Friday, February 17, 2006

பெரியார்!

பெரியார், '‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.

ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. 'நிறப்பிரிகை' குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது 'புதிய கோடாங்கி'- 'கவிதாசரண்' என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).

இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.

கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.

நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்

கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.

(நன்றி - உன்னதம்)

My special thankx to Keetru

Tuesday, February 14, 2006

திரைக்காவியம்

காதற்கப்பல்

நடிகர்கள்:
சயந்தன் (வேலு)
வசந்தன் (முத்துபாண்டி)
அவுஸ்திரேலியா அஸின் (தனலட்சுமி)

பாட்டி வடை சுட்ட கதை, இந்தப்பழம் புளிக்கும் கதைகள் போல இது அவுஸ்திரேலியா அஸின் வசந்தனுக்கும் சயந்தனுக்கும் அல்வா கொடுத்து கப்பலைக் கவிழ்த்த கதை.



இயக்கமும் இசையும் நான் எனக்கூற விரும்பினாலும் அவையடக்கம் காரணமாய் வேறு சில நண்பர்களுக்கு அந்தப்புகழைத் தாரை வார்க்கின்றேன்.

காதலர் தினமன்று இலவு காத்த கிளியாகிப்போன அனைத்துக் காளையர்க்கும் இந்தப் பனம்பழம், சமர்ப்பணம்.

திரைக்காப்பியம் சற்று தெளிவில்லாது இருப்பதற்குக் காரணம், இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்து கண்ணீர் வடித்தவர்களால் காப்பி சற்றுக் கலங்கியதே காரணமாகும்

Thursday, February 09, 2006

பலதும் பத்தும்

திருமாவளவன், அண்மையில் ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையைக் கேட்டபோது இரண்டு விடயங்கள் முக்கியமானதாய்ப்பட்டது.
(எனது வார்த்தைகளில்/அறிதலில்)
(1) சாதியத்தை ஒழிக்க முயலாமல் தமிழ்ச் தேசியம் பேசுகின்றவர்கள் அனைவரும் போலிகள். சாதியம் ஒழிக்கப்படுகின்றபோது மட்டுமே தமிழ்தேசியம் உண்மையில் எழுச்சி பெறும்.
(2) பெரியார், ஒரு சேரியில் பிறந்தவராய் இருந்திருந்தால், பெரியாரின் இருப்பு இத்தனைக்கும் அங்கீகரிக்கப்பட்டிருக்குமா, அவரது வாதங்கள் அம்பலத்தில் ஏறியிருக்குமா என்பதை யோசித்துப்பார்க்கலாம்.


தேசியம் ஒரு கற்பிதம் என்று முற்றுமுழுதாக ஒதுக்கமுடியாவிட்டாலும், அது குறித்த பெரிய நம்பிக்கைகள் எனக்கு இல்லை. மனிதனாக அனைத்து எல்லைகளையும் கடக்க விரும்புகின்றவனாக இருந்தாலும், எதிரே இருப்பவன் நான் இன்ன இனம், இன்ன மொழி என்று பேசி, என்னையும் ஒரு இன அடையாளத்துடன், மொழியுடன் தொடர்புபடுத்தி தாழ்வாக உரையாடும்போது மட்டும், தேசியம் என்ற ஒரு அடையாளம் எனக்குத்தேவைப்படுகின்றது. அதாவது உனது இனத்துக்கு, உனது மொழிக்கு, எந்த விததிலும் தாழ்ந்ததோ உயர்ந்தோ அல்ல, எனது மொழியும் எனது இனமும் என்பதற்கு மட்டும் எனக்கு அடையாளங்கள் தேவைப்படுகின்றது. அவ்வளவே..... மற்றும்படி சக மனிதனாய், இனம், மொழி என்பவற்றைக் கடந்து பேசுகின்ற எவருடனும் அடையாளங்களுக்கான தேவைகள் இருப்பதில்லை. அப்படி உணரவேண்டிய நிலைமைகள் வருவதுமில்லை.

திருமாவளவன் கூறுகின்ற -சாதி ஒழிப்பில்லாது தேசியம் இல்லை- என்பதை ஈழத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசியப் 'பெருமை' பேசிக்கொண்டிருப்பவர்களும் கொஞ்சம் கவனதில் கொள்ளலாம். புலம்பெயர்ந்த சூழலில், தங்களின் கொடூர சாதிய முகங்களை தமிழ் தேசியத்துக்குள் புதைத்துக்கொண்டு திரிகின்றவர்களைக் காண்கின்றபோது, இவர்கள் நாளை நமது சமூகத்துக்கான சட்டங்களையும் அதிகாரங்களையும் நிறைவேற்றுபவர்களாக மாறினால் ஈழ/புலம்பெயர் தமிழ்ச் சூழல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அவலமாக இருக்கிறது
...........
இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரையும் அம்பேத்காரையும் எதிர் எதிர் முனையில் நிறுத்தி விவாதப்புள்ளிகளை உருவாக்குவது அபாயகரமானது. நிச்சயம் பெரியாரும்,அம்பேத்காரும் ஒருவரல்ல. ஆனால் அவர்கள் எதிரிகளுமல்ல (We are not same, but we are for each other என்று உறவுகளுக்கிடையில் கூறப்படும் சொற்றொடர்களை இவர்களின் கருத்துக்களுடனும் பொருத்திப்பார்க்கலாம்). ஒருவர் நிரப்பாத இடைவெளியை மற்றவரைக் கொண்டு நிரப்புவதே இன்றைய சூழலில் அவசியமே தவிர வெற்றிடங்களைத் தொடர்ந்து வெற்றிடங்களாக விடுவது, எதிர்ச்சக்திகளுக்கு ஆதாரமாய்ப் போய்விடக்கூடும். வள்ளலாரை, நாராயணகுருவை, விவேகானந்தரை, இன்னபிற சித்தர்களை, சூஃபிகளை எப்படி மதங்கள் சுவீகரித்துக்கொண்டனவோ, அப்படியான ஒரு எதிர் நிலைக்குள் இவர்களைத் தள்ளிவிடுவது தவிர்க்கப்படவேண்டும். காந்தியைக் கூட, இன்றையபொழுதில் தலித்துக்கள், பெரியாரியவாதிகள், மார்க்சிச்வாதிகள் விமர்சனங்களுடன் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற குரல்கள் தமிழ்ச் சூழலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பெரியாரின் இந்தப்பேச்சை வாசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் என்று பெரியார் கூறுவதை பார்ப்பனீயம் (ஆணாதிக்கம் மாதிரி) என்றே எனது வாசிப்பில் எடுத்துக்கொள்கின்றேன். பார்ப்பனீயச் சிந்தனைகளை, ஆதிக்க சக்திகளாக வளர்ந்த பிற சாதிகளும் சுவீகரித்துக் கொண்டு தங்களின் கீழ்மட்டத்தில் உள்ள சாதிகளை ஒடுக்கியபடிதானே இருக்கின்றன (ஈழத்தில் வெள்ளாளத்திமிரும் அடுத்த நிலைகளில் வருகின்ற சாதிகளும், பஞ்சமரை ஒடுக்கச் செய்வதைப்போல). ஆணிவேர் பார்ப்பனியமாய் இருந்தாலும், ஆதிக்கசாதிகளாக வளர்ந்த மற்றச்சாதிகளின் சாதியச்சிந்தனைக் கிளைகளும் ஒட்ட நறுக்கப்படவேண்டும் என்ற புரிதல் அனேகருக்கு இருக்கக்கூடும்.
.......
இடியப்பம் எப்படிச் செய்வது என்ற சுவாரசியமான செயல்முறையை வாசித்தபோது, இடியப்பத்தைப் போல சிக்கலும் நுட்பமும் நிறைந்த கருத்துச் சொல்லும் ஒருவரைப் பற்றி எழுதப்பட்டதையும் வாசிக்க நேர்ந்தது.
அது இங்கே

‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா? பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.

ஈழம் குறித்து இவர் கருத்தென்ன? அதில் இவர் பங்கென்ன? மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ?


இணைப்புகளுக்கு நன்றி: www.keetru.com