா ஷோபா'
இஞ்சை பாருங்கோ என்னுடைய பெயர் ஷோபா இல்லை.
ஷோபாவின் படங்கள் பார்த்ததிலிருந்து எனக்கு எல்லோரும் ஷோபாவாய் தெரிகின்றார்கள். நீரும் ஷோபாதான்.
இந்தாளுக்கு பித்தம் கூடிப்போய்விட்டது...உதுக்குத்தான் சொல்கிறது...அடிக்கடி சாருவோடு கதைக்கவேண்டாம் என்டு.
ஷோபா ஷோபா நீ எங்கையடி போனாய்?
இதென்ன? சோபா செட்டிலை இருந்துகொண்டு ஷோபா எங்கையடி போனாய் என்டால்?
ஷோபா ஷோபா நீயின்றி என் ஒரு அணுவும் அசையாது...
இஞ்சை பாருங்கோ...நீங்கள் இப்படி திருப்பத் திருப்ப ஷோபா ஷோபா என்டு கூப்பிட பக்கத்து வீட்டு ஷோபா நாய்க்குட்டி கூட இங்கை வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிற்கிது.
ஷோபா ஷோபா
ஜயோ என்னால் தாங்கமுடியாதிருக்கிறது...நான் அழப்போகிறன்.
(என்று கூறிவிட்டு அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழுகின்றார்...)
ஷோபாசக்தியோ 'ஷோபா, ஷோபா' என்று -குணா படத்தில் கமல் 'அபிராமி அபிராமி' என்று பீலிங்காய் கூப்பிடுகின்ற மாதிரி- அரற்றியபடி பெண்ணின் வீட்டைவிட்டுப் புறப்படுகின்றார். 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல' என்று பாடியபடி, அடுத்து 'பெண் பார்க்கப்போன சோகக்கதை' யை எழுதத்தொடங்குகின்றார்.

ஷோபா சக்தியிற்கு பிடித்த படங்கள்: முன்பு ஷோபா நடித்த படங்கள் அனைத்தும்... இப்போது -எஸ்.ரா, 'கொரில்லா' புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்ததிலிருந்து- ரஜினியின் அனைத்துப் படங்களும்.
--------------------------

சோமிதரன்:
நீர் இப்படி சிரிக்கிறதை நான் படம்பிடித்தால் ஒரு ஈழத்து ஜஸ்வர்யா உலகிற்கு கிடைப்பா...
சும்மா லொல்லுக்கதை கதைக்கவேண்டாம்
நீர் உரையாடுகிற விதம் அப்படியே நந்திதா தாஸை நினைவுபடுத்துகிறது.
சனியன்...! இந்த சாறி என்ரை உடம்பிலை நிற்கமாட்டேன் என்கிறது
அப்ப, நான் விஜய் அசினுக்கு 'சிவகாசி'யிலை மடிசார் புடவை கட்டிவிட்டதுமாதிரி உமக்கு கட்டிவிடவோ?
எங்கடை வீட்டில வளர்க்கிற நாயிற்கு பத்து வேட்டைப்பற்கள் இருக்கிறது
நாயிற்கும் சாறிக்கும் என்ன தொடர்பு?
இல்லை நீர் சாறி கட்டிவிடப்போகின்றேன் எண்டனீர்....அதுக்கு நான் உமக்கு நன்றி செலுத்தவேண்டும்தானே...
('சோமி', 'சோமி' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது)
யாரப்பா அது?
அது டிசே, ஏதோ 'சே'யைப் பற்றி கதைக்கோணுமாம்...கெதியாய் வரட்டாம்..
சேயைப் பற்றிக் கதைக்கபோகிறியளோ..இல்லை தவறணைக்குப்போய் கள்ளுக்குடிக்கப்போகிறியளோ?
இரண்டுமே எஙகளுக்கு போதை தாற விடயந்தான்.
நாசமாய்ப் போவாங்கள்...கள்ளுக்குடிக்கின்றதென்றால் போய் கள்ளைக் குடியுங்கோவன்...ஏன் எங்கடை நேரத்தை வீணடிக்கிறியள்?

(சோமி: இந்த விசரன் டிசேயோடு இருந்தால், தனக்கு கலியாணம் வாழ்க்கையிலை நடக்காது என்டு திட்டியபடி கள்ளுக்கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்குகின்றார்)

சோமிக்குப் பிடித்த படங்கள்: அஸின், ஜஸ்வர்யா சாறி கட்டி நடித்த அனைத்துப் படங்களும்.
-----------------

வசந்தன்:
இஞ்சைப்பா, நீங்கள் புட்போல் விளையாடுகிறபோதே எனக்கு உங்களில் ஒரு கண்.
என்ன ஒரு கண்ணோ...அப்ப எங்கை உம்மடை மற்றக்கண்?
அதுவும் ஒரு நாள் நீங்கள் புருஸ்லி மாதிரி பாய்ந்து ஒரு கோல் அடித்தியளே...அண்டைக்கு மயங்கின நான் இன்னும் எழும்பவில்லை
உதென்ன விசர்க்கதை...புட்போலுக்கும் புருஸ்லிக்கும் என்ன தொடர்பு.... பேய்க்காட்ட வேண்டாம்.
இதைக்கூட மறந்திட்டீங்களா...ஒருநாள் எனக்கு கள்ளமாய் விளாங்காய் பிடுங்கிக்கொண்டு வந்து வெட்கப்பட்டுக்கொண்டு தந்ததை....
சும்மா சொறிக்கதை கதையாதையும்.
இப்ப சொல்லுங்கோ... என்னைக் கலியாணம் செய்ய விருப்பமா இல்லையா?
சாத்தான்கள் எல்லாம் பெண்கள் வடிவில் வந்து என்னைத் தொல்லைப்படுத்துகின்றனவே...பரலோகத்திலிருக்கும் பரமபிதாவோ என்னைக் காப்பாற்ற மாட்டீரா?
இப்ப நீர் இப்படி அழுது குழறுகிறீர்.....என்னைப் பிடிக்காவிட்டால் ஏன் இங்கை வந்தனீர்...உந்தச் சந்தியில் இருக்கின்ற சேர்ச்சிற்குப் போய் பாதராகி இருக்கலாமே?
ஒமோம்...இங்கை வரமுன்னர் அங்கை போய்விட்டுத்தான் வாறன்.
பிரமச்சாரியாக இருக்கப்போகின்றீர் என்றால் ஏன் என்னைப் பெண்ணு பார்க்க வந்தனீர்?
இல்லை சேர்ச்சில் ஒரு கன்னியாஸ்திரியும் இல்லை...உம்மை ஒரு கன்னியாஸ்திரீயாக ஆக்கவெல்லோ வந்தனான்.
அம்மா அம்மா இந்த ஆள் ஒரே கெட்டவார்தைகளால் என்னைத் திட்டுகின்றார்
(அந்தப்பெண்ணின் அழுகுரல் கேட்டு அவரின் தாயார் ஓடிவந்து, அரிசி புடைக்கிற சுளகால் வசந்தனைச் சுழற்றி சுழற்றி அடிக்கத் தொடங்குகின்றார்.)

வசந்தனுக்குப்பிடித்த படங்கள்: தேவதாஸ், சலஙகை ஒலி, லவ் ரூடே போன்ற தோல்வியில் முடியும் காதற்படங்கள்.
---------------

(ஒரளவு புரிதல்கள் உள்ள நண்பர்களையே மேலே குறிப்பிட்டிருக்கின்றேன். எனினும் எவரையேனும் தனிப்பட்டுக்காயப்படுத்தின் தெரியப்படுத்தவும். அந்தப்பகுதியை அகற்றிவிடுகின்றேன்.)

Saturday, February 10, 2007

வின்ரரில் நயாகரா

வசந்தகாலத்தில் எப்படி இருந்த நயாகரா குளிர்காலத்தில் இப்படி ஆயிற்றே?

a1


airport 087

a4



a7


a12


a9


என்ன கொடுமை இது சரவணா?

Sunday, November 12, 2006

லூசுப்படம் - கிழக்குக் கடற்கரைச்சாலை

'வரலாறு' படத்தைப் பார்க்காது அஸினைத் தவறவிட்டுவிட்டேன், அந்த தவறை இன்னொருமுறை விடக்கூடாது என்று பாவனாவைப் பார்ப்பதற்காய் 'கிழக்குக் கடற்கரைச்சாலை' படம் பார்க்கத் திரையரங்கிற்கு நேற்றுச் சென்றிந்தேன்.



bhavna



என்னவொரு அற்புதமான படம். தமிழ்ச் சினிமாவின் இன்னொரு மைற்கல் அது. உலகச்சினிமாத் தரத்திற்கு தமிழ்த்திரையை உயர்த்திவிடும், எவரும் தவிர்க்காது பார்க்கவேண்டிய வர்ணச்சித்திரம். ஈவ்-ரீஸிங் போன்றவற்றை just like that மாதிரி எடுக்கவேண்டும் என்ற அறிவுரை கூறும் அருமையான படம். நாயகன் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை செய்வது அந்த நல்ல காரியத்தைத்தான். அடுத்த ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கப் பயமாயிருக்கிறது. பாலியல் வன்புணர்வையும் just like that மாதிரி எடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?



lrg-2424-bhavana-1



படத்தின் நாயகனைப் பார்த்து, 'உனக்கு லூசா லூசா'? என்று பாவனா அடிக்கடி கேட்பார். முதலில் விளங்கவில்லை, ஏன் இப்படி பாவனா கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்று. பிறகுதான் நன்கு விளங்கியது. பாவனா நாயகனைக் கேட்கவில்லை, திரையிலிருந்து படம் பார்க்க வந்த எங்களைப் பார்த்துத்தான், இப்படியொரு அற்புதமான படத்தைப் பார்க்க வந்த 'நீங்கள்தான் லூசு லூசு' என்று சொல்லியிருக்கின்றார் போலும்.



b



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று திரையரங்குச் சென்ற எங்களை -இந்த சனியையும் இழவுச் சனியாக மாற்றி- இரத்தக்கண்ணீர் வரச்செய்துவிட்டார்கள். நகைச்சுவை என்றபெயரில் கோமாளித்தனம் காட்டுவது போதாது என்று கூடவே வாயால் டமாரமடித்து செவிப்பறையை நோகவைத்து தலையிடியைத்தான் வரச்செய்து கொண்டிருந்தார்கள். வந்த விசருக்கு எப்படி திரைச்சீலையைக் கிழிக்காமல் சும்மா வந்தோம் என்று நினைக்க இன்னும் வியப்பாய்த்தானிருக்கிறது.



d



'சித்திரம் பேசுதடி'யே பார்த்துவிட்டு அஸினை 'கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய்' என்று கூறிவிட்டு, பாவனாவை பீடத்தில் ஏற்றிவைப்போம் என்று எண்ணியிருந்தேன். இனி 'நான் கடவுள்' வரும் வரை அந்த முடிவை பரிசீலனை செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருக்கின்றேன்.



இந்த லூசுப்படத்தைப் பற்றிய லூசுப் பதிவை வாசிக்க வந்த நீங்களும் லூசாக ஆகக்கூடாது என்பதற்காய் இடைக்கிடை பாவனாவைச் சிரிக்கவைத்திருக்கின்றேன். ஆகவே தயவுசெய்து என்னைத் திட்டாதீர்கள் :-).

Friday, November 10, 2006

கனடா?


இலங்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கு கனடாப்பாராளுமன்றத்தில் இருந்து ஒலிக்கும் குரல்!


Canada Continues Silence as Refugees are Killed by the Sri Lankan Armed Forces

(Press Release)

The Honourable Albina Guarnieri, P.C., M.P
Member of Parliament Mississauga East - Cooksville


The shelling of refugees sheltered in a school in Kathirveli by the Sri Lankan Armed Forces has claimed at least 50 lives and is the latest in a continuing campaign that has terrorized the civilian Tamil population.

It has been over two months since Swedish retired General Ulf Henricsson, then head of the Sri Lanka Monitoring Mission, ruled that the Sri Lankan military were responsible for the murders of 17 aid workers of the French group “Action Contre La Faim”. He called the mass murder of these aid workers, who were all shot in the head at close range: “one of the most serious recent crimes against humanitarian aid workers worldwide”.

While the EU condemned the killings, there has been continued silence from Canada. Not a word of condemnation has been heard for this mass murder or a targeted bombing that killed 61 schoolgirls, nor has there been any comment on the use of land mines by the Sri Lankan military.

Emboldened by the silence of friends like the current Canadian Government, the government of Sri Lanka continues to act with utter disregard for civilian lives. A crucial highway has been closed to Jaffna cutting off supplies and confining thousands to a growing humanitarian crisis. Bombing attacks continue to hit civilian targets, damaging schools and hospitals. As well, the International Committee of the Red Cross has received no less than 350 reports of targeted abductions and murders of Tamil civilians in the last ten months, many in the capital of Colombo.

The Harper Government’s continuation of aid and trade support for the Sri Lankan government and its absolute silence about continuing atrocities are bound to encourage a regime that is now clearly responsible for human rights abuses of horrific and historic proportions. It is time for the Canadian Government to remember our nation’s commitment to human rights and call for an end to military atrocities in Sri Lanka.

(Thankx to Tamilcanadian.com)

Tuesday, October 17, 2006

PRESS PLAY

P1010011


'Im the dream, Im the one

Im the reason you come, Im a king

Im a hum, im a beast

Im the last thing your eyes see

the passion beside me is yours now come try me'


(warning: explicit lyrics)



Diddy's back with his new album PRESS PLAY!

இசைத்தட்டு வெளிவந்தவுடனேயே இன்றே வாங்கியாயிற்று. தொடர்ந்து திருப்ப திருப்பக் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது.

Friday, July 14, 2006

Afro Fest - 2006

சென்ற சனிக்கிழமை, ஆப்ரோ நிகழ்வுக்கு நண்பர்கள் சிலராய் சேர்ந்து போயிருந்தோம். பாடலும், ஆடலும் அற்புதமான தாள்வாத்தியங்களோடு அந்த இரவு கரைந்துகொண்டிருந்தது. நமீபியா, கானா போன்ற நாடுகளின் பாடல்கள் சிலதைக் கேட்டபோது அப்படியே சிங்களப் பாடல்களைக் கேட்பது போன்று இருந்தது. இந் நாடுகளுக்கிடையில் போர்த்துக்கீசிய, ஸ்பானிய பின்புலம் ஒரு பொதுப்பண்பாய் இருப்பதால் அவ்வாறு எனக்குத் தோன்றியிருக்கக்கூடும்.

சில தினங்களுக்குப் பிறகு ஸிம்பாவே நாட்டுத்தோழியுடன் -விழாவுக்குப் போனது குறித்து - உரையாடிக்கொண்டிருந்தபோது, 'நீ அன்று நடந்த Salif Keita வின் நிகழ்வைப் பார்த்தாயா?' என்று வினாவினார். வழமைபோல -நேரத்துக்கு போவதில் நான் விண்ணன்- என்பதால் அந்த நிகழ்வைத் தவறவிட்டுவிட்டேன் என்றேன். Salif Keita ஒரு பிரபலமான ஆபிரிக்கா பாடகர் என்றும் அல்பீனோ நோயால் மிக மோசமாய் பிறந்ததிலிருந்தே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த வலிகளை தாண்டியும் எழுச்சியடைந்தவர் என்றார், அந்தத் தோழி.

மருத்துவ அறிவியல் காரணம் இந்நோயிற்கு என்ன காரணம் கூறுகின்றது என்று தெரியாதபோதும், ஆபிரிக்காக் கண்டத்தில் இப்படி அல்பீனோ நோயுடன் பலர் இருப்பதாகவும், அதற்கு ஒரு காரணமாய் வெள்ளையின ஆண்கள் கறுப்பினப்பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததும்... அதை ஏற்றுக்கொள்ளாத மரபணுக்களின் பிறழ்வும் இதற்கு ஒரு காரணம் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்தத் தோழி குறிப்பிட்டிருந்தார். எனக்கு, ஒரு நல்லதொரு கலைஞன் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தோசத்தில், இந்த வெள்ளிக்கிழமை சைனீஸ் உணவகத்தில் மதிய உணவு சாப்பிடுவோம் என்று அழைத்திருந்தேன் (or தீர்மானித்திருந்தோம்). இந்த முறையாவது எஙகளோடு வரப்போகும் வியட்னாமிய தோழி -நாங்கள் உணவருந்தும்போது- தான் தனது ஊரில் சாப்பிட்ட பாம்புக்கறியை பற்றி எதுவும் கூறி பயமுறுத்தாமல் இருக்க கடவுள் துணைபுரிவாராக.

"Happiness isn't for tomorrow. It's not hypothetical, it starts here and now. Down with violence, egoism and despair, stop pessimism. Let's pick ourselves up. Nature has given us extraordinary things. It's not over yet, nothing's decided. Let's take advantage of the wonders of this continent at last. Intelligently, in our own way, at our own rhythm, like responsible men proud of their inheritance. Let's build the country of our children. And stop taking pity on ourselves. Africa is also the joy of living, optimism, beauty, elegance, grace, poetry, softness, the sun, and nature. Let's be happy to be its sons, and fight to build our happiness."
-Salif Keita


IMG_0853


IMG_0762

IMG_0841

IMG_0848


IMG_0855


Photos: Ramanan

Saturday, July 08, 2006

Toronto Street Festival - 2006

நேற்றிலிருந்து (வெள்ளிக்கிழமை முதல்) தொடர்ந்து மூன்று நாட்களாய் ரொரண்டோ downtown உட்பட பல தெருக்களில் விழாக்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

Pop, R&B. Rap, Hip-Hip என்று ஆடல் பாடல்களுடன், பல்வேறு கலாச்சாரங்களின் பின்புலங்களுடன் பல நிகழ்வுகளைப் பார்க்க அருமையாக இருந்தது.

க்யூபாவில், மெக்சிகோவில், ஆர்ஜெண்டைனாவில், கயனாவில்,பிரேசிலில் இருந்து எல்லாம் கலைஞர்கள் வந்து தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருப்பதுதான் இன்னும் வசீகரிக்கின்றது. கனடாவில் வாழ்ந்துகொண்டிருபதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும், இவ்வாறான ஒரு பல்கலாச்சாரச் சூழலில், சகிப்புத்தன்மையுடன் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இந்தப்பனிபுலம்பெயர்நாட்டின் இருப்பு எதோ ஒருவகையில் இதத்தைத் தருகின்றது.

இன்று சனிக்கிழமை அதிகம் ஆப்ரோ பெஸ்டிவலாய் இருக்கும் என்று நேற்று அறிவித்திருந்தார்கள். இரவும் போவதாயும் உத்தேசம் இருக்கிறது.

P2250061
கயானா பெண்மணியொருவர் பாடல் இசைத்தல்: பாடியது மட்டுமின்றி மிகுந்த நளினத்துடன் ஆடவும் செய்தபடி, இரசித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் தன்னோடு இணைந்து/இசைந்து பாடச்செய்து நிகழ்வை முழுக்கூட்டத்தின் கொண்டாட்டமாய் ஆக்கிக்கொண்டிருந்தார்.

P2250062
பிரெஞ்சுக்காரர்கள் செய்த வித்தியாசமான நெருப்புடன் இணைந்த நடனத்தின் ஆரம்பப்பகுதி

P2250051
பிரேசிலிருந்து வந்த கலைஞர்கள்.

P2250058
மெக்ஸிவோவில் இருந்து வந்த (பதின்ம?) வயதுப் பெண். அப்படியே எனக்கு ஷ்கிராவை நினைவுபடுத்தியவர். மிக இனிமையான குரலுக்குரியவர். மேலும் நாளை நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்ட இறுதியாட்டத்தின் ஆரம்பத்தில் (அசல்) ஷகிரா பாடப்போகின்றாராம். தவறவிடுவேனா என்ன?

P2250063
நெருப்பு நடனத்தின் நீட்சியில்.

P2250054
பிரேசில் கலைஞர்களின், பாடல்களின் இலயத்துக்கேற்ப தெருவில் போட்ட ஆட்டந்தான் மிகவும் கவர்ந்தது. இந்த ஆட்டத்தின் பெயர் என்னவென்று தெரியாதபோதும், கிட்டத்தட்ட கராத்தே அசைவுகளை ஒத்திருந்தாலும், ஆனால் எவரின் உடல்மீது எவரின் உடலும் படாமல் அழகான இலயத்தில் மாறி மாறி பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

P2250066
நிகழ்வு முடிந்தபோது.....
நிலவும், மெல்லிய வெளிச்சத்தில் சி.என் (CN) ரவரும்

Saturday, July 01, 2006

இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை

_41782520_ozfaninaussie_getty1

கால் இறுதி ஆட்டத்தில் நேற்று ஆர்ஜென்ரீனா தோற்க, இன்று பிரேசிலும் தோற்றுப்போய்விட இனி வரும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டங்களைச் சுவாரசியமாய்ப் பார்க்கும் விருப்பும் போய்விட்டது :-(.

மிச்ச நினைவலைகள் பின்பு.

Friday, March 03, 2006

கே.டானியல்

கே.டானியல் ஈழத்து பஞ்சம இலக்கியங்களின் முன்னோடியாக மட்டுமில்லாது, தமிழ்நாட்டு தலித்திலக்கியத்தின் பிதாமகராகவும் பல தலித்துக்ககளால் கொண்டாடப்படுபவர். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில், பெண் கவிஞர்கள் குறித்துப் பேசப்படுகின்றபோது, தொடர்ந்தும் ஈழத்துப் பெண்கவிஞர்களின் பங்களிப்பு, பல படைப்பிலக்கியவாதிகள் மற்றும் விமர்சகர்களால் மறைக்கப்படுவதுபோன்று, தமிழக தலித்துக்கள் கே.டானியலை இருட்டிப்புச் செய்து, தங்களை மட்டும் முன்னோடியாக நிலை நிறுத்திய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. ஆறுதல் தரும் விடயமும் கூட.

சென்ற வருடம் அ.மார்க்ஸ் தொகுத்த, கே.டானியனின் கடிதங்களை வாசித்தபோது ஒரு எழுத்தாளருக்குரிய டானியலின் ஆதஙகங்களும், கனவுகளும், அலைவுகளும், சலிப்புக்களும் வெளிப்படையாகத் துலங்கின. தற்போது அடையாளம் பதிப்பகம், கே.டானியலின் ஆறு நாவல்களையும் ஒரு முழுமையான தொகுப்பாக கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

'தகப்பன் கொடி' போன்ற தமிழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாவலையும், பல நல்ல கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அழகிய பெரியவன் கே.டானியலின் படைப்புக்கள் பற்றி இப்படி எழுதுகின்றார்....

'மூத்த தலித் எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் ஆறு நாவல்களையும் ஒரே தொகுப்பாக "அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெரிய, தடிமனான புத்தகம். நேர்த்தியான பதிப்பு. இந்த ஆறு நாவல்களில் "அடிமைகள்', "கோவிந்தன்' ஆகிய இரு நாவல்களும் அடிமைகளின் வாழ்வைச் சொல்வதால் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகின்றன.

சாதியக் கொடுமைகளுடன் அடிமை முறையும் இணைந்தேதான் தொடக்கக் கால இந்தியச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆண்டை அடிமை முறை என்பது, நேற்று வரை இருந்த, இன்றளவும் வேறு வடிவங்களில் தொடருகின்ற ஓர் அடிமை முறையே. காளைக்குப் பதிலாக அடிமையான கீழ்ச் சாதிக்காரரை நுகத்தில் வைத்துப் பூட்டி உழுத கதைகளை கேரளத்தின் வரலாற்றில் படிக்க முடிகிறது. தமிழகத்தில் நிலவிய அடிமை முறைகளைப் பற்றி ஆ. சிவசுப்பிரமணியத்தின் ("தமிழகத்தில் அடிமை முறை') நூலின் வாயிலாக விரிவாக நாம் அறியலாம்.

கருப்பர்களின் அடிமைத்தனத்தை விடவும் இந்திய சாதிமுறை மிகக் கொடூரமானதென்கிறார் அம்பேத்கர். சாதியக் கொடுமைகளோடு, அடிமை முறையின் துன்பங்களும் இணைந்து, இந்திய தலித் ஒருவன் வாழ்வு கற்பனைக்கெட்டாத நரக வாழ்வாக நிலைப்பெற்று இருந்திருக்கிறது. இந்த வாழ்வை தமிழகத்தில் எழுதப்பட்ட எந்த தொடக்கக் கால நாவலும், கதையும் பதிவு செய்யவில்லை. இன்றளவிலும்கூட வெளிவந்திருக்கும் படைப்புகள், தலித் அடிமை முறையின் வலுவான வரலாற்றுப் பின்னணியையும், கதைக்களனையும் கொண்டு எழுதப்பட்டதாக இல்லை. ஆனால், கே. டானியலின் நாவல்கள் இதைச் செய்திருக்கின்றன.

"அடிமைகள்' நாவல் 1890 முதல் 1956 வரைக்குமான அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலவெளியில் நடைபெறும் நிகழ்வுகளைச் சொல்கிறது. யாழ்ப்பாணம், அதன் கிராமப் பகுதிகள் ஆகியவற்றில் நிகழும் சமூக மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.

"சாதிப் பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்காத தமிழர்களின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பது, எனது துணிவான முடிவு. இது சரியானதே. அதனாலேயே நான் இந்த இயல்பான தமிழனின் வாழ்க்கையை இலக்கியம் ஆக்குகிறேன்' என்று கருதும் டானியல், அதற்கு ஏற்ற மாதிரியே சாதியின் அத்தனை சலுகைகளையும், மேன்மைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கிற ஆதிக்க சாதித் தமிழர்களின் வாழ்வை மிக நெருக்கமாக நின்று பார்க்கும்படி செய்கிறார்.

வேலுப்பிள்ளை, சீதேவி நாச்சியார் ஆகியோரின் வாழ்வை முன்வைத்துக்கொண்டு கிளை கிளையாகப் பிரிந்து பரவுகிறது நாவல். சீதேவியின் அப்பா யாழ்ப்பாணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் புகழ்ப் பெற்ற புத்தூர் பல்லக்கு தலித் தம்பி. வேலுப்பிள்ளையின் தந்தையோ யாழ்ப்பாணம் கோட்டையில் வேலை செய்தவர். இந்த வகையான செல்வாக்கு மிகுந்த குடும்பங்களுக்கிடையிலே நடக்கும் திருமணத்துக்கு, ஓர் அடிமைக் குடும்பம் சீர்வரிசையாகத் தரப்படுகிறது. அடிமைக் குடும்பங்களை மணப்பெண் சார்பாக சீர்வரிசையாகத் தருவது என்பது, அப்போது இருந்த வழக்கம். அப்படி சீதேவி நாச்சியாருக்குத் தரப்படும் அடிமைகளான இத்தினி, எல்லுப்போலை ஆகியோடமிருந்து தொடங்கி சுமார் 12 கிளைக் கதைகளாக இருக்கிறது நாவல்.

இந்த நாவலை இரு பகுதிகளாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம். அக்காலத்திலேயே ஈழத்தில் இருந்த சாதிய நடைமுறைகள் கட்டுப்பாடுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் இது ஒரு பகுதி. இந்தக் கொடுமைகளை எதிர்த்திடும் தலித்துகளின் செயல்பாடுகள் இது மற்றொரு பகுதி. வெறுமனே தலித்துகளின் அவலங்களை மட்டுமே சொல்லிவிட்டு நிற்கவில்லை கே. டானியலின் நாவல்கள். அவலங்களின் சித்தப்புக்கும் இணையாக தலித் மக்கள் காட்டிய எதிர்ப்புகளையும் அது பதிவு செய்கிறது. இது டானியலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம் ஆகும். இந்நாவலில் வரும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் வலுவாக தமது எதிர்ப்புணர்வைக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர். தமது கணவர்களை எதிர்த்துப் பேசி, சாதிய இழிவிலிருந்து அவனை தப்பும்படி தூண்டுகிறவர்களாக இருக்கின்றனர்.

ஆதிக்க சாதியர்க்குத் தொண்டூழியம் புரிபவர்களாக கோவியக்குடிகள், மாராயக் குடிகள், பள்ளக்குடிகள், நளக்குடிகள் பண்டாரம், கட்டாடி, பரியாரி என்று வகை வகையான அடிமைச் சாதிகள் நாவலில் குறிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து வேலையை, உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சாதியினர், அவர்கள் தடைகளை மீறுகையில் கொல்லவும் செய்கின்றனர். சுயநலம் கருதி சாதியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி காயம் சாதித்துக் கொள்கிறவர்கள், வகை வகையான கட்டுப்பாடுகளைப் போட்டு இறுக்கியும் வைக்கின்றனர்.

சாதி இந்துவான தன் ஆண்டையுடன் "கோச்' வண்டியில் உட்கார்ந்து போகும் அடிமை எல்லுப்போலை வெட்டிக் கொல்லப்படுகிறான். கோச் வண்டியில் சாதிக்காரர்கள் மட்டும்தான் ஏறலாம். யாழ்ப்பாணத்துக்கு ரயில் வருகிறபோது, அதில் எல்லா சாதியினரும் உட்கார்ந்து பயணம் செய்வார்கள் என்பதற்காகவே சாதி இந்துக்களால் மறியல் செய்யப்படுகிறது. தலித்துகள் கோவிலில் நுழையவும், தண்ணீர் எடுக்கவும், தெருவைப் பயன்படுத்தவும் தடை இருக்கிறது. மருத்துவர்கள் அவர்களைத் தீண்டி நாடி அறிவதில்லை. சாதி இந்துக்களின் தெருவில் நடக்கிறபோது காவோலை பிடித்திழுத்தபடிதான் நடக்க வேண்டும். இப்படி எண்ணற்ற சாதியக் கட்டுமானங்கள். இதைத் தமது திறத்தாலும், திறமையாலும் தலித்துகள் மீறுகிறபோது கும்பிடுகிறார்கள் சாதி இந்துக்கள்.

நாவலில் வரும் ஆட்டிறைச்சிப் பரியாரியும், கயித்தான் துரும்பனும், இத்தினியும், பண்டாயன், அண்ணாவி செல்லன் போன்ற தலித் பாத்திரங்கள் வலுவான எதிர்ப்புகளை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதிக்கு எதிராகக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர்.

தலித்துகளின் களிப்பு, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை மிக இயல்பாக எழுதிப் போகிறார் டானியல். ஈழத்தைப் புரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக இந்த நாவல் இருக்கிறதென்று கருதுகிறேன். இந்த நாவலை வாசிக்கும் முன்பாக தொலைக்காட்சியில் பணியாற்றும் ஈழத் தமிழர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழகத்தின் கிராமங்களுக்குப் போகிறபோது, சேரியும், ஊருமாகப் பிந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்ததாகச் சொன்னார். ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதென்றார். டானியலின் நாவல்கள் படம் பிடிக்கும் மிகச் சிக்கலான, கடுமையான சாதிய முறையைக் கொண்ட ஈழம் இன்று சாதியற்றதாக மாறிவிட்டிருக்கிறது என்பதைக் கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிசமாகவே அங்கு சாதி ஒழிக்கப்பட்டு விட்டிருந்தால், அதைவிடப் பேரானந்தம் வேறில்லை.'

(நன்றி: கீற்று & தலித் முரசு)