Sunday, November 12, 2006

லூசுப்படம் - கிழக்குக் கடற்கரைச்சாலை

'வரலாறு' படத்தைப் பார்க்காது அஸினைத் தவறவிட்டுவிட்டேன், அந்த தவறை இன்னொருமுறை விடக்கூடாது என்று பாவனாவைப் பார்ப்பதற்காய் 'கிழக்குக் கடற்கரைச்சாலை' படம் பார்க்கத் திரையரங்கிற்கு நேற்றுச் சென்றிந்தேன்.



bhavna



என்னவொரு அற்புதமான படம். தமிழ்ச் சினிமாவின் இன்னொரு மைற்கல் அது. உலகச்சினிமாத் தரத்திற்கு தமிழ்த்திரையை உயர்த்திவிடும், எவரும் தவிர்க்காது பார்க்கவேண்டிய வர்ணச்சித்திரம். ஈவ்-ரீஸிங் போன்றவற்றை just like that மாதிரி எடுக்கவேண்டும் என்ற அறிவுரை கூறும் அருமையான படம். நாயகன் ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை செய்வது அந்த நல்ல காரியத்தைத்தான். அடுத்த ஒரு தமிழ்ப்படத்தைப் பார்க்கப் பயமாயிருக்கிறது. பாலியல் வன்புணர்வையும் just like that மாதிரி எடுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?



lrg-2424-bhavana-1



படத்தின் நாயகனைப் பார்த்து, 'உனக்கு லூசா லூசா'? என்று பாவனா அடிக்கடி கேட்பார். முதலில் விளங்கவில்லை, ஏன் இப்படி பாவனா கேட்டுக்கொண்டிருக்கின்றார் என்று. பிறகுதான் நன்கு விளங்கியது. பாவனா நாயகனைக் கேட்கவில்லை, திரையிலிருந்து படம் பார்க்க வந்த எங்களைப் பார்த்துத்தான், இப்படியொரு அற்புதமான படத்தைப் பார்க்க வந்த 'நீங்கள்தான் லூசு லூசு' என்று சொல்லியிருக்கின்றார் போலும்.



b



நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று திரையரங்குச் சென்ற எங்களை -இந்த சனியையும் இழவுச் சனியாக மாற்றி- இரத்தக்கண்ணீர் வரச்செய்துவிட்டார்கள். நகைச்சுவை என்றபெயரில் கோமாளித்தனம் காட்டுவது போதாது என்று கூடவே வாயால் டமாரமடித்து செவிப்பறையை நோகவைத்து தலையிடியைத்தான் வரச்செய்து கொண்டிருந்தார்கள். வந்த விசருக்கு எப்படி திரைச்சீலையைக் கிழிக்காமல் சும்மா வந்தோம் என்று நினைக்க இன்னும் வியப்பாய்த்தானிருக்கிறது.



d



'சித்திரம் பேசுதடி'யே பார்த்துவிட்டு அஸினை 'கொஞ்சம் தள்ளியிரும் பிள்ளாய்' என்று கூறிவிட்டு, பாவனாவை பீடத்தில் ஏற்றிவைப்போம் என்று எண்ணியிருந்தேன். இனி 'நான் கடவுள்' வரும் வரை அந்த முடிவை பரிசீலனை செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருக்கின்றேன்.



இந்த லூசுப்படத்தைப் பற்றிய லூசுப் பதிவை வாசிக்க வந்த நீங்களும் லூசாக ஆகக்கூடாது என்பதற்காய் இடைக்கிடை பாவனாவைச் சிரிக்கவைத்திருக்கின்றேன். ஆகவே தயவுசெய்து என்னைத் திட்டாதீர்கள் :-).

Friday, November 10, 2006

கனடா?


இலங்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கு கனடாப்பாராளுமன்றத்தில் இருந்து ஒலிக்கும் குரல்!


Canada Continues Silence as Refugees are Killed by the Sri Lankan Armed Forces

(Press Release)

The Honourable Albina Guarnieri, P.C., M.P
Member of Parliament Mississauga East - Cooksville


The shelling of refugees sheltered in a school in Kathirveli by the Sri Lankan Armed Forces has claimed at least 50 lives and is the latest in a continuing campaign that has terrorized the civilian Tamil population.

It has been over two months since Swedish retired General Ulf Henricsson, then head of the Sri Lanka Monitoring Mission, ruled that the Sri Lankan military were responsible for the murders of 17 aid workers of the French group “Action Contre La Faim”. He called the mass murder of these aid workers, who were all shot in the head at close range: “one of the most serious recent crimes against humanitarian aid workers worldwide”.

While the EU condemned the killings, there has been continued silence from Canada. Not a word of condemnation has been heard for this mass murder or a targeted bombing that killed 61 schoolgirls, nor has there been any comment on the use of land mines by the Sri Lankan military.

Emboldened by the silence of friends like the current Canadian Government, the government of Sri Lanka continues to act with utter disregard for civilian lives. A crucial highway has been closed to Jaffna cutting off supplies and confining thousands to a growing humanitarian crisis. Bombing attacks continue to hit civilian targets, damaging schools and hospitals. As well, the International Committee of the Red Cross has received no less than 350 reports of targeted abductions and murders of Tamil civilians in the last ten months, many in the capital of Colombo.

The Harper Government’s continuation of aid and trade support for the Sri Lankan government and its absolute silence about continuing atrocities are bound to encourage a regime that is now clearly responsible for human rights abuses of horrific and historic proportions. It is time for the Canadian Government to remember our nation’s commitment to human rights and call for an end to military atrocities in Sri Lanka.

(Thankx to Tamilcanadian.com)

Tuesday, October 17, 2006

PRESS PLAY

P1010011


'Im the dream, Im the one

Im the reason you come, Im a king

Im a hum, im a beast

Im the last thing your eyes see

the passion beside me is yours now come try me'


(warning: explicit lyrics)



Diddy's back with his new album PRESS PLAY!

இசைத்தட்டு வெளிவந்தவுடனேயே இன்றே வாங்கியாயிற்று. தொடர்ந்து திருப்ப திருப்பக் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது.

Friday, July 14, 2006

Afro Fest - 2006

சென்ற சனிக்கிழமை, ஆப்ரோ நிகழ்வுக்கு நண்பர்கள் சிலராய் சேர்ந்து போயிருந்தோம். பாடலும், ஆடலும் அற்புதமான தாள்வாத்தியங்களோடு அந்த இரவு கரைந்துகொண்டிருந்தது. நமீபியா, கானா போன்ற நாடுகளின் பாடல்கள் சிலதைக் கேட்டபோது அப்படியே சிங்களப் பாடல்களைக் கேட்பது போன்று இருந்தது. இந் நாடுகளுக்கிடையில் போர்த்துக்கீசிய, ஸ்பானிய பின்புலம் ஒரு பொதுப்பண்பாய் இருப்பதால் அவ்வாறு எனக்குத் தோன்றியிருக்கக்கூடும்.

சில தினங்களுக்குப் பிறகு ஸிம்பாவே நாட்டுத்தோழியுடன் -விழாவுக்குப் போனது குறித்து - உரையாடிக்கொண்டிருந்தபோது, 'நீ அன்று நடந்த Salif Keita வின் நிகழ்வைப் பார்த்தாயா?' என்று வினாவினார். வழமைபோல -நேரத்துக்கு போவதில் நான் விண்ணன்- என்பதால் அந்த நிகழ்வைத் தவறவிட்டுவிட்டேன் என்றேன். Salif Keita ஒரு பிரபலமான ஆபிரிக்கா பாடகர் என்றும் அல்பீனோ நோயால் மிக மோசமாய் பிறந்ததிலிருந்தே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த வலிகளை தாண்டியும் எழுச்சியடைந்தவர் என்றார், அந்தத் தோழி.

மருத்துவ அறிவியல் காரணம் இந்நோயிற்கு என்ன காரணம் கூறுகின்றது என்று தெரியாதபோதும், ஆபிரிக்காக் கண்டத்தில் இப்படி அல்பீனோ நோயுடன் பலர் இருப்பதாகவும், அதற்கு ஒரு காரணமாய் வெள்ளையின ஆண்கள் கறுப்பினப்பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததும்... அதை ஏற்றுக்கொள்ளாத மரபணுக்களின் பிறழ்வும் இதற்கு ஒரு காரணம் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்தத் தோழி குறிப்பிட்டிருந்தார். எனக்கு, ஒரு நல்லதொரு கலைஞன் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தோசத்தில், இந்த வெள்ளிக்கிழமை சைனீஸ் உணவகத்தில் மதிய உணவு சாப்பிடுவோம் என்று அழைத்திருந்தேன் (or தீர்மானித்திருந்தோம்). இந்த முறையாவது எஙகளோடு வரப்போகும் வியட்னாமிய தோழி -நாங்கள் உணவருந்தும்போது- தான் தனது ஊரில் சாப்பிட்ட பாம்புக்கறியை பற்றி எதுவும் கூறி பயமுறுத்தாமல் இருக்க கடவுள் துணைபுரிவாராக.

"Happiness isn't for tomorrow. It's not hypothetical, it starts here and now. Down with violence, egoism and despair, stop pessimism. Let's pick ourselves up. Nature has given us extraordinary things. It's not over yet, nothing's decided. Let's take advantage of the wonders of this continent at last. Intelligently, in our own way, at our own rhythm, like responsible men proud of their inheritance. Let's build the country of our children. And stop taking pity on ourselves. Africa is also the joy of living, optimism, beauty, elegance, grace, poetry, softness, the sun, and nature. Let's be happy to be its sons, and fight to build our happiness."
-Salif Keita


IMG_0853


IMG_0762

IMG_0841

IMG_0848


IMG_0855


Photos: Ramanan

Saturday, July 08, 2006

Toronto Street Festival - 2006

நேற்றிலிருந்து (வெள்ளிக்கிழமை முதல்) தொடர்ந்து மூன்று நாட்களாய் ரொரண்டோ downtown உட்பட பல தெருக்களில் விழாக்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

Pop, R&B. Rap, Hip-Hip என்று ஆடல் பாடல்களுடன், பல்வேறு கலாச்சாரங்களின் பின்புலங்களுடன் பல நிகழ்வுகளைப் பார்க்க அருமையாக இருந்தது.

க்யூபாவில், மெக்சிகோவில், ஆர்ஜெண்டைனாவில், கயனாவில்,பிரேசிலில் இருந்து எல்லாம் கலைஞர்கள் வந்து தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருப்பதுதான் இன்னும் வசீகரிக்கின்றது. கனடாவில் வாழ்ந்துகொண்டிருபதில் எத்தனையோ குறைகள் இருந்தாலும், இவ்வாறான ஒரு பல்கலாச்சாரச் சூழலில், சகிப்புத்தன்மையுடன் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இந்தப்பனிபுலம்பெயர்நாட்டின் இருப்பு எதோ ஒருவகையில் இதத்தைத் தருகின்றது.

இன்று சனிக்கிழமை அதிகம் ஆப்ரோ பெஸ்டிவலாய் இருக்கும் என்று நேற்று அறிவித்திருந்தார்கள். இரவும் போவதாயும் உத்தேசம் இருக்கிறது.

P2250061
கயானா பெண்மணியொருவர் பாடல் இசைத்தல்: பாடியது மட்டுமின்றி மிகுந்த நளினத்துடன் ஆடவும் செய்தபடி, இரசித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் தன்னோடு இணைந்து/இசைந்து பாடச்செய்து நிகழ்வை முழுக்கூட்டத்தின் கொண்டாட்டமாய் ஆக்கிக்கொண்டிருந்தார்.

P2250062
பிரெஞ்சுக்காரர்கள் செய்த வித்தியாசமான நெருப்புடன் இணைந்த நடனத்தின் ஆரம்பப்பகுதி

P2250051
பிரேசிலிருந்து வந்த கலைஞர்கள்.

P2250058
மெக்ஸிவோவில் இருந்து வந்த (பதின்ம?) வயதுப் பெண். அப்படியே எனக்கு ஷ்கிராவை நினைவுபடுத்தியவர். மிக இனிமையான குரலுக்குரியவர். மேலும் நாளை நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்ட இறுதியாட்டத்தின் ஆரம்பத்தில் (அசல்) ஷகிரா பாடப்போகின்றாராம். தவறவிடுவேனா என்ன?

P2250063
நெருப்பு நடனத்தின் நீட்சியில்.

P2250054
பிரேசில் கலைஞர்களின், பாடல்களின் இலயத்துக்கேற்ப தெருவில் போட்ட ஆட்டந்தான் மிகவும் கவர்ந்தது. இந்த ஆட்டத்தின் பெயர் என்னவென்று தெரியாதபோதும், கிட்டத்தட்ட கராத்தே அசைவுகளை ஒத்திருந்தாலும், ஆனால் எவரின் உடல்மீது எவரின் உடலும் படாமல் அழகான இலயத்தில் மாறி மாறி பலர் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

P2250066
நிகழ்வு முடிந்தபோது.....
நிலவும், மெல்லிய வெளிச்சத்தில் சி.என் (CN) ரவரும்

Saturday, July 01, 2006

இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை

_41782520_ozfaninaussie_getty1

கால் இறுதி ஆட்டத்தில் நேற்று ஆர்ஜென்ரீனா தோற்க, இன்று பிரேசிலும் தோற்றுப்போய்விட இனி வரும் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டங்களைச் சுவாரசியமாய்ப் பார்க்கும் விருப்பும் போய்விட்டது :-(.

மிச்ச நினைவலைகள் பின்பு.

Friday, March 03, 2006

கே.டானியல்

கே.டானியல் ஈழத்து பஞ்சம இலக்கியங்களின் முன்னோடியாக மட்டுமில்லாது, தமிழ்நாட்டு தலித்திலக்கியத்தின் பிதாமகராகவும் பல தலித்துக்ககளால் கொண்டாடப்படுபவர். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில், பெண் கவிஞர்கள் குறித்துப் பேசப்படுகின்றபோது, தொடர்ந்தும் ஈழத்துப் பெண்கவிஞர்களின் பங்களிப்பு, பல படைப்பிலக்கியவாதிகள் மற்றும் விமர்சகர்களால் மறைக்கப்படுவதுபோன்று, தமிழக தலித்துக்கள் கே.டானியலை இருட்டிப்புச் செய்து, தங்களை மட்டும் முன்னோடியாக நிலை நிறுத்திய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. ஆறுதல் தரும் விடயமும் கூட.

சென்ற வருடம் அ.மார்க்ஸ் தொகுத்த, கே.டானியனின் கடிதங்களை வாசித்தபோது ஒரு எழுத்தாளருக்குரிய டானியலின் ஆதஙகங்களும், கனவுகளும், அலைவுகளும், சலிப்புக்களும் வெளிப்படையாகத் துலங்கின. தற்போது அடையாளம் பதிப்பகம், கே.டானியலின் ஆறு நாவல்களையும் ஒரு முழுமையான தொகுப்பாக கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

'தகப்பன் கொடி' போன்ற தமிழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாவலையும், பல நல்ல கதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அழகிய பெரியவன் கே.டானியலின் படைப்புக்கள் பற்றி இப்படி எழுதுகின்றார்....

'மூத்த தலித் எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் ஆறு நாவல்களையும் ஒரே தொகுப்பாக "அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெரிய, தடிமனான புத்தகம். நேர்த்தியான பதிப்பு. இந்த ஆறு நாவல்களில் "அடிமைகள்', "கோவிந்தன்' ஆகிய இரு நாவல்களும் அடிமைகளின் வாழ்வைச் சொல்வதால் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகின்றன.

சாதியக் கொடுமைகளுடன் அடிமை முறையும் இணைந்தேதான் தொடக்கக் கால இந்தியச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆண்டை அடிமை முறை என்பது, நேற்று வரை இருந்த, இன்றளவும் வேறு வடிவங்களில் தொடருகின்ற ஓர் அடிமை முறையே. காளைக்குப் பதிலாக அடிமையான கீழ்ச் சாதிக்காரரை நுகத்தில் வைத்துப் பூட்டி உழுத கதைகளை கேரளத்தின் வரலாற்றில் படிக்க முடிகிறது. தமிழகத்தில் நிலவிய அடிமை முறைகளைப் பற்றி ஆ. சிவசுப்பிரமணியத்தின் ("தமிழகத்தில் அடிமை முறை') நூலின் வாயிலாக விரிவாக நாம் அறியலாம்.

கருப்பர்களின் அடிமைத்தனத்தை விடவும் இந்திய சாதிமுறை மிகக் கொடூரமானதென்கிறார் அம்பேத்கர். சாதியக் கொடுமைகளோடு, அடிமை முறையின் துன்பங்களும் இணைந்து, இந்திய தலித் ஒருவன் வாழ்வு கற்பனைக்கெட்டாத நரக வாழ்வாக நிலைப்பெற்று இருந்திருக்கிறது. இந்த வாழ்வை தமிழகத்தில் எழுதப்பட்ட எந்த தொடக்கக் கால நாவலும், கதையும் பதிவு செய்யவில்லை. இன்றளவிலும்கூட வெளிவந்திருக்கும் படைப்புகள், தலித் அடிமை முறையின் வலுவான வரலாற்றுப் பின்னணியையும், கதைக்களனையும் கொண்டு எழுதப்பட்டதாக இல்லை. ஆனால், கே. டானியலின் நாவல்கள் இதைச் செய்திருக்கின்றன.

"அடிமைகள்' நாவல் 1890 முதல் 1956 வரைக்குமான அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலவெளியில் நடைபெறும் நிகழ்வுகளைச் சொல்கிறது. யாழ்ப்பாணம், அதன் கிராமப் பகுதிகள் ஆகியவற்றில் நிகழும் சமூக மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.

"சாதிப் பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்காத தமிழர்களின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பது, எனது துணிவான முடிவு. இது சரியானதே. அதனாலேயே நான் இந்த இயல்பான தமிழனின் வாழ்க்கையை இலக்கியம் ஆக்குகிறேன்' என்று கருதும் டானியல், அதற்கு ஏற்ற மாதிரியே சாதியின் அத்தனை சலுகைகளையும், மேன்மைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கிற ஆதிக்க சாதித் தமிழர்களின் வாழ்வை மிக நெருக்கமாக நின்று பார்க்கும்படி செய்கிறார்.

வேலுப்பிள்ளை, சீதேவி நாச்சியார் ஆகியோரின் வாழ்வை முன்வைத்துக்கொண்டு கிளை கிளையாகப் பிரிந்து பரவுகிறது நாவல். சீதேவியின் அப்பா யாழ்ப்பாணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் புகழ்ப் பெற்ற புத்தூர் பல்லக்கு தலித் தம்பி. வேலுப்பிள்ளையின் தந்தையோ யாழ்ப்பாணம் கோட்டையில் வேலை செய்தவர். இந்த வகையான செல்வாக்கு மிகுந்த குடும்பங்களுக்கிடையிலே நடக்கும் திருமணத்துக்கு, ஓர் அடிமைக் குடும்பம் சீர்வரிசையாகத் தரப்படுகிறது. அடிமைக் குடும்பங்களை மணப்பெண் சார்பாக சீர்வரிசையாகத் தருவது என்பது, அப்போது இருந்த வழக்கம். அப்படி சீதேவி நாச்சியாருக்குத் தரப்படும் அடிமைகளான இத்தினி, எல்லுப்போலை ஆகியோடமிருந்து தொடங்கி சுமார் 12 கிளைக் கதைகளாக இருக்கிறது நாவல்.

இந்த நாவலை இரு பகுதிகளாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம். அக்காலத்திலேயே ஈழத்தில் இருந்த சாதிய நடைமுறைகள் கட்டுப்பாடுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் இது ஒரு பகுதி. இந்தக் கொடுமைகளை எதிர்த்திடும் தலித்துகளின் செயல்பாடுகள் இது மற்றொரு பகுதி. வெறுமனே தலித்துகளின் அவலங்களை மட்டுமே சொல்லிவிட்டு நிற்கவில்லை கே. டானியலின் நாவல்கள். அவலங்களின் சித்தப்புக்கும் இணையாக தலித் மக்கள் காட்டிய எதிர்ப்புகளையும் அது பதிவு செய்கிறது. இது டானியலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம் ஆகும். இந்நாவலில் வரும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் வலுவாக தமது எதிர்ப்புணர்வைக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர். தமது கணவர்களை எதிர்த்துப் பேசி, சாதிய இழிவிலிருந்து அவனை தப்பும்படி தூண்டுகிறவர்களாக இருக்கின்றனர்.

ஆதிக்க சாதியர்க்குத் தொண்டூழியம் புரிபவர்களாக கோவியக்குடிகள், மாராயக் குடிகள், பள்ளக்குடிகள், நளக்குடிகள் பண்டாரம், கட்டாடி, பரியாரி என்று வகை வகையான அடிமைச் சாதிகள் நாவலில் குறிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து வேலையை, உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சாதியினர், அவர்கள் தடைகளை மீறுகையில் கொல்லவும் செய்கின்றனர். சுயநலம் கருதி சாதியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி காயம் சாதித்துக் கொள்கிறவர்கள், வகை வகையான கட்டுப்பாடுகளைப் போட்டு இறுக்கியும் வைக்கின்றனர்.

சாதி இந்துவான தன் ஆண்டையுடன் "கோச்' வண்டியில் உட்கார்ந்து போகும் அடிமை எல்லுப்போலை வெட்டிக் கொல்லப்படுகிறான். கோச் வண்டியில் சாதிக்காரர்கள் மட்டும்தான் ஏறலாம். யாழ்ப்பாணத்துக்கு ரயில் வருகிறபோது, அதில் எல்லா சாதியினரும் உட்கார்ந்து பயணம் செய்வார்கள் என்பதற்காகவே சாதி இந்துக்களால் மறியல் செய்யப்படுகிறது. தலித்துகள் கோவிலில் நுழையவும், தண்ணீர் எடுக்கவும், தெருவைப் பயன்படுத்தவும் தடை இருக்கிறது. மருத்துவர்கள் அவர்களைத் தீண்டி நாடி அறிவதில்லை. சாதி இந்துக்களின் தெருவில் நடக்கிறபோது காவோலை பிடித்திழுத்தபடிதான் நடக்க வேண்டும். இப்படி எண்ணற்ற சாதியக் கட்டுமானங்கள். இதைத் தமது திறத்தாலும், திறமையாலும் தலித்துகள் மீறுகிறபோது கும்பிடுகிறார்கள் சாதி இந்துக்கள்.

நாவலில் வரும் ஆட்டிறைச்சிப் பரியாரியும், கயித்தான் துரும்பனும், இத்தினியும், பண்டாயன், அண்ணாவி செல்லன் போன்ற தலித் பாத்திரங்கள் வலுவான எதிர்ப்புகளை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதிக்கு எதிராகக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர்.

தலித்துகளின் களிப்பு, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை மிக இயல்பாக எழுதிப் போகிறார் டானியல். ஈழத்தைப் புரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக இந்த நாவல் இருக்கிறதென்று கருதுகிறேன். இந்த நாவலை வாசிக்கும் முன்பாக தொலைக்காட்சியில் பணியாற்றும் ஈழத் தமிழர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழகத்தின் கிராமங்களுக்குப் போகிறபோது, சேரியும், ஊருமாகப் பிந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்ததாகச் சொன்னார். ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதென்றார். டானியலின் நாவல்கள் படம் பிடிக்கும் மிகச் சிக்கலான, கடுமையான சாதிய முறையைக் கொண்ட ஈழம் இன்று சாதியற்றதாக மாறிவிட்டிருக்கிறது என்பதைக் கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிசமாகவே அங்கு சாதி ஒழிக்கப்பட்டு விட்டிருந்தால், அதைவிடப் பேரானந்தம் வேறில்லை.'

(நன்றி: கீற்று & தலித் முரசு)

Friday, February 17, 2006

பெரியார்!

பெரியார், '‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர்.

ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. 'நிறப்பிரிகை' குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது 'புதிய கோடாங்கி'- 'கவிதாசரண்' என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே).

இவ்வாறான விவாதங்கள், வியாக்கியானங்கள் என்பவற்றினூடாகவும் பெரியார், தன்னைப் புதிதாய் வாசித்து விளங்கி கொள்கின்றவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக விகர்சிப்பதுதான் குறிப்பிட வேண்டியது. இதுவேதான் பெரியார் இன்னும் காலாவதியாகவில்லை என்பதையும், இன்றைய காலத்துக்கும் அவரின் சிந்தனைகளுக்கான தேவையுள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.

கீழேயுள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள்.

நம் காலத்துக் கேள்வி
-ரமேஷ் - பிரேம்

கேள்வி: தமிழின் பின்நவீனத்துவ எழுத்தாளர்களாகிய நீங்கள், உலக அளவிலுள்ள தத்துவார்ந்த விசயங்களையும் நுட்பங்களையும் கற்றுணர்ந்து வந்துள்ளீர்கள். தமிழின் சிந்தனைத் தளத்திலும் புத்தர், அம்பேத்கர், பெரியார் குறித்தெல்லாம் விவாதித்தும் எழுதியும் வருகிறீர்கள். சமீபகாலமாக பெரியார் குறித்த கடும் விவாதங்கள் புயலைக் கிளப்புகின்றன. பெரியார் குறித்த உங்களது விமர்சனப் பார்வையை இந்தத் தருணத்தில் முன்வைப்பதுதானே சரியானது?

ரமேஷ் - பிரேம் பதில்: பெரியார் ஈ.வெ.ராமசாமியை விமர்சித்து ஒதுக்கும் அளவுக்கு எங்களுக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவியோ அரசியல் தலைவரோ இதுவரை உருவாகவில்லை. தமிழ் அறிவுச்சூழலும் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வேறு தளத்திற்குச் சென்றுவிடவில்லை.

பெரியார் தமிழரல்ல. தமிழகத்திலுள்ள யாதொரு சாதியையும் சேர்ந்தவருமல்ல. அவருடைய குரல் வந்த இடத்திலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்காக ஒலித்ததே இல்லை. இந்தவிதத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இவருக்கு உதாரணமாகச் சொல்ல வேறு ஆள் இல்லை.

பெரியார் பேசியது ஒட்டுமொத்தத் தமிழருக்கு ஒட்டுமொத்தத் திராவிடருக்கு. அவர் தலித்துகளுக்கு எதிரானவராகவும் பெண்களுக்கு எதிரானவராகவும் ஒரு சிலரால் முன்வைக்கப்படும் கருத்துகள் யாவும் அபத்தமானவை. இதை பெண்களே எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கவிஞர் மாலதிமைத்ரி தனது ‘விடுதலையை எழுதுதல்’ கட்டுரைத் தொகுப்பை பெரியாருக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.

பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.

இன்று பெரியாருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் யாவும் பெரியாருடைய தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகளே. இந்தக் கருத்துக்கள் அவருடைய வெளிப்படையான ஒளிவு மறைவற்ற எழுத்துக்களிலிருந்தே தொகுத்தும் திரித்தும் எடுக்கப்படுகின்றன. பெரியாரே வெளிப்படையாகத் தன்னைத் திறந்துகாட்டிய பிறகு அவருடைய கூற்றிலிருந்தே எடுத்து அவரை பாலியல் ஒழுக்கமற்றவர் எனக்கூறுவது அபத்தமானது.

பெரியார், தமிழ் பின்நவீனவாதி. கடல் போல பேசியும் எழுதியும் செயல்பட்டுமிருக்கிறார். அவரது மிகப்பெரும் சிந்தனா வாழ்வின் ஒவ்வொரு வாக்கியத்தையும் காலவரிசைப்படி பொருள்கொள்ளவேண்டும். அதைத் தவிர்த்து வரலாற்றுப் புரட்டலில் ஈடுபடும் அரைவேக்காட்டு அறிவுஜீவிகளால் ஒரு சமூகக் குற்றத்தைத்தான் செயல்படுத்த முடியும். ‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ இப்படி யாரும் உலக அளவில் தன்னை நிராகரித்தவரில்லை.

பெரியார்கோட்பாட்டளவில் மட்டுமே செயல்பட்ட ஒரு மனிதர். அவர் ஆசைப்பட்டிருந்தால் தமிழகத்தின் முதலமைச்சராகியிருப்பார். ஆனால் அவரோ ஒரு நாடோடிச் சிந்தனாவதி. பார்ப்பனீயத்தைக் கட்டுடைத்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். பார்ப்பனீயமே இந்தியப் பாசிசம் எனப் பரந்துபட்ட மக்களைப் பேசவைத்தவர் பெரியார். அவருக்கு நிகரான வேறொரு ஆளுமை இன்றுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பெரியாருக்கு மட்டுமே சாதியழிந்த தமிழ்த்தேசியம் முதல் கனவாகவும் அதுவே எல்லாருடைய இறுதிக் கனவாகவும் இருந்தது. இருக்கிறது. தலித்துகளை ஆட்கொண்டது பெரியார். தலித்துக்கள் ஆட்கொண்டது எம்.ஜி.ஆரை. இன்றுவரை தலித் அறிவுஜீவிகளை எம்.ஜி.ஆருக்கு எதிரான சொல்லாடல்களை ஏன் உருவாக்கவில்லை? எம்.ஜி.ஆரிடமிருந்து தலித்துக்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?

பெரியாரைக் குறித்துக் கடும்புயல் ஏதும் வீசவில்லை. பெரியார், தலித்துகளுக்கு எதிரானவர் என்றும், அவர் பெண்களை மதிக்காத ஒழுங்கினர் என்றும் பேசப்படுகின்றன. இரண்டொருவர் இப்படி பெரியார் மீது அவதூறுகளைச் சுமத்தி தங்களை பரபரப்பான ஒரு வியாபாரப் பொருளாக மாற்ற முனைகிறார்கள்.

(நன்றி - உன்னதம்)

My special thankx to Keetru

Tuesday, February 14, 2006

திரைக்காவியம்

காதற்கப்பல்

நடிகர்கள்:
சயந்தன் (வேலு)
வசந்தன் (முத்துபாண்டி)
அவுஸ்திரேலியா அஸின் (தனலட்சுமி)

பாட்டி வடை சுட்ட கதை, இந்தப்பழம் புளிக்கும் கதைகள் போல இது அவுஸ்திரேலியா அஸின் வசந்தனுக்கும் சயந்தனுக்கும் அல்வா கொடுத்து கப்பலைக் கவிழ்த்த கதை.



இயக்கமும் இசையும் நான் எனக்கூற விரும்பினாலும் அவையடக்கம் காரணமாய் வேறு சில நண்பர்களுக்கு அந்தப்புகழைத் தாரை வார்க்கின்றேன்.

காதலர் தினமன்று இலவு காத்த கிளியாகிப்போன அனைத்துக் காளையர்க்கும் இந்தப் பனம்பழம், சமர்ப்பணம்.

திரைக்காப்பியம் சற்று தெளிவில்லாது இருப்பதற்குக் காரணம், இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்து கண்ணீர் வடித்தவர்களால் காப்பி சற்றுக் கலங்கியதே காரணமாகும்

Thursday, February 09, 2006

பலதும் பத்தும்

திருமாவளவன், அண்மையில் ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையைக் கேட்டபோது இரண்டு விடயங்கள் முக்கியமானதாய்ப்பட்டது.
(எனது வார்த்தைகளில்/அறிதலில்)
(1) சாதியத்தை ஒழிக்க முயலாமல் தமிழ்ச் தேசியம் பேசுகின்றவர்கள் அனைவரும் போலிகள். சாதியம் ஒழிக்கப்படுகின்றபோது மட்டுமே தமிழ்தேசியம் உண்மையில் எழுச்சி பெறும்.
(2) பெரியார், ஒரு சேரியில் பிறந்தவராய் இருந்திருந்தால், பெரியாரின் இருப்பு இத்தனைக்கும் அங்கீகரிக்கப்பட்டிருக்குமா, அவரது வாதங்கள் அம்பலத்தில் ஏறியிருக்குமா என்பதை யோசித்துப்பார்க்கலாம்.


தேசியம் ஒரு கற்பிதம் என்று முற்றுமுழுதாக ஒதுக்கமுடியாவிட்டாலும், அது குறித்த பெரிய நம்பிக்கைகள் எனக்கு இல்லை. மனிதனாக அனைத்து எல்லைகளையும் கடக்க விரும்புகின்றவனாக இருந்தாலும், எதிரே இருப்பவன் நான் இன்ன இனம், இன்ன மொழி என்று பேசி, என்னையும் ஒரு இன அடையாளத்துடன், மொழியுடன் தொடர்புபடுத்தி தாழ்வாக உரையாடும்போது மட்டும், தேசியம் என்ற ஒரு அடையாளம் எனக்குத்தேவைப்படுகின்றது. அதாவது உனது இனத்துக்கு, உனது மொழிக்கு, எந்த விததிலும் தாழ்ந்ததோ உயர்ந்தோ அல்ல, எனது மொழியும் எனது இனமும் என்பதற்கு மட்டும் எனக்கு அடையாளங்கள் தேவைப்படுகின்றது. அவ்வளவே..... மற்றும்படி சக மனிதனாய், இனம், மொழி என்பவற்றைக் கடந்து பேசுகின்ற எவருடனும் அடையாளங்களுக்கான தேவைகள் இருப்பதில்லை. அப்படி உணரவேண்டிய நிலைமைகள் வருவதுமில்லை.

திருமாவளவன் கூறுகின்ற -சாதி ஒழிப்பில்லாது தேசியம் இல்லை- என்பதை ஈழத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசியப் 'பெருமை' பேசிக்கொண்டிருப்பவர்களும் கொஞ்சம் கவனதில் கொள்ளலாம். புலம்பெயர்ந்த சூழலில், தங்களின் கொடூர சாதிய முகங்களை தமிழ் தேசியத்துக்குள் புதைத்துக்கொண்டு திரிகின்றவர்களைக் காண்கின்றபோது, இவர்கள் நாளை நமது சமூகத்துக்கான சட்டங்களையும் அதிகாரங்களையும் நிறைவேற்றுபவர்களாக மாறினால் ஈழ/புலம்பெயர் தமிழ்ச் சூழல் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அவலமாக இருக்கிறது
...........
இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரையும் அம்பேத்காரையும் எதிர் எதிர் முனையில் நிறுத்தி விவாதப்புள்ளிகளை உருவாக்குவது அபாயகரமானது. நிச்சயம் பெரியாரும்,அம்பேத்காரும் ஒருவரல்ல. ஆனால் அவர்கள் எதிரிகளுமல்ல (We are not same, but we are for each other என்று உறவுகளுக்கிடையில் கூறப்படும் சொற்றொடர்களை இவர்களின் கருத்துக்களுடனும் பொருத்திப்பார்க்கலாம்). ஒருவர் நிரப்பாத இடைவெளியை மற்றவரைக் கொண்டு நிரப்புவதே இன்றைய சூழலில் அவசியமே தவிர வெற்றிடங்களைத் தொடர்ந்து வெற்றிடங்களாக விடுவது, எதிர்ச்சக்திகளுக்கு ஆதாரமாய்ப் போய்விடக்கூடும். வள்ளலாரை, நாராயணகுருவை, விவேகானந்தரை, இன்னபிற சித்தர்களை, சூஃபிகளை எப்படி மதங்கள் சுவீகரித்துக்கொண்டனவோ, அப்படியான ஒரு எதிர் நிலைக்குள் இவர்களைத் தள்ளிவிடுவது தவிர்க்கப்படவேண்டும். காந்தியைக் கூட, இன்றையபொழுதில் தலித்துக்கள், பெரியாரியவாதிகள், மார்க்சிச்வாதிகள் விமர்சனங்களுடன் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற குரல்கள் தமிழ்ச் சூழலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பெரியாரின் இந்தப்பேச்சை வாசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் என்று பெரியார் கூறுவதை பார்ப்பனீயம் (ஆணாதிக்கம் மாதிரி) என்றே எனது வாசிப்பில் எடுத்துக்கொள்கின்றேன். பார்ப்பனீயச் சிந்தனைகளை, ஆதிக்க சக்திகளாக வளர்ந்த பிற சாதிகளும் சுவீகரித்துக் கொண்டு தங்களின் கீழ்மட்டத்தில் உள்ள சாதிகளை ஒடுக்கியபடிதானே இருக்கின்றன (ஈழத்தில் வெள்ளாளத்திமிரும் அடுத்த நிலைகளில் வருகின்ற சாதிகளும், பஞ்சமரை ஒடுக்கச் செய்வதைப்போல). ஆணிவேர் பார்ப்பனியமாய் இருந்தாலும், ஆதிக்கசாதிகளாக வளர்ந்த மற்றச்சாதிகளின் சாதியச்சிந்தனைக் கிளைகளும் ஒட்ட நறுக்கப்படவேண்டும் என்ற புரிதல் அனேகருக்கு இருக்கக்கூடும்.
.......
இடியப்பம் எப்படிச் செய்வது என்ற சுவாரசியமான செயல்முறையை வாசித்தபோது, இடியப்பத்தைப் போல சிக்கலும் நுட்பமும் நிறைந்த கருத்துச் சொல்லும் ஒருவரைப் பற்றி எழுதப்பட்டதையும் வாசிக்க நேர்ந்தது.
அது இங்கே

‘3, 96,78, 943வது தடவையாக...’ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆங்கில, நாளிதழுக்கு பேட்டி அளித்தார்’ என்று கருணாநிதி தனது கீறல் விழுந்த கிராமபோன் பிளேட்டை மறுபடியும் போட்டிருக்கிறார். அவர் ஆதரித்து பேட்டி கொடுத்தார்... சரி, அதை இவர் ஆதரிக்கிறாரா இல்லையா? பதில் கிடையாது. ஒருவேளை ஜெ. முழுமையாக பெரியாரை ஆதரித்தால் இவர் எதிர்ப்பார் போலிருக்கிறது. தமிழீழம்தான் தீர்வு என்றால் சந்திரிகாவே சரி என்பார் போலிருக்கிறது.

ஈழம் குறித்து இவர் கருத்தென்ன? அதில் இவர் பங்கென்ன? மெளனம் தான் பதில். (ஒருவேளை உலகத் தமிழினத் தலைவர் பதவியை தம்பி தட்டிக்கொண்டு போய்விட்டாரே என்கிற ஆதங்கமாகக்கூட இருக்கலாம்). ஒரு இயக்கம் தனது கருத்துக்கு ஏற்றபடியெல்லாம் நடந்தது கொள்ளவில்லை என்பதற்காகவே அரைக்கோடித் தமிழரது உயிர் வாழ்தலுக்கான போரையே உதாசீனப்படுத்துபவர் எப்படித் தமிழ் இனத்துக்கே தலைவராவார் என்பதுதான் புரிபடவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து வலியுறுத்திக் கேட்டால் “மத்திய அரசின் கருத்து தான் கழகத்தின் கருத்தும்” என்கிறார். மத்திய அரசின் கருத்து இந்தியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. சமஸ்கிருதம்தான் சரி என்கிறது. ‘சோ’திடக் கல்வியே போதும் என்கிறது. புத்தகங்கள் வேண்டாம் கிளிப்பெட்டிதான் சரி என்கிறது. அப்படியானால் கழகத்தின் கருத்தும் அதுதானோ?


இணைப்புகளுக்கு நன்றி: www.keetru.com

Monday, January 30, 2006

இயல் விருது - 2005

ஒரு விருதும், என் விசனமும்

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் (உயிர்மையில் என்று நினைக்கின்றேன்) கனடாவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட சிறந்ததுதான்.

Friday, January 27, 2006

ஏலம் போகும் அரசியல்

< சிரிப்பு வருகிது சிரிப்பு வருகிது நினைக்க நினைக்க சிரிப்பு வருகிது>

பாலஸ்தீனியத்தில் தேர்தல் நடந்து காமாஸ்(Hamas) பெரும்பான்மை ஆசனங்களை வென்றுள்ளது. யாசீர் அரபாத் கட்டி வளர்த்த Fatah கட்சி 43 ஆசனங்களைப் பெற, காமாஸ் 132 ஆசனங்களில் 76ஐப் பெற்று பலரை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. வழமைபோல ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ரொனி ப்ளேயர், கனடாவின் வருங்கால பிரதமர் Stephen Harper வரை அனைவரும் மூக்கால் அழுதபடி இருக்கின்றார்கள். சனநாயகத் தேர்தல் நடந்தாலும் உள்ளே புகுந்து தமது பொம்மை அரசை நிறுவி குள்ளநரிச் சிரிப்பைச் சிந்துபவர்களுக்கு இதைத் தாங்கிக்கொள்வது கடினமாய்த்தான் இருக்கும். இந்த அரசியல் கனவான்கள் தங்கள் பேச்சினிடையில் அதிகம் பாவித்த சொல் 'பயங்கரவாதிகள்' என்பதுதான். சரி, சரி காமாஸும் அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களும் பயங்கரவாதிகள் என்று வைத்துக்கொண்டாலும், அப்படியாயின் இஸ்ரேலிய அரசாங்கத்தை என்னவென்று அழைப்பதாம்? நேற்று பிபிசியைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, காமாஸ் அங்கே குண்டு வைத்தார்கள், இங்கே குண்டு வைத்தார்கள் என்று பிபிசி நிருபரும் மிகக் கஷ்டப்பட்டு தனது நடுநிலையை நிறுவிக்கொண்டிருந்தார் (பொதுமக்களை பலிக்கடாவாக்கும் தாக்குதல்களுடன் எவருக்குத்தான் உடன்பாடிருக்கும்?). ஆனால் ஒவ்வொரு இஸ்ரேலிய தேர்தல்களின்போது இஸ்ரேலிய அரசாங்கம் அங்கே குண்டுபோட்டார்கள், இந்த அகதிமுகாமை முற்றாக நிர்மூலமாக்கினார்கள் என்று ஏன் செய்திகளில் காட்டுவதில்லை என்பது நமக்கு ஞாபகத்துக்கு வருவதில்லை. வரவும் கூடாது.

கனடாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னர், கொன்சர்வேர்டிக் கட்சியின் உபதலைவர் Peter Mckay தாங்கள் அரசமைத்தால், விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்யப்போவதாக கூறியிருக்கின்றார் என்று ஆனந்தக் கூத்தாடும் கட்டுரை ஒன்றை வலைப்பதிவில் வாசித்திருந்தேன். சரி புலிகளைத் தடை செய்கின்றார்களோ அல்லது புலிகள் கனடாவுக்கு வந்து ஸொப்பிங் செய்கின்றார்களோ அந்த விடயத்தை இப்போதைக்கு விடுவோம் (எங்களுக்கு மட்டுமா ஷொப்பிங் செய்வதற்கும் கேர்ல்ஸை சைட் அடிப்பதற்கும் ஏகபோக உரிமை இருக்கா என்ன?) அந்தக் கட்டுரையைப் பூதக்கண்ணாடிப் போட்டு பார்த்தாலும் இலங்கை இராணுவம் செய்த 'நல்ல விடயங்கள்' ஒன்றையும் பெரிதாகக் காணவில்லை.

ஆனால் நமது மூத்த தோழர் ஷோபாசக்தி என்ன சொல்லியிருக்கின்றார்? 'நான் புலிகளை 100% எதிர்க்கின்றேன் என்றால் இலங்கை அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன்' என்றல்லவா அவர் உறுதிமொழி எடுத்திருந்தார் (ஆனால் அவருக்கும் இந்தியா ரூடே போன்றவற்றிற்கு கருத்து/நேர்காணல் கூறும்போது, புலிகளை 100% எதிர்க்கின்றேன், இலங்கை அரசாங்கத்தை 0% அமுக்கி வாசிக்கின்றேன் என்றுதான் போர்மிலாவை மாற்றிப்போட்டு அசத்துகின்றார் என்பது வேறுவிடயம்). அப்படி எனில் இலங்கை அரசாங்கத்தை 100% வீதம் தடை செய்தால்தானே, புலிகளை ஆகக்குறைந்து 50% வீதமாவது கனடாவில் தடை செய்ய முடியும் என்றுதானே இந்த அரசியல் சூத்திரம் நிறுவுகின்றது.

என்னவோ போங்கள்? நமது கவிஞர்கள், கதைஞர்கள், நடுநிலைமைவாதிகள் 'மற்ற விடயங்களில்'தான் வீக் என்று இதுவரை கேள்விப்பட்டனான். இப்போது கணக்கிலும் வீக் என்பதும் புரிகிறது. சிலவேளை கணக்கில் புலி என்றால் பிறகு 'புலி முத்திரை' குத்திவிடுவார்களோ என்று பயந்துதான் இப்படி நடிக்கின்றார்களோ தெரியாது.

Monday, January 23, 2006

கனடா தேர்தல் (2006) முடிவுகள்

நினைத்ததுமாதிரி, கருத்துக்கணிப்புக்களை புரட்டிப்போடாது, கொன்சர்வேடியினர் வென்றிருக்கின்றனர். எனினும், பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாது, சிறுபான்மை அரசாக கொன்சர்வேடியினர் ஆட்சியமைப்பது ஆறுதலாக இருக்கிறது. இல்லாவிட்டால் தாங்கள் நினைத்ததுமாதிரி, எல்லா வலதுசாரி கொள்கைகளை அனைவருக்குள்ளும் திணித்திருப்பார்கள் (samesex marriage, abortion போன்றவற்றிற்கு எப்படியெனினும் பாராளுமன்றத்துக்கு billsகொண்டுவரத்தான் முயல்வார்கள்)

கொன்சர்வேர்டி - 124
லிபரல் - 104
ப்ளாக் க்யூபெக்- 50
என்.டி.பி- 29
சுயேட்சை- 01

(ஒரு தொகுதி முடிவு, சில தொழில்நுட்பக் காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை)

நான் இருக்கும் தொகுதியில் லிபரல் கட்சியில் போட்டியிட்டவர் வென்றுள்ளார். கொன்சர்வேட்டிக்கட்சியில் தேர்தல் கேட்ட, தமிழர் இரண்டாவதாய் வந்துள்ளார்.

Thursday, January 19, 2006

Election in Canada - 2006

கனடாத் தேர்தலும் சில (தனிப்பட்ட) எண்ணங்களும்

அனேகமாய் கொன்சவேர்ட்டிக் கட்சி இந்தமுறை வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. ஈழம், இந்தியா போன்றல்லாது, இங்கு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களை முற்றாக புரட்டிப் போடுகின்றவிதமாய் வேறுவிதமான் முடிவுகள் தேர்தல் காலத்தில் கனடாவில் (எனக்குத் தெரிந்தளவில்) வரவில்லையாதலால், ரொயினரை(Tories) இருகரம் கூப்பி வரவேற்கவேண்டியதுதான். எனினும் கொன்சர்வேடியின் சில கொள்கைகள்தான் பயமுறுத்துகின்றன. அந்தக்கட்சியில் இயல்பாய் வெளிப்படுகின்ற இனத்துவேசத்தைவிட, ஈராக்கிற்கு கனடீயப்படைகளை அனுப்பவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றமை, ஒர்பால் திருமண முறையை எதிர்த்தமை, இப்போது Space Missile Projectற்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போகின்றோம் என்றது (ஆட்சியில் இருக்கும் லிபரல் பல்வேறு தடைகளுக்குமிடையில் இந்த ப்ரொஜக்டை ஏற்காது இருப்பதும், இதன் நிமிர்த்தத்தில் ஏற்பட்ட சச்சரவில் அமெரிக்கா வெளிவிவகாரச் செயலாளர் Condoleezza Rice கனடாவிற்கான பயணம் இடைநிறுத்தப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை), ஆயிரக்கணக்கில் படைகளைச் சேர்ந்து இராணுவ இயந்திரத்திரத்தை வலுவாக்குவதாய் பிரகடனப்படுத்துவது..... இப்படி கொன்சர்வேடியினர் பலவிதங்களில் பயமுறுத்துகின்றார்கள்.

ஆக இவர்கள் இன்னொரு அமெரிக்காவாய் கனடாவை ஆக்கப்போகின்றார்களோ என்ற அச்சமும், Stepen Harper, ஜோர்ஜ் புஷ் போல இன்னொரு சனாதனவாதியாக இலகுவில் ஆகிவிடவும்கூடிய அடையாளங்கள் துலங்குகின்றன. கொன்சர்வேடிக் கட்சியினரைத் தொடர்ந்து அவதானிக்கும் ஒருவருக்கு, இந்தக்கட்சி கனடாவுக்குரிய தனித்துவங்களை இழக்கச்செய்து, கனடாவை அமெரிக்காவின் அனைத்துக்கொள்கைகளுடனும் கேள்விகள் இல்லாது இணைத்துக்கொள்ள விரும்புகின்ற கட்சி என்பதை இலகுவாய் புரிந்துகொள்ளுவார்கள்.

7% GST வரியை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லாமற்செய்வோம் என்று உற்சாக உறுதிமொழியை கொன்சவேடியினர் அளித்தாலும், பட்ஜெட்டில் இதை நிவர்த்தி செய்ய, Helath Care, Education போன்றவற்றில்தான் கையை வைக்கப்போகின்றார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தொடர்ந்து பன்னிரண்டு வருடமாய் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியினரில் மக்கள் நம்பிக்கை இழக்க, sponsorship scandal, மற்றும் பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படமுன்னர் வெளியே இரகசியமாய்க் கசிந்தமை போன்றவை முக்கிய காரணங்களாகும். தொலைக்காட்சி விவாதங்களில் தமது கட்சியின் கொள்கைகளையும் தம்மையும் நிரூபிக்கவேண்டிய லிபரல் கட்சியினர் அதைத் தவறவிட்டமை லிபரலின் வாக்குகள் கணிசமாய் சரிந்தமைக்கு இன்னொரு முக்கிய காரணம். விவாதங்களின்போது கொன்சர்வேட்டிக் கட்சித் தலைவர் Stepen Harper, லிபரல் கட்சித் தலைவர் போல் மார்ட்டினைப் போல கோபமும் சலிப்பும் காட்டாது, சிரித்த முகத்துடன் எல்லாக் கேள்விகளை எதிர்கொண்டவிதமும், NDP கட்சியினரின் லிபரல் மீதான கடுமையான விமர்சனமும் லிபரலுக்கு பிரதிகூலங்களாக அமைந்துவிட்டன.

கன்டாவிலுள்ள தமிழ்மக்கள் பெரும்பான்மையாக லிபரல் கட்சியினருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். என்டிபி கட்சியினருக்கு வாக்களிக்க விரும்பியிருந்தாலும், கொன்சர்வேடிக் கட்சி வென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் லிபரல் கட்சியினருக்கு வாக்களித்து இருக்கலாம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமில்லை, பொதுவாய் இங்குள்ள பல சிறுபான்மை சமூகங்கள் இப்படியான நிலையில்தான் லிபரலுக்கு வாக்களிக்கின்றனர் எனத்தான் ஆய்வுகளும் கூறுகின்றன். இறுதியாய் நடந்த மூன்று தேர்தலிகளிலும், ரொரண்டோ பெரும்பாகத்தை உள்ளக்கிய ஒன்ராறியோ மாகாணத்தில் கொன்சவேடியினர் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்தமுறை சிறுபான்மையின சமூகங்களும் லிபரல் கட்சியினரைக் கைவிட்டதுதான் மிகவும் பரிதாபம். என்டிபினர், அடித்தள, நடுத்தர, சிறுபான்மையின மக்கள் மீது கொண்ட அக்கறையுடன், ஈழத்தில் சமாதானம் நிலவவேண்டும் என்பதற்காய் ஏனைய கட்சிகளை போலல்லாது தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவ்ர்கள். பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகளில் என்டிபி கட்சித் தலைவர் பங்குபற்றி உரையாற்றியவர் என்பதைவிட, தொடர்ந்து ஈழமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் போன்றவற்றில் ஏனைய கட்சிகள் பங்குபெறத் தயக்கம் காட்டும்போது, கலந்து கொண்டவர்கள் என்டிபியினர் என்பது கவனதில் கொள்ளப்படக்கூடியது. Child Care, Helath Care, Education, Senior Care போன்றவற்றிற்கு, முன்வைக்கும் என்டிபியின் தேர்தல் வாக்குறுதிகள் அடித்தள, நடுத்தர மக்கள் வாழ்வின் சுட்டெண்பண்பை அதிகரிக்கச் செய்வன.

இந்தத் தேர்தலில் முதன்முதலாய் தமிழர்களின் பங்களிப்பும் இருக்கின்றது என்பது மகிழ்ச்சிதரக்கூடியது. நான் வசிக்கின்ற தொகுதியில் போட்டியிடுபவர்களில் ஒருவரில் தமிழரும் இருக்கின்றார் (தமிழில் உரையாற்றத்தயங்குபவர், ஆங்கிலத்தில் தமிழ்ப் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்குபவர், வாக்குக் கேட்கும்போது 'நான் தமிழ்ன் எனக்கு வாக்குப் போடுங்கள்' என்பது ஒருபுறம் உதைப்பது வேறுவிடயம்). ஏற்கனவே கூறியதுமாதிரி, கொன்சர்வேடிக்கட்சியின் கொள்கைகள் பலதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழர் என்ற அடையாளம் பல சமயங்களில் தேவை என்றாலும், தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்கின்றார் என்ற காரணத்துக்காய் கண்ணை மூடிக்கொண்டு அவருக்கு வாக்களிக்கமுடியாது. மேலும் தமிழ்ச் சமுகத்தில் அவரின் பங்களிப்பு என்னவென்ற வினாவும் இருக்கின்றது (ட்சுனாமியில் தன் பங்கு இருப்பதாய் அந்த வேட்பாளர் கூறினாலும், ட்சுனாமி போன்ற பெரும் அழிவில் அனைவரின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதைப் பெரிதாக எடுக்கமுடியவில்லை.)

It's time to change என்று கனடீயர்களுக்கு விளங்கினாலும், அந்த மாற்றம் கனடாவின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நம்பிக்கை தரும், என்டிபியினரை நோக்கி ஆதரவு அலையாக அடிக்காது கொன்சர்வேடியினரை நோக்கி வீசுவதுதான் ஆபத்தானதும், அவலமானதும் ஆகும்.

(கனடாப் பாராளுமன்றத் தேர்தல் வரும் திங்கட்கிழமை (சனவரி 23) நடைபெறவுள்ளது. இந்த வார வைகறையில் வெளிவந்தது, சில திருத்தங்களுடன் இங்கே)

Thursday, January 05, 2006

நான் போனபோது....(எமினெம்)

நான் கேட்கின்ற ராப் பாடல்களில் பாடல்வரிகளால் என்னை அதிகம் கவர்ந்துகொண்டிருப்பவர்கள், Eminemமும், Kanye Westம். ஒவ்வொரு பாடல்களிலும் கதைசொல்லும் முறைமை அவர்களின் அதிக பாடல்களில் இருக்கும், அதுபோல் எள்ளலும்கூடத்தான். எமினெமின் பாடல்கள் குறித்தும் இன்னபிற அவரது விடயங்கள் குறித்தும் ஒரு பதிவு எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப் பாடலை(கீழே பார்க்க) மொழிபெயர்க்கும் ஆசை துளிர்த்தது. அண்மையில் வெளிவந்த எமினெமின், Curtain Calls - The Hits என்ற இசைத்தட்டை வெளிவந்த அடுத்தநாளே வாங்குவதற்கு, இந்தப்பாடல் மட்டுமே முக்கிய காரணமாயிருந்தது. மொழிபெயர்த்து, ஆறப்போட்டு, திருத்தங்கள் செய்தும், இன்னும் இதில் திருப்தி வரவில்லை. இனியும் இதில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவுக்கு வந்தபின்னே இங்கே பதிவிலிடுக்கின்றேன் :-(. நண்பர்கள் அனைவரின் திருத்தங்களும், குட்டுக்களும் வர்வேற்கப்படுகின்றன.

நான் போனபோது....

ஓம்....
இது எனது வாழ்க்கை
நான் நினைக்கின்றேன், எனது சொந்த வார்த்தைகள்

எப்போதாவது நீங்கள் ஆழமாய் நேசித்தவருக்கு உங்கள் கரங்களை நீட்டியிருக்கின்றீர்களா?
பாவனைகளாய் அல்ல, இல்லை.
உண்மையாகவே கரத்தைக்கொடுத்தீர்களா?

உங்கள் இதயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள் என்று தெரியும்போது,
உங்களுக்குத் தெரியும்
நீங்கள் அவர்களின் காவலர் என்றும்
அவர்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் அழிப்பீர்கள் என்றும்.

ஆனால் என்ன நடக்கும்?
வினை உங்களுக்கெதிராய்த் திரும்பி கடித்துக் குதறும்போதும்,
எதற்காய் எழுந்து நின்றீர்களோ அவையே உங்களை அவமானப்படுத்தும்போதும்.
என்ன நடக்கும்,
நீங்களே (அவர்களின்) வேதனைகளின் மூலமாய் மாறும்போது...

'அப்பா, (இங்கே) பாருங்கள், நான் என்ன செய்தேன் என்று.
அப்பா விமானத்தைப் பிடிக்கப் போகவேண்டும்
'அப்பா, அம்மா எங்கே? என்னால் கண்டுபிடிக்கமுடியாதுள்ளது, எங்கே அவர்?'
எனக்குத் தெரியாது, போய் விளையாடுங்கள் கெயிலி.
குழந்தாய், அப்பா பிஸி.
அப்பா இந்தப்பாடலை எழுதிக்கொண்டிருகின்றார், பாடல் தன்பாட்டில் தன்னை எழுதிக்கொள்ளாது.
நான் ஒருமுறை உங்களை ஆட்டிவிடுகின்றேன், பிறகு நீங்கள் உங்கள்பாட்டில் ஊஞ்சல் ஆடவேண்டும்

பிறகு அதிலிருந்து மீண்டு, எனது பாடலில் கூறுகின்றேன்
அவளை(கெயிலியை) நேசிப்பதாய்,
கெயிலியைச் சிதைத்த அவரின் அம்மாவின் கரங்களைப் பற்றியபடி.

இது ஸிலிம் ஷேடி, ஓம் குழந்தாய், ஸிலிம் ஷேடியின் பைத்தியம்
ஷேடி என்னை உருவாக்கினார், ஆனால் இன்றிரவு ஷேடி பாடப்போகின்றார்

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


நான் இந்தக்கனவை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றேன்
நான் கெயிலியை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கின்றேன்
அவள் அலறுகிறாள், அவள் நான் பாடுவதை விரும்புவதில்லை.
'நீங்கள் அம்மாவை அழவைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன்? ஏன் அம்மா அழுகின்றார்?'
குழந்தாய் அப்பா இனி உங்களைவிட்டுப்போகமாட்டார். 'அப்பா நீங்கள் பொய் கூறகின்றீர்கள்'
'நீங்கள் எப்போதும் இதையே சொல்லுவியள்; போன தடவையும் இதைத்தான் சொன்னனியள்'
'ஆனால் எங்களை விலத்திப்போகாதீர்கள்; அப்பா நீங்கள் எனக்குரியவர்'.
கடதாசிப் பெட்டிகளை முன்வாசலில் அடுக்கித் தடுக்கிறாள் அவள்
'அப்பா ப்ஸீஸ், போகவேண்டாம். இல்லை, போவதை நிறுத்துங்கள்.'

தனது பொக்கெட்டிலிருந்து சிறிய நெக்லஸ் லொக்கரை எடுக்கிறாள்
இதில் (எனது)படம் உள்ளது, 'இது உங்களைப் பாதுகாக்கும். உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்!'

நான் நிமிர்ந்து பார்க்கின்றேன்
கண்ணாடியின் முன்நின்று என்னைப் பார்க்கின்றேன்
இந்தச் சவச்சுவர்கள் பேசிக்கொண்டுதானிருக்கின்றன. எனெனில் என்னால் அவை பேசுவதைக் கேட்கமுடியும்.
சுவர்கள் கூறுகின்றன, நீ சரியாகச் செய்வதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் மட்டுமே உள்ளது, அது இன்றைய இரவு.
கால தாமதமாவதற்குள், இப்போது வெளியே போய் அவர்களுக்கு உனது நேசத்தைக் காட்டு.
நான் எனது படுக்கையிலிருந்து வெளியே நடக்க
அது ஒரு மேடையாக மாறுகிறது; 'அவர்கள்' போய்விட்டார்கள்.
வெளிச்சவிளக்குகள் ஒளிர்கின்றன; நான் பாடிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


அறுபதினாயிரம் மக்கள், எல்லோரும் தங்கள் இருக்கையிலிருந்து எழும்பிக் குதித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
திரை மூடுகின்றது, அவர்கள் எனது பாதங்களில் ரோசாப்பூக்களை எறிகின்றார்கள்.
நான் அவர்களை வணங்கி, வந்தற்காய் நன்றி கூறுகின்றேன்
அவர்கள் பெருங்குரலில் அலறுகின்றார்கள், நான் இறுதியாய் ஒரு பார்வையைச் சனத்துக்குள் எறிகின்றேன்.
கீழே பார்க்கின்றேன். நான் பார்ப்பதை என்னால் நம்ப்முடியவில்லை.

'அப்பா, இது நான். அம்மாவுக்கு உதவுங்கள். அவரது கரங்களில் இரத்தம் பெருகுகின்றது.'
ஆனால், குழ்ந்தாய் நாங்கள் ஸ்வீடனில் இருக்கின்றோம்; எப்படி ஸ்வீடன் வந்தீர்கள்?
நான் உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன் அப்பா; நீங்கள் கூறினீர்கள், எங்களை விட்டு விலகிப்போக மாட்டீர்கள் என்று.
நீங்கள் பொய் சொன்னீர்கள் அப்பா; இப்போது அம்மாவைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்'
நான் உங்களுக்காய் இந்த நாணயத்தை வாங்கிவந்தேன்.
அது சொல்கிறது; 'உலகத்திலேயே சிறந்த அப்பா நீங்கள்தான் என்று'
அதை மட்டுமே நான் விரும்பியது,உங்களுக்கு இந்த நாணயத்தை நான் கொடுக்க விரும்பினேன்.
இப்போது அனைத்தும் விளங்குகிறது. நல்லது. நானும் அம்மாவும் (உங்களை விட்டுப்) போகின்றோம்.
குழ்ந்தாய் சற்றுப் பொறு. 'காலம் கடந்துவிட்டது அப்பா, நீங்களே உங்கள் முடிவைத் தேர்வு செய்தீர்கள். '
இப்போது வெளியே போய் அவர்களுக்குக் காட்டுங்கள், எங்களை விட அவர்களை அதிகம் நேசிக்கின்றீர்கள் என்று.
அதுதான் அவர்களுக்கு வேண்டியது. அவர்களுக்குத் தேவை மார்ஷல்.
அவர்கள் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கின்றார்கள் .

இது பெரிய அதிசயமில்லை, என்னால் இனி தூங்கமுடியாது, இன்னொரு குளிசையை எடுக்கவேண்டியதுதான்.
ஓம். நீ நிச்சயம் இப்படித்தான் இருப்பாய். நீ ராப் பாடுவாய். நிஜமான வார்த்தை.

எனக்கு கைதட்டல்கள் கேட்கிறது. ஆனாலதைப் பார்க்கமுடியாதிருக்கிறது.
எப்படி இது சாத்தியம்?? திரை என்னில் விழுந்துகொண்டிருக்கின்றது.
நான் (இயல்புக்கு) திரும்புகின்றேன். நிலத்தில் துவக்கொன்றைக் காண்கின்றேன், லோட் பண்ணுகின்றேன்
எனது மூளையில் அதை குறிவைத்து கத்துகின்றேன்; 'ஷேடி நீ சா', பிறகு வெடிக்க வைக்கின்றேன்.

வானம் கருமையாகிறது, எனது வாழ்வு ஒளிர்கிறது.
நான் செல்லவெண்டிய விமானம் விபத்தில் சிக்கி எரிகிறது, சாம்பலாகும்வரை.
(இது நிகழ்ந்து) நான் விழிக்கையில், அலாரம் அலறுகிறது, பறவைகள் பாடுகின்றன.
இது ஒரு இலைதுளிர் காலம். கெயிலி ஊஞ்சல் ஆடுகின்றாள்.
நான் கிம்மிடம் நேரே நடந்து சென்று முத்தமிட்டு அவளை மிஸ் பண்ணினதாக கூறுகின்றேன்.
கெயிலி புன்னகைத்து தனது தங்கையை நோக்கி கண்களைச் சிமிட்டுக்கிறாள்.
Almost as if to say.....

நான் போகின்றபோது, வருந்தாதே, தொடர்ந்து செல்
எனது குரலைக்கேட்கும் ஒவ்வொருபொழுதும் மகிழச்செய்
அறிக; நான் உனது புன்னகையைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றேன்
நான் எதனையும் உணரவில்லை, ஆகவே குழந்தாய் எந்த வேதனையையும் அடையாதே.
என்னைப் பார்த்து (எப்போதும்) புன்னைகை!


மொழிபெயர்த்த மூலப்பாடல்